நியூட்ரினோ : புதிரா? அறிவியலா?

nutrino

பேய் படங்கள் நிறையப் பார்த்தவர்களுக்கு இது எளிதில் புரியும். மர கதவோ அல்லது வீட்டுச் சுவர்களோ எதுவாக இருந்தாலும் அந்தப் பேய் தடையே இன்றி, மிக எளிதில் ஊடுருவிச் சென்று விடும். பார்ப்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், நம்மில் பெரும்பாலானவர்கள் ரசிக்கும் காட்சி அது. உண்மையில் மனிதர்களுக்கு அப்படியொரு சக்தி வாய்க்கப்பெற்றால் எப்படி இருக்கும்? நமக்கு அப்படியொரு சக்தி வாய்க்கப்பட்டிருக்கிறதோ, இல்லையோ, சூரியனிலிருந்து வெளிவரும் ஒரு துகளுக்கு அந்தச் சக்தி வாய்க்கப்பட்டிருக்கிறது. அந்தத் துகளின் பெயர் நியூட்ரினோ.

எதையும் ஊடுருவிச் செல்லும்

நியூட்ரினோவுக்கு எதுவும் தடையில்லை. எதுவும் நியூட்ரினோவை தடுக்கவும் முடியாது. பாறை, காற்று, தண்ணீர், ஏன் மனித உடலைக் கூட நியூட்ரினோ  ஊடுருவிச் செல்லும். அப்படியென்றால் நியூட்ரினோ என்னையும் ஊடுருவிச் செல்லுமா என்று கேட்கிறீர்களா? நீங்கள் பட்டப்பகலில் இந்தக் கட்டுரையை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், ஒரு சின்ன பரிசோதனை. வெற்றி குறி போல, உங்கள் கட்டை விரலைக் கொஞ்சம் உயர்த்திக் காட்டுங்கள். நம்புங்கள் நண்பரே, உங்கள் கட்டை விரல் நகம் வழியாக ஒரு வினாடிக்கு  6500  கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் சென்று கொண்டிருக்கின்றன.

நியூட்ரினோ என்றால் என்ன?

சூரியனில் இருந்தும், பிரபஞ்சத்தின் மற்ற விண்மீன்களில் இருந்தும்  வெளிப்படும் மிக நுண்ணிய துகளே நியூட்ரினோ எனப்படும். இதன் தனித்தன்மை என்பது தனக்கு எதிரே இருக்கும் எந்த ஒரு பொருளையும் தொடர்ந்து ஊடுருவிச் சென்று கொண்டே இருப்பது. நியூட்ரினோ மிக மிக நுண்ணியது. எந்த அளவுக்கு நுண்ணியது என்றால், ஒரு மில்லிகிராமில் கிட்டத்தட்டக் கோடி கணக்கிலான நியூட்ரினோக்கள் இடம்பெற்றிருக்கும் அளவுக்கு. இதுவரை அறிவியலாளர்களின் கண்டுபிடித்தவற்றிலேயே மிகக் குறைந்த எடையைக் கொண்டதாக நியூட்ரினோ அமைந்துள்ளது. ஒளிக்கு நிகரான வேகத்தில் பயணிக்கக்கூடியது நியூட்ரினோ. எளிமையாக இப்படிப் புரிந்துகொள்ளலாம். உங்களுக்கு நேரெதிரே ஒரு பெரிய பாறை இருக்கிறது. அந்தப் பாறையின் மீது உங்கள் கைப்பேசி டார்ச் வெளிச்சத்தைப் பாறையின் மீது காட்டுகிறீர்கள். அந்த வெளிச்சம் பாறையில் படம், ஆனால் ஊடுருவிச் செல்லாது. ஆனால் சூரியனில் இருந்து வெளிப்படும் நியூட்ரினோ பாறையை மட்டுமல்ல, எதையும் ஊடுருவிச் செல்லும்.

