2018ல் ஜனவரி மாதமே இப்படி என்றால் மார்ச் முதல் மே மாதங்களில்? – தமிழகத்தின் அவல நிலை!

tamilnadu

தமிழக அரசு போக்குவரத்துகழக ஊழியர்கள் போராட்டம், ஆண்டாள் குறித்த வைரமுத்து பேச்சு
சர்ச்சைக்குள்ளானதால் இந்து மதத்தினர் போராட்டம், சூர்யாவின் உயரத்தைக் கிண்டல்
செய்ததால் சன் டிவி அலுவலகம் முன்பு சூர்யா ரசிகர்கள் போராட்டம், திரூப்பூரைச் சார்ந்த
மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் அதற்கான போராட்டம், டக்வால்க்
தண்டனையால் மயங்கி உயிரிழந்த மாணவருக்கான போராட்டம், தங்களின் பத்து அம்ச
கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று ஜாக்டா – ஜியோ குழுவின் போராட்டம் என்று
இந்த ஆண்டின் முதல் மாதமே போராட்டத்துக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக இருக்கிறது.

அடுத்தது பிப்ரவரி 24-ல் மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருவதால்
மாவட்டந்தோறும் பிரம்மாண்ட பொருட்செலவில் விழா நடக்கலாம். பிளவு பட்டிருக்கும் கட்சி
உறவினர்கள் அப்பல்லோ விவகாரத்தை வைத்து காலம் தள்ளிக்கொண்டு சுச்சுலீக்ஸை மிஞ்சும்
வகையில்,  அவ்வப்போது அப்பல்லோ வீடியோவை வெளியிட்டு களேபரம் செய்வார்கள்
என்பதால் பிப்ரவரியிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஏன் “மார்ச் முதல் மே” வரையிலான காலகட்டம் மக்கள் மனதை பதற வைக்கும்?

காரணம், இந்த மாதங்களுக்குள் தான் பத்தாம் வகுப்பு, பதினோறாம் வகுப்பு, பண்ணிரண்டாம்
வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்க இருக்கிறது. இந்த மூன்று வகுப்புகளுக்கும் நடக்க இருக்கும்
பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை கடந்த வருட கல்வியாண்டின் தொடக்கத்திலயே
வெளியிடப்பட்டிருந்தது.

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு?

அதன்படி பதினோறாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு என்பது இந்த வருடம் தான் முதல் முறை.
இந்த முடிவுகள் எல்லாம் உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களின் தலைமையால் எடுக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு  ஆசிரியர்களுக்கே புதியதாகவும் புரியாததாகவும் இருந்தது. அதனால்
ஆசிரியர்களுக்கு முதலில் புரியும்படி செயல்முறை விளக்கங்களும், பாடத்திட்டமும், வினா வங்கி
குறிப்புகளும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் அவர்கள் வழங்கிய வினா-வங்கி
மாதிரிகளில் பல குறைகள் இருப்பதாகவும், சரியான விளக்கங்கள் இல்லையென்றும் ஆசிரியர்கள் குறைகூறி வந்தனர். இப்போது தேர்வுக்காலம் நெருங்கிவிட்டது.

“11-ஆம் வகுப்புக்கு அரசு அறிவித்துள்ள அரசு பொது தேர்வை நீக்க வேண்டும். ஏனென்றால்
மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாணவர்கள் மனஉழைச்சலுக்கு உள்ளாகின்றனர் அரசு 11-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்!மாணவர்களே, இளைஞர்களே 11-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யும் ஷேர் செய்யுங்கள்! ”

என்று இப்போது பலர் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்ப தொடங்கிவிட்டனர்.
பள்ளிக்கல்வித்துறையின் சரியான திட்டமிடல் இல்லாததே மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்குமான பயத்தை உண்டாக்கியது என்றும் கருத்துக்கள் எழுந்து வருகிறது.

பத்தாம் வகுப்பு, பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்?

இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த
கல்வியாண்டு மாணவர்களுக்கு கடும் நெருக்கடியாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. காரணம், காலாண்டு, அரையாண்டு என்று தேர்வுக்காலங்களின் போதும் ஆசிரியர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம் செய்தனர். அதனால் சரியான பயிற்சியில்லாத பகுதிநேர ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டிய நிலை உண்டானது. இதனால் மாணவர்களிடையே அதிருப்தியும் மனக்கவலையும் எழுந்தது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

தமிழகத்தின் 960 பள்ளிகளில் தலைமையாசிரியரே இல்லை என்பது மற்றொரு வருந்தத்தக்க
உண்மை. பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யாமல், தலைமையாசிரியருக்கான
பதவி உயர்வு வழங்காமல் பள்ளிக்கல்வித்துறை காலம் தாழ்த்தியதால் இந்த ஆண்டு தேர்ச்சி
விகிதம் பெரிய அளவில் குறையும் என்று பொதுமக்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் தரப்பே இதை
கூறிவருகிறது. இந்த மூன்று வகுப்பு மாணவர்களும் வர இருக்கும் பொதுத்தேர்வை எண்ணி
மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த கல்வியாண்டில் நிகழ்ந்த சம்பங்களையும், மாணவர்களின் நலனையும் ஈடுகட்டும் பொறுப்பு, வினாத்தாள் தயார் செய்யும் குழுவிடம் தான் உள்ளது. இந்த முறை வினாத்தாள் சுலபமாக கொடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

நீட் தேர்வு?

கடந்த ஆண்டு பெரிய குழப்பத்தை உண்டு பண்ணிய விஷியம். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு
விலக்கு இல்லை என்றாகிவிட்டது. ஆனால் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில்
மாணவர்களை தயார் செய்வோம் என்ற தமிழக அரசின் வாக்கு இப்போது எப்படி செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது என்று பார்த்தால் அதுவும் முறையாக இல்லை. வார இறுதி நாட்களில் நீட்
தேர்வுக்கென்று தனியாக வகுப்புகள் நடக்கும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அதை இன்றும்
கூட முறையாக செயல்படுத்தவில்லை. அரசின் இந்த மெத்தனைத்தை நீட் தேர்வுக்கான தனியார்
பயிற்சி மையங்கள் நன்றாக பயன்படுத்தி நல்ல காசு பார்த்து வருகிறது.

நேற்றைக்கு தான் அனிதா இறந்தது போல் இருக்கிறது. அதற்குள் அடுத்த நீட் தேர்வும், தமிழக
அரசுப்பொதுத் தேர்வுகளும் வந்துவிட்டது. ஆனால் கல்வித்துறை எந்த முன்னேற்றமும்
இல்லாமல் இன்னும் அதே நிலையில் செயலாற்றி வருகிறது.

பேருந்து கட்டண உயர்வை தாங்காமல் ஜனவரியில் அழுவதெல்லாம் குறைவு. இன்னும் மார்ச்
முதல் மே வரையிலான காலங்களில் ஒட்டுமொத்த தமிழகமே அழுவதற்கு நிறைய அவலமான
விசியங்கள் காத்துக்கொண்டு இருக்கிறது. தமிழகம் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது
என்பது அப்போது முழுமையாக தெரிய வரும்…!

Related Articles

” தெருவிளக்கு வெளிச்சத்துல நாங்க ம... இன்று காலா படத்தின் இசை வெளியீடு விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்து உள்ளது. படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அந்தப் பாடல்களைப் பற்றி பார்ப்போம்...
முதலையை பிடித்த பிரதமர்! – கலாய்த்... மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பாரத பிரதமர் மோடி. நேற்று (ஆகஸ்ட் 13) அந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்ப பட்டது. அந்த நிகழ்ச்சியில் ...
பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : ம... மத்திய பிரதேசத்தில் சிவாஜிராங் சிங் சௌஹானின் அமைச்சரவை 12 வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளை இலக்கு வைக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வ...
13 years of சித்திரம் பேசுதடி – மா... வேலையில்லாத இளைஞன் செக்யூரிட்டி வேலைக்குச் சேர முயல்கிறான். அந்த சமயத்தில் ரௌடியின் மகனை நாயகன் இக்கட்டான சூழலிலிருந்து காப்பாற்ற, ரௌடியிடம் நாயகனுக்க...

Be the first to comment on "2018ல் ஜனவரி மாதமே இப்படி என்றால் மார்ச் முதல் மே மாதங்களில்? – தமிழகத்தின் அவல நிலை!"

Leave a comment

Your email address will not be published.


*