இந்திய காவல்துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
டெல்லியில் உள்ள சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள காவல்துறை நினைவுச்சின்ன வளாகத்தில் காவல்துறையின் வரலாறு, கலைப்பொருட்கள், சீருடைகள் மற்றும் மத்திய மாநில காவல்துறை படைகள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் வகையில் ஒரு அருங்காட்சியகம் அமைய இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி அல்லது உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரது கரங்களால் அக்டோபர் 21 ம் தேதி (காவல்துறை நினைவு தினம்) இந்த அருங்காட்சியகம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தை விரைவுபடுத்துவதற்காகக் கடந்த மாதம் உளவுத்துறை பணியகம்(Inteligence Bureau) இயக்குநர் ராஜீவ் ஜெயின் ஒரு சந்திப்பை நடத்தினார்.
காவல்துறையின் வீரத்தையும் தியாகத்தையும் சித்தரிக்கும் அருங்காட்சியகம்
மாநில படைகள் மற்றும் துணைப்படைகள் ஏற்கனவே சிறிய அருங்காட்சியகங்களைக் கொண்டிருந்தாலும், தேசிய அளவிலான நிரந்தர அருங்காட்சியமாக இது இருக்குமென்றும், ஆராய்ச்சியாளர்களுக்கான களமாகவும் தொடங்க இருக்கும் இந்த அருங்காட்சியகம் இருக்குமென்றும் மூத்த அதிகாரி கூறினார்.
கடமை செய்யும் போது உயிர் இழந்த காவலர்களின் காட்சி கூடம், வீர பதக்கங்களின் காட்சி கூடம் போன்றவையும் அமைய இருக்கிறது.பார்வையாளர்களைக் கவனித்து கொள்வதற்காகவே ஒரு பிரத்யேக காவல்துறை அலுவலரை அருங்காட்சியகத்தில் பணியமர்த்த இருக்