பூமியின் எக்ஸ்ரே

ஒட்டுமொத்த பூமியையும் நியூட்ரினோக்கள் எக்ஸ்ரே எடுக்கின்றன. ஒரு நொடிக்குக் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் பூமியை குறுக்கும், நெடுக்குமாக ஊடுருவிச் சென்றுகொண்டேயிருக்கின்றன.

நியூட்ரினோ ஆய்வின் சவால்கள்

நியூட்ரினோ ஆய்வில் நிறையச் சவால்களை அறிவியலாளர்கள் எதிர்கொள்கின்றனர். அவற்றில் முதன்மையானது அதன் ஊடுருவிச் செல்லும் தன்மை. அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையே, ஒரு பொருளை இன்னொரு பொருளின் மீது செலுத்தி, அதன் எதிர்வினையைப் பதிவு செய்து, அதன்மூலம் மனிதக் குலத்திற்கு பயன்தரும் கண்டுபிடிப்புகளை உருவாக்குவது. ஆனால் நியூட்ரினோக்கள் எதன்மீதும் ஊடுருவும் தன்மை கொண்டிருப்பதால், அதை ஆராய்வதில் நிறையவே சவால்கள் உண்டு. இதனாலேயே அறிவியலாளர்கள் மத்தியில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு அதிகளவில் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டியுள்ளன.

இரண்டாவதாகப் பூமியின் மேற்பரப்பில் இருக்கும் காஸ்மிக் கதிர்கள். நியூட்ரினோ துகள்களை எப்படியாவது பதிவுசெய்து, அதன் எதிர்வினையை ஆராயும் போது, அதன் முடிவுகள் பல சமயங்களில் காஸ்மிக் கதிர்களுடையதாக இருக்கிறது. இதனால் அறிவியலாளர்கள், காஸ்மிக் கதிர்வீச்சு இல்லாத இடங்களிலேயே நியூட்ரினோ ஆய்வு மையத்தை உருவாக்கும் எண்ணத்திற்கு வந்தனர்.

நியூட்ரினோ கடந்துவந்த பாதை

1956 ஆண்டு பெடரிக் ரெய்னஸ் என்ற அறிவியலாளர், நியூட்ரினோ துகள்கள் இருப்பதைத் தனது கண்டுபிடிப்பின் மூலம் உலகுக்கு நிரூபித்தார். இதன் காரணமாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.அதன் பிறகு நியூட்ரினோ ஆய்வில் பெரிய அளவுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.

காஸ்மிக் கதிர்வீச்சின் பாதிப்பு இல்லாத இடங்களாகப் பார்த்து நியூட்ரினோ ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகில் தங்களை வல்லரசாக நிலை நிறுத்திக்கொள்ள விரும்பும் நாடுகள் நியூட்ரினோ ஆய்வை முன்னெடுத்துச் செல்கின்றன. 1958 ஆம் ஆண்டு ஜப்பான் அரசு 1000 மீட்டர் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சி மையத்தை நிறுவினார்கள். அன்டார்டிகா பனி பிரதேசத்தில் 2000 மீட்டர் ஆழத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை நிறுவியுள்ளது அமெரிக்க அரசு. கனடா 2000 மீட்டர் ஆழத்திலும், பிரான்ஸ் 2500 மீட்டர் ஆழத்திலும் தங்கள் நியூட்ரினோ ஆய்வு மையத்தை நிறுவியுள்ளன.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம்

தேனியில் ஆய்வு மையம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே, கோலார் தங்கச் சுரங்கத்தில் 2500 மீட்டர் ஆழத்தில் நியூட்ரினோ ஆய்வை இந்திய அரசாங்கம் மேற்கொண்டது. 1992 ஆம் ஆண்டு தங்க சுரங்கம் மூடப்பட்ட உடன், இந்தத் திட்டமும் கைவிடப்பட்டது.

