“அறம் நீ பழகு! அதுதான் அழகு!” – “கோடியில் ஒருவன்” விமர்சனம்!

Kodiyil Oruvan movie review

மெட்ரோ எனும் அருமையான படத்தை தந்த இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் இரண்டாவது படம் “கோடியில் ஒருவன்”. ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம் தான் மிக முக்கியமான படம். அந்தப் படத்தை இயக்குனர் சிறப்பாக எடுத்திருக்கிறாரா என்றால் நிச்சயம் இல்லை என்பதே பதிலாக இருக்கும். கோடியில் ஒருவன் படத்தை அவர் தான் இயக்குனாரா என்று யோசிக்கும்போது குழப்பமாக இருக்கிறது. முதல் படத்தை அவ்வளவு சுவாரஸ்யமாக எடுத்த இயக்குனர் இந்தப் படத்தை ஏன் கோட்டை விட்டார்? சரி வாங்க படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். 

கிராமத்து வில்லன் கதாபாத்திரத்தில் பூ ராமுவை பார்த்ததும் என்னது நம்ம பூ ராமு வில்லனா? என்று ஆச்சரியமாக இருந்தது. அடுத்தடுத்த காட்சிகளில் தனது தேர்ந்த நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்துடன் நன்கு பொருந்திவிட்டார். பூ ராமு வெளியே தெரியவில்லை. வில்லேஜ் விஜய் ஆண்டனி நகரத்துக்கு வந்த பின் அவருக்கு வில்லனாக கேஜிஎஃப் வில்லன் மெயின் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் சினிமா இதுவரை எப்படி வில்லன்களை காட்டி இருக்கிறதோ அதை கொஞ்சம் கூட மாற்றாமல் வழக்கமான வில்லனை காட்டுவதும் அவருடைய வசன உச்சரிப்புகளும் நம் பொறுமையை சோதிக்கின்றன.  

நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை நன்று. ஒரு சில இடங்களில் ஓவராக வாசித்திருக்கிறார். அதை தவிர்த்து இருக்கலாம். பாடல்கள் கேட்கும்படி ரசிக்கும்படி  இல்லை என்றாலும் பாடல் வரிகள் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு நன்றாக இருந்தன. “அறம் நீ பழகு… அதுதான் அழகு…” என்ற வரி செம. அதேபோல ஆங்காங்கே சில வசனங்களும் நன்றாக இருந்தன. அம்மா தன் மகனுக்கு சொல்லும் வசன உச்சரிப்புகள் அப்படியே கேஜிஎஃப் படத்தை நினைவூட்டுகிறது. கர்ப்பிணியை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கும் காட்சியை பார்க்கும்போது பக்கென இருந்தது. அம்மாவின் உயிர் பிரிய போகும் தருணத்தில் பிறந்த குழந்தை தன் அம்மாவின் விரலை பிடிக்கும் காட்சி நன்றாக இருந்தது. தீயில் கருகிய அம்மாவின் முகத்திற்கு போட்ட மேக்கப் சரியில்லை… இப்படியா மேக்அப் இருப்பது? ஒளிப்பதிவு சுமாராக இருந்தது. 

“நமக்கு எல்லா தகுதியும் இருந்து ஒரு விஷயம் தாமதாக கிடைக்கிறது என்றால் அந்த விஷயம் நமக்கு கூடுதல் சிறப்பம்சங்களுடன் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்…!” – இந்தப் படத்தில் ஹீரோவின் அம்மா தன் மகன் விஜய் ஆண்டனியை கலெக்டர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் விஜய் ஆண்டனிக்கு எல்லா தகுதியும் இருந்த போதிலும் அவரால் ஐஏஎஸ் ஆக முடியவில்லை. அது ஏன்? கடைசியாக அவர் ஐஏஎஸ் ஆனாரா என்பதே கதை. கிளைமேக்ஸ் என்ஜிகே படத்தையும் ஆர் ஜே பாலாஜியின் எல் கே ஜி படத்தையும் நினைவூட்டுகிறது. ஏற்கனவே அந்த இரு படங்களின் கிளைமேக்ஸை பார்த்து மக்கள் பலர் சிரித்தனர். அப்படி இருக்கையில் மீண்டும் இதே கிளைமேக்ஸை இயக்குனர் ஏன் வைத்தார்.? கோ படத்தில் வசந்தன் கேரக்டர் செய்ததையே நம் சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி இருக்கையில் இந்த கிளைமேக்ஸ் மட்டும் எப்படி எடுபடும். 

