ஆடுகளம் “பேட்டைக்காரன்” மாதிரியான மனிதர்கள் நம் வாழ்விலும் இருக்கிறார்கள் தானே? 

இயக்குனர் வெற்றிமாறனின் 2வது படம். ஆறு தேசிய விருதுகளை குவித்த படம் “ஆடுகளம்.” இந்தப் படத்தில் தனுஷ், கிஷோர், கவிஞர் ஜெயபாலன், டாப்ஸி, முருகேசன் ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

தனுஷ் கருப்பாகவும், கிஷோர் கருப்புவின் அண்ணனாகவும், டாப்ஸி கருப்புவின் காதலியாகவும், முருகதாஸ் கருப்புவின் நண்பராகவும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் கருப்பு ஒரு சேவலை வளர்க்கிறான். என் தம்பி (சேவ) மேல கை வச்ச கொண்டேபுடுவேன் என்று சேவலுக்காக  தன் அம்மாவை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறான் கருப்பு. 

அது “உசிருக்குச் சமமான” பந்தயத்தில் களமிறங்க பேட்டைக்காரன் “இது ஆகாது… இத அறுத்துப் போட்ரு…” என்கிறான். சேவலை தன் உடன்பிறந்தவன் போல வளர்க்கும் கருப்போ “இல்லண்ணே… என் சேவல் கண்டிப்பா பந்தயம் அடிக்கும்ணே…” என்று சேவலை விட்டுக்கொடுக்காமல் நிற்கிறான். பேட்டைக்காரனை மீறி தன் சேவலை தயார் செய்கிறான். 

தன் சேவலை தன்னுடைய தம்பியாக நினைத்து விட்றாதடா தம்பி விட்றாதடா என்று சேவலுக்கு நம்பிக்கை கொடுத்து, அடுத்தடுத்த பந்தயங்களில் வெற்றி பெறுகிறான். சவாலில் தன்னை கருப்பு காப்பாற்றிவிட்டான் என்று அதற்கு பேட்டைக்காரன் உற்சாகப்படவில்லை. எனக்கும் அந்தப் பயலுக்கும் சம்பந்தமில்லை என்று சொன்ன பேட்டைக்காரனுக்கு இப்போது கருப்புவின் திறமை மீது கோபம் வருகிறது. 

பேட்டைக்காரனின் கண்முன்னே பலர் கருப்புவை பாராட்டுகிறார்கள். அது மேலும் மேலும் கருப்பு மீதான எரிச்சலை அதிகப்படுத்தியது. அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? என்று அவன் மீது வன்மம் பிறக்கிறது. ஓஹோ நீ என்கிட்ட வளந்துட்டு இப்ப என்னயவே சாச்சுப்புடலாம்னு பாக்குறியா? என்று கருப்புவை பார்த்து கொந்தளிக்க, “ஏங்க இவன் நம்ம கருப்புங்க… இவன் ஜெயிச்சா நம்ம ஜெயிச்ச மாதிரி… இவன போயி வெளியாளா பாக்குறிங்க..,” என்று கிஷோர், பேட்டைக்காரனின் மனைவி அனைவரும் சொல்கின்றனர். 

இருந்தாலும் பேட்டைக்காரனின் மனதிற்குள் இருக்கும் அந்த “ஈகோ வன்மம்” குறையவில்லை. ஒருகட்டத்தில், அதை மறைத்துக்கொண்டு கருப்புடன் பழையபடி சிநேகமாக பழகுகிறார் பேட்டை. கருப்பு ஒயின்ஷாப் ஆரம்பிப்பதற்காக பந்தயத்தில் வென்ற தன் பணத்தை பேட்டைக்காரனிடம் கொடுத்து வைத்திருக்கிறான். இந்நிலையில் பேட்டைக்காரன் பணம் திருடு போய்விட்டது என்று சொல்ல, மகன் நல்ல வழிக்கு வந்துவிட்டான் – வீட்ட மீட்டுக் கொடுத்துருவான் என்று ஆசைஆசையாக புதுசேலை அணிந்துகொண்டு அக்கம்பக்கம் மனிதர்களிடம் மனமகிழ்வோடு பேசித் திரிந்தவர் இப்போது பணம் காணவில்லை என்றதும் அதிர்ச்சியில் இறந்து போகிறார். எலவு வீட்டிலும், கிஷோருக்கும் கருப்புக்கும் இடையே சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பேட்டைக்காரன். பேட்டைக்காரனின் புத்தியை கருப்புவின் நண்பன் ஊளை “சாய்ந்தரம் ஆறு மணிக்கு எந்த திருடன் வரப் போறான்… பேட்டைக்காரன் ஏமாத்துறான்” என்று சொல்ல, ஊளையின் நெஞ்சில் எட்டி ஒதைக்கிறான் கருப்பு. 

ஒருகட்டத்தில் கருப்புவை பற்றி, “”ஏங்க நம்ம கருப்பு இருக்கான்ல… எங்கேயோ போகப் போறாங்க நல்ல திறமைசாலி…” என்று பேசிய தன் மனைவியை தவறாகப் பேச, பேட்டைக்காரனை விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள் அவருடைய காதல் மனைவி. ஒரு பக்கம் கிஷோர் கருப்புக்கு எதிரியாக படிப்படியாக மாறிவர, இன்னொரு பக்கம் பேட்டைக்காரனின் சூழ்ச்சி தெரியாமல் அவரிடமே போய் வீழ்ந்து கொண்டிருந்தான் கருப்பு. 

ஒட்டுமொத்த நபர்களும் எதிரியாக மாறிவிட டாப்ஸியை பத்திரப்படுத்தும் பொருட்டு பேட்டைக்காரன் வீட்டில் தங்க வைக்கிறான் கருப்பு. அப்போது பேட்டைக்காரன் ஐரினிடம், “பாத்தா நல்ல பிள்ளயா இருக்க… உனக்கு இவன் சகவாசம் வேண்டாம்… ஒரு தடவ இவனும் என் பொண்டாட்டியும் இதே வீட்டுல படுத்துக் கிடந்தாங்க” என்று சொல்ல ஐரின் பேட்டைக்காரனின் சூழ்ச்சியை புரிந்து கொள்கிறாள். கிஷோரை கொல்வதற்காக கருப்புவை ஏவிவிட்டு பிறகு அதே விஷயத்தை கிஷோருக்கு தெரிவித்து கருப்புவை மென்மேலும் குற்றவாளி ஆக்குகிறான் பேட்டைக்காரன். 

இப்போது கருப்புக்கு லேசாய் புரிகிறது  பேட்டைக்காரனின் சூழ்ச்சி. ஐரினும் தன்னிடம் பேட்டைக்காரன் சொன்னதை சொல்ல இப்போது முழுவதுமாக பேட்டைக்காரனின் தந்திரத்தை புரிந்துகொள்கிறான் கருப்பு. முன்பு சொன்னது போல ஊளை சொன்னது சரி என்று நினைக்கிறான் கருப்பு. 

எல்லோரிடம் இருந்தும் தப்பி பேட்டைக்காரன் இருக்கும் இடத்திற்கு வருகிறான் கருப்பு. உண்மைகளை தெரிந்துகொண்டதை பேட்டைக்காரனிடம் விளக்க, பேட்டைக்காரன் ஒளித்து வைத்திருந்த கருப்புவின் பணம் இப்போது வெளியே தெரிகிறது. இத நீ கேட்ருந்தா மொத்தமா உனக்கு கொடுத்திருப்பேண்ணே… உன்ன என் அப்பா மாதிரி பாத்தேண்ணே… என்று சொல்ல, சட்டென்று பேட்டைக்காரன் கழுத்தை அறுத்துக்கொண்டு சாகிறான். இப்போது கொலைப்பலியும் கருப்பு மீது விழ, அவன் இதற்குமேல் இந்த ஊரில் இவர்களை சமாளித்து வாழ்க்கையை வாழ முடியும் என்பதை நம்பவில்லை. ஐரினை கூட்டிக்கொண்டு சேவல் பந்தயத்தில் ஜெயித்த பணத்தை அப்படியே விட்டுவிட்டு ஊரைவிட்டு ஓடுகிறான். 

பேட்டைக்காரன் மாதிரியான மனிதர்களும் நம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஏதேனும் ஒருத்தர் இருப்பார். நாம் அவரை முழுமையாக நம்பி நம்முடைய பெருமை சிறுமை என்று அத்தனையையும் அவரிடம் பகிர்வோம். திடீரென ஒருநாள் நமக்கே தெரியாமல் நம் வாழ்க்கையை சீர்குலைக்கும் மனிதராக அவர் மாறி இருப்பார். 

நாம் நம்பிக்கையானவார் என்று நினைத்து  நாம் அவாரிடம் பகிர்ந்து கொண்ட நம்முடைய சிறுமைகளை நமக்கே தெரியாமல் பிறரிடம் சொல்லி நம்மை கெட்டவன் ஒழுக்கமற்றவன் மாதிரியான தோற்றத்தை பிறர் மத்தியில் உருவாக்கி வைத்திருப்பார். 

இப்போது எல்லோரும் கருப்புவை குற்றாவாளியாக பார்த்தது போல் நம்மை பார்ப்பார்கள். எல்லாருமே பேட்டைக்காரன் மாதிரி விஷச்சொற்களை பரவவிட்டு நமக்கு மூச்சுத்திணறலை உண்டாக்குவார்கள். இப்படிப்பட்ட சூழலில் நமக்கு இரண்டே வழி தான். ஒன்று அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு அவர்களிடம் மொத்தமாக சரண்டர் ஆவது, இல்லையென்றால் கருப்புவைப் போல பட்டென்று அவர்களிடம் இருந்து விலகி கண்காணாத தூரத்திற்குப் போய்விடுவது. 

இதில் பட்டென விலகி கண்காணாத இடத்திற்கு போவது என்பது சிரமமான காரியம். ஆதலால் முதல் வழியான அவர்களிடம் சரண்டர் ஆகி அவர்களுடைய அதிகாரத்துக்குப் பணிந்து போய் வாழ்க்கை முழுக்க அவர்களுக்கு கீழ் ஒரு அடிமை போலவே நாம் வாழ வேண்டிய சூழல் வந்து விடுகிறது. 

இன்னும் சில பிடிவாதமான மனிதர்கள் அந்த மாதிரியான அழுக்கு நிறைந்த மனிதர்களிடம் சரண்டர் ஆக விரும்பாமல் இருப்பர். கண் காணாத இடத்திற்கும் போக முடியாத நிலை, போக விருப்பமில்லை என்றால் அவர்களின் முடிவு விபரீதமானதாக இருக்கும். ஆம் நீங்கள் எதிர்ப்பார்ப்பது போலவே தற்கொலை. ஆடுகளம் மாதிரியான சினிமாவில் வேண்டுமானால் அதிகாரம் ஆள்பலம் கொண்ட பேட்டைக்காரன் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் நிஜத்தில் எந்த பின்புலமும் இல்லாத அப்பாவி கருப்புகள் தான் தூக்கில் தொங்குகின்றனர். 

ஐஐடி மாதிரியான பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் தூக்குப் போட்டு தொங்க காரணம் அந்த மாதிரியான மனிதர்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓவியக்கல்லூரி மாணவன் ஒருவன், நன்றாகப் படிப்பவன் திறமையானவன் என்ற போதிலும் ஆசிரியர் அவனை பற்றி மற்றவர்களிடம் விசச்சொற்களை பரப்பி அவனை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி எதிரியாக்க அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான். அந்த மாணவனுக்காக களத்தில் இறங்கிப் போராடினார் இயக்குனர் பா. ரஞ்சித். தான் படித்து பட்டம் வாங்கிய ஓவியக் கல்லூரி என்ற போதிலும் அந்த கல்லூரியில் இருந்த அதிகார அரசியலை அந்தக் கல்லூரிக்கு முன்பு நடந்த கூட்டத்தில் போட்டு கிழிகிழி என கிழித்து தொங்க விட்டிருந்தார். எதுக்கு இவன் இப்படி கத்துறான் என்று சில சொகுசுவாதிகள் அலட்சியமாய் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு என்ன சொன்னாலும் பா. ரஞ்சித்தின் குரல் புரிய போவதில்லை. பா. ரஞ்சித் மாதிரியான தோழர்கள் பலர், அதிகாரத்தை கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருப்பதால் தான் நாம் இன்றுவரை கயிற்றில் தொங்காமல் இருக்கிறோம். 

