கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா என்ற வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகக் கேரளா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பத்து பேருக்கும் அதிகமாக இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி இருப்பதாகத் தெரிகிறது. இறப்பு விகிதம் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வைரஸ் கிருமி வௌவால்களாலும், பன்றிகளாலுமே பெரிய அளவுக்குப் பரவுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புனேவில் இயங்கிவரும் தேசிய வைரஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனம்(National Virus Institute), கேரளாவில் இந்த நோய் பரவலுக்கு காரணம் நிபா வைரஸ் தான் என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கேரள அரசுக்கு உதவ மத்திய சுகாதார அமைச்சகம் மருத்துவ குழுவை உடனடியாக அனுப்பி வைத்துள்ளது.
நிபா வைரஸ் தொடர்பாக மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நிபா வைரஸ் என்றால் என்ன?
நிபா வைரஸ் நோய் தொற்று என்பது புதிதாக வளர்ந்து வரும் ஜூனோசிஸ்(Zoonosis) வகைமையைச் சேர்ந்ததாகும். ஜூனோசிஸ் என்பது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய் தோற்று ஆகும். இந்தத் தொற்றின் காரணமாக விலங்குகளும், மனிதர்களும் கடுமையான நோய் தொற்றுக்கு உள்ளாவார்கள். பழந்திண்ணி வௌவால்களிடம் இருந்தே பெரும்பாலும் இந்த வைரஸ் பரவுகிறது.
முதலில் பரவியது எப்போது?
1998 ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த நோய் தொற்று மலேசியாவில் அடையாளம் காணப்பட்டு இருக்கிறது, பன்றிகளில் இருந்து இந்த நோய் தொற்று மனிதர்களுக்குப் பரவி இருக்கிறது. பிறகு பனைமர கள்ளில் இருந்தும் மனிதர்களுக்குப் பரவி இருக்கிறது. நோய் தொற்று பாதிக்கப்பட்ட வௌவால்களால் அசுத்தம் செய்யப்பட்ட கள்ளை மனிதர்கள் அருந்திய போது, வைரஸ் பரவியது.
மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவிய நிகழ்வுகளும் நடந்தேறி இருக்கின்றன.
எப்படிப் பரவுகிறது
பொதுவாக விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கோ, மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கோ அல்லது ஒரு இனத்திடம்(species) இருந்து இன்னொரு இனத்திற்கோ நோய் பரவாமல் இருக்க இயற்கையிலேயே தடுப்பு பொறிமுறை(species barriers) ஒவ்வொரு உயிர் இனங்களிடமும் பிறப்பிலேயே இருக்கும். ஆனால் நிபா வைரஸ் தாக்கியதும் அந்த இயற்கையான தடுப்பு பொறிமுறையை அழித்துவிடும். ஆகையால் ஒரு இனத்திடம் இருந்து இன்னொரு நோய்கள் பரவ தொடங்கும். இவ்வாறு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவுகின்றது.
வௌவால்கள், பன்றிகளிடம் இருந்தே இந்த நோய் பரவுகின்றது. நிலத்தில் விழுந்து கிடைக்கும் பழங்களைத் தின்னாமல் இருப்பதே இதைத் தடுக்கும் வழிமுறை ஆகும்.
நோய் தாக்கியதற்கான அறிகுறிகள்
லேசான காய்ச்சலுடன் இதன் அறிகுறிகள் தொடங்குகின்றன. பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடின தலைவலி ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறுகிறது. இந்த நோயின் அதிகபட்ச விளைவாக கோமா ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.
நோய்க்கான சிகிச்சை
இதுவரை இந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து கண்காணிப்பது ஒன்றே இப்போதைக்குப் பின்பற்றப்படுகிறது.
நோய் தடுப்பு நடவடிக்கைகள்
1 ) பனைமரத்து கள் குடிக்காதிருத்தல்
2 ) பன்றி மற்றும் வௌவால்களிடம் இருந்து விலகி இருத்தல்
3 ) நிலத்தில் கிடக்கும் பழங்களைத் தின்னாதிருத்தல்
Be the first to comment on "நிபா வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் 10 பேர் பலி – நிபா வைரஸ் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை …"