ரிமோட்டில் இயங்கப்போகிறது சென்னை மெட்ரோ ரயில்

Chennai

சிறுவயதில் நாம் அனைவருமே பொம்மை கார வைத்து விளையாடியிருப்போம் அல்லவா, மிகவேகமாகக் காரை இழுத்து விட்டால் அது சுவரில் டம்மென்று இடித்து நிற்கும். பிறகு அந்தக் காரை கையிலெடுக்க எழுந்து அந்தச் சுவர் வரை நடந்து போகவேண்டும். இப்போது அந்தத் தொல்லையே இல்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே ரிமோட்டின் மூலமாகக் காரை நம் விருப்பத்திற்கு எப்படி வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம். சில பொம்மை கார்கள் குட்டிக்கரணம் கூட அடிக்கின்றன.பயணிகளின் சிரமங்களை தவிர்க்க இது போன்றதொரு திட்டத்தைத்தான் சென்னை மெட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

தொலைவிலிருந்தே பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும்

மெட்ரோ ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.  ஏதோவொரு சின்ன தடங்கல் அல்லது தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக பாதி வழியிலேயே ரயில் நின்றுவிட்டது என்று வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்? என்ன பிரச்சனை என்று கண்டறிய, அதைச் சரிசெய்ய ஒருவரோ அல்லது ஒரு குழுவோ ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி வரவேண்டும். நின்றுகொண்டிருக்கும் ரயிலிலிருந்து தகவல் அனுப்பப்பட்டு, நிபுணர்கள் கிளம்பிவந்து சிக்கலைத் தீர்த்து வைப்பதிற்குள், கல்யாணத்தில் தாலி கட்டுவதைப் பார்க்க ஆர்வமாய் கிளம்பி ரயிலில் காத்திருக்கும் ஒருவர் கடைசி பந்திக்குக் கூட போய்ச்சேர முடியாது.

என்னதான் தீர்வு?

இதுபோன்றதொரு பிரச்சனைக்கு தீர்வுகாணச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதியதொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அசெட் மேனேஜ்மேண்ட் சிஸ்டம் ( Asset Management System) என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டறிய முடியும் என்று சென்னை மெட்ரோ அதிகாரிகள் நம்புகிறார்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியைக் கொண்டு மிக விரைவில் ரயிலில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும். ஏதோவொரு காரணத்தால் ரயில் பாதி வழியில் நின்றுவிட்டது என்று வைத்துக்கொள்வோம். ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி ரயில் நிற்கும் இடம் வரைக்கும் செல்வதற்கு பதிலாக, தொலைவிலிருந்தே ரயிலில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன என்பதை இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிய முடிவது மட்டுமல்லாமல், அதைச் சரி செய்யவும் முடியும். கூடுதலாக, எப்படி அந்தப் பிரச்சனையை சரி செய்வது என்பது பற்றியும் ரயிலை இயக்குபவருக்கு அறிவுறுத்தப்படும்.உலகின் எந்த மூலையில் இருந்தும், ரயிலின் தகவல்களை பெற்று பிரச்சனையை சரிசெய்ய முடியும்.

எப்படிச் செயல்படுகிறது?

ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது கூட, அதைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப்பட்டு ரயில் நிலையத்திலிருக்கும் சர்வரில் சேமிக்கப்படும். இதன் மூலம் ரயிலில் ஏற்படும் ஒரு பிரச்சனையை தீர்க்க பொதுவாக எடுத்துக்கொள்ளப்படும் அரை மணி நேரம் என்பது குறைந்து பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களில் சரி செய்யப்படும். ரயிலின் தொழில்நுட்ப கோளாறுகளை முன்னமே தவிர்க்கும் விதமாக, முன்கூடியே எச்சரிக்கை செய்யும் வசதியும் இந்தத் தொழில்நுட்பத்தில் உள்ளது.

கூடிய விரைவில் இதற்கான ஒப்பந்தங்கள் பெறப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாகச் சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆறு மாதங்களில் செயல் திட்டம் பெற்று அடுத்த சில மாதங்களில் செயல் வடிவம் பெறும்என்றும் , முதல் கட்டமாக நாற்பத்து இரண்டு ரயில்களில் இதை பொறுத்தவிருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு ஆகும் செலவுகள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

எப்படியோ நேரத்திற்குக் கல்யாணத்துக்கு சென்று கையை நனைத்தால் சரி.

Related Articles

சுஜாதா நினைவு தினம் இன்று! வித்தியாசமான ... 1. கேள்வி: பெட்ரோல் டீசல் முழுவதும் எதிர்காலத்தில் வற்றிப்போகும் வாய்ப்பு உள்ளதா? பெட்ரோல் முழுக்கத் தீர்ந்து விட்டால் கோடிக்கணக்கான வாகனங்களுக்கு மாற...
தீக்காயத்தால் பாதிக்கப்படுவோரை தோல் தானம... சமீபத்தில் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பதிநான்கு பேர் இறந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்...
தமிழ்நாட்டில் புத்தகத் திருவிழாக்கள் வெக... புத்தகத் திருவிழா என்றாலே தீவிர புத்தகப் பிரியர்களுக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். காரணம் தங்கtளுக்கு பிடித்த புத்தகங்களை சிறப்பு தள்ளுபடி விலையில...
தமிழக மாணவர்கள் வெளி மாநிலம் சென்று தான்... இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பலர் வெளி மாநிலங்கள் சென்று தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளனர். உச்ச நீதி மன்றமும் அதை உறுதிப்படு...

Be the first to comment on "ரிமோட்டில் இயங்கப்போகிறது சென்னை மெட்ரோ ரயில்"

Leave a comment

Your email address will not be published.


*