555 மற்றும் எஸ் ஜே சூர்யாவின் “இசை” என்ற இரண்டு படங்களையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?  இந்த இரண்டு படங்களிலும் ஹீரோவை மனநோயாளி போல் சித்தரித்து வைத்திருப்பார்கள். அந்தச் சித்தரிப்புக்குத் தகுந்தபடி குடும்ப உறுப்பினர்களும் நடந்து கொள்வார்கள். இப்போது அந்த ஹீரோக்கள் குழம்பிப் போகிறார்கள். இதில் எது உண்மை எது பொய்… யார் நிஜம் பேசுகிறார்கள்? யார் கற்பனையாக பேசுகிறார்கள்? என்று தெரியாமல் சிக்கி தவிக்கிறார்கள். “ரங்கூன்” மற்றும் “பட்டியல்” இந்த இரண்டு படங்களையும் எடுத்துக் கொள்வோம். இந்த இரண்டு படங்களிலும் ஒரு  அனுபவசாலி இருப்பான். அவனிடம் ஹீரோக்கள் வேலை செய்வார்கள், அதாவது அடியாட்களாக… அவர்கள் என்ன சொன்னாலும் எதை பற்றியும் யோசிக்காமல்,  அனுபவசாலிகளுக்கு நேர்மையாக இருக்கிறேன்… அதாவது என்னுடைய குருமார்களுக்கு நான் நேர்மையாக இருக்கிறேன் என்ற பெயரில் வாழ்க்கையை தொலைத்து நிற்பார்கள். இந்த பேட்டைக்காரனாக இருந்தாலும் சரி, ஓவியக்கலை கல்லூரி மாணவனை சாகடித்த அந்த கல்லூரி ஆசிரியராக இருந்தாலும் சரி… நீங்கள் யாரிடமும் முழுமையாக உங்களைப் பற்றிய ரகசியங்களை தெரிவித்து விடாதீர்கள். உங்களுடைய பெருமைகள், சிறுமைகள், நிறைகள், குறைகள், வசதிகள், இல்லாமை இவற்றையெல்லாம் முழுமையாக தெரிந்து கொண்ட ஒருவர் கண்டிப்பாக உங்களை அடிமையாக தான் நடத்துவார்கள். 

Related Articles

எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய சிறுக... நாளைய இயக்குனர் சீசன் 6ல் வெளியான குறும்படம் தான் பேசாத பேச்செல்லாம். சிறுகதையை தழுவிய குறும்படங்கள் பிரிவில் இயக்குனர் ஜெய் லட்சுமி இயக்கத்தில் வெளிய...
வெ. இறையன்புவின் “நமக்குள் சில கேள... வெ. இறையன்பு மிக சிறந்த எழுத்தாளர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வீட்டு நூலகம் வைத்திருப்பவர்களின் வீட்டில் கண்டிப்பாக அவருடைய புத்தகம் எதாவது இடம் ப...
தேசிய விருதுபெற்ற இயக்குனர் செழியனின் &#... சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டும் என்று ஆர்வம் உள்ள இளைஞர்கள் சினிமா குறித்த கண்ட கண்ட புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். உள்ளே விரித்துப் பார்த்தால் ஒன்...
#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்... நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி ...

Be the first to comment on "ஆடுகளம் “பேட்டைக்காரன்” மாதிரியான மனிதர்கள் நம் வாழ்விலும் இருக்கிறார்கள் தானே? "

Leave a comment

Your email address will not be published.


*