மீசைய முறுக்கு படத்தில் அழகாய் தெரிந்த ஆத்மிகா இந்தப் படத்தில் சற்று மங்கலாக தெரிகிறார். முகம் சமந்தா போல் கொஞ்சம் மாறி இருக்கிறது. இயற்கை அழகு என்னவோ அதை அப்படியே விட்டிருக்கலாம். படத்தில் ஹீரோயினாக நடித்த ஆத்மிகாவை காட்டிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் அதிகம் கவர்கிறார். ஆத்மிகா காட்சிகளை நீக்கிவிட்டு அம்மா கதாபாத்திரத்துக்கான காட்சிகளை இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். 

கேஜிஎஃப் படத்தையும் தனிஒருவன் படத்தையும் கலந்துகட்டி கொடுத்திருக்கிறார்கள். அந்த படங்களின் சாயல் இல்லாமல் இருந்திருந்தால் படம் சலிப்பை தராமல் இருந்திருக்கும். “அறச்சீற்றம்” என்பதை அதிகம் வலியுறுத்தும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய் ஆண்டனி என்பது இந்தப் படத்தை பார்க்கும்போது தெரிகிறது. அப்படிபட்டவர் எதற்கு வீணாய் தேவையில்லாத மாஸ் ஹீரோயிச காட்சிகளையும் ரொமாண்டிக் காட்சிகளையும் தனது படங்களில் வலிந்து திணிக்கிறார் என்பது தெரியவில்லை. இந்தக் காட்சிகள் இல்லாமலும் கமர்ஷியல் சினிமா எடுக்கலாம். 

இந்த தமிழ் சினிமா ஹீரோக்கள் புரட்சி செய்து மக்களை நல்வழிப் படுத்துவது போன்ற கதைகளை தவிர்க்க வேண்டும். படத்தில் புரட்சி செய்வது போல் காட்சிகள் வந்தாலே மக்கள் இப்போது உச்” கொட்டுகிறார்கள். ஹீரோ அரசியலில் நுழைவது, ஹீரோ விவசாயம் செய்வது போன்ற படங்களை தமிழ் சினிமா இயக்குனர்கள் தயவுசெய்து இனி படமாக எடுக்க கூடாது. உலக சினிமா என்ற பெயரில் தியேட்டருக்கு வரும் எளிய மக்களின் பொறுமையை சோதிக்கும் வகையில்… அவர்களுக்கு புரியாத திரைக்கதையில்… படம் எடுக்காமல் சாதாரண கமர்ஷியல் சினிமாவில் மக்களுக்கு நல்லது சொல்லனும் என்று விஜய் ஆண்டனி நினைக்கிறார் என்பது அவருடைய படங்கள் மூலம் புரிகிறது. ஆனால் வாகை சூடவா மாதிரியான படங்கள் தான் எளிய மக்களுக்கான சினிமா என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இப்ப என்ன படம் பார்க்கலாமா? வேண்டாமா? என்று கேட்பவர்களுக்கு ஒரு முறை பார்க்கலாம் என்பது பதில். விஜய் ஆண்டனி படம் என்று பெரிதாய் எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். 

Related Articles

இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி குறித்து நெ... ஈசியா ஜெயிச்சுடலாம்னு நம்பிக்கையோடு தூங்கப் போனோம்!கடைசில இப்படி ஆகிடுச்சே! 2018 ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றின்...
உங்கள் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளி ம... பணம்கொடுத்து அரசுப்பணியில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டிஎன்பிஎஸ்சி, ட...
தீபாவளிப் பண்டிகை அன்று எண்ணெய் ஸ்நானம் ... பல பண்டிகைகள் நாம் கொண்டாடினாலும் தீபாவளிப் பண்டிகைக்கு தனி சிறப்பு உண்டு.  தீபாவளித் திருநாள் அன்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி எல்லோரும் எண்ணெய...
96 இயக்குனர் பிரேம் குமார் பற்றிய சில தக... அப்பா சந்திரன், அம்மா ஜீவசந்திரா. அம்மாவுக்கு சொந்த ஊர் கும்பகோணம். அப்பாவுக்கு சொந்த ஊர் காரைக்குடி. அண்ணன் சாலை வேதன். பிரேம் குமார் பிறந்தது தி...

Be the first to comment on "“அறம் நீ பழகு! அதுதான் அழகு!” – “கோடியில் ஒருவன்” விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*