அதன்பிறகு தேனி மாவட்டம் , தேவாரம் பகுதிக்கு அருகேயுள்ள பொட்டிபுரம் என்ற கிராமத்துக்கு அருகே அமைந்துள்ள மலைப்பகுதியில் தான் இந்த ஆய்வகம் 2.5 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைய உள்ளது. நியூட்ரினோக்கள் இங்கிருந்து உலகின் வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டும், வேறு பகுதிகளில் இருந்து இங்கு அனுப்பப்பட்டும் ஆய்வுகள் மேற்கொள்ளப் படவிருக்கின்றன.

எதற்கு இந்தச் சோதனை அல்லது ஆய்வு

எதற்காகச் சூரியனில் இருந்து வெளிப்படும், அனைத்துப் பொருட்களையும் ஊடுருவிச் செல்லும் ஒரு துகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்? இதற்கான தெளிவான பதில் நிச்சயம் இல்லை. அறிவியல் என்பதே அனுமானங்களை ஆராய்ந்து பார்ப்பது என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நியூட்ரினோ என்ற துகள் இருப்பது கண்டறியப்பட்டவுடன், அது மனித சமுதாயத்திற்கு ஏதாவது பலனளிக்குமா என்று ஆராயப்படுகிறது. ஒருவேளை, ஊடுருவிச் செல்லும் இந்தத் தன்மையை ஒரு தொழில்நுட்பமாக மாற்ற முடியும் பட்சத்தில், கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்கள் இவ்வுலகில் நிகழும்.

என்னென்ன பாதிப்புகள்

மேற்குத்தொடர்ச்சி மலைகள் தான் பெரும்பாலான நீர் ஆதாரங்களுக்கு அடிப்படை. 2.5 கிலோ மீட்டர் ஆழத்துக்குக் குழி தோண்டும் பட்சத்தில் அது பெருமளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். குழி தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடி பொருட்கள், மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருக்கும் பறவைகளுக்கு, நுண்ணுயிர்களுக்கு, இன்னும் பல உயிரினங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மேலும் இந்தத் திட்டம் குறித்த முழு விவரங்களும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. விவசாய நிலம் பறிபோகுமா என்ற அச்சமும், நீர் ஆதாரங்கள் வறண்டு போகுமோ என்ற அச்சமும் பெரிய அளவுக்கு அங்கே வாழும் மக்களிடையே நிலவுகிறது. அதைக் களையும் கடமை அரசாங்கத்திற்கு உள்ளது.

அவசியம் தானா இந்தத் திட்டம்

இன்னும் முறையான சாலைகளோ, கழிப்பறைகளோ, ஏன் மின்சாரமோ கூட இல்லாத ஒரு தேசத்தில், 1450 கோடி ஒதுக்கி இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுவது அவசியம் தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இன்னமும் நாம் கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை பக்கெட் வைத்து அள்ளிக்கொண்டிருப்பவர்கள் தானே?

Related Articles

நீரஜ் சோப்ரா என்ன சாதி என்று தெரிந்துகொண... நீரஜ் சோப்ரா - இனி இந்தப் பெயரை நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கப் போவதில்லை. 2021ம் ஆண்டிற்கான... இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்த டோக்கியோ ஒலிம்பிக் ...
ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட சிஎஸ்கே ரசிகர... ஐபிஎல் தொடர் 11வது சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கான போட்டியின் போது, ஆட்டம் தொடங்கிய சில நிமிடங...
எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்க... தின இந்து நாளிதழலில் தொடராக வந்த கடவுளின் நாக்கு கதைகளின் தாயகம், மனிதன் நல்லவனா?, அன்பின் அடையாளம், காட்டின் அரசன்!,சிலந்திப் பெண்!, கண் திறவுங்கள், ...
தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்... ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொண்ணூற்று ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சரியாக நூறாவது நாள் வரும் போது எந்த முன் அறிவிப்பும் இன்றி, சரியான...

Be the first to comment on "நியூட்ரினோ : புதிரா? அறிவியலா?"

Leave a comment

Your email address will not be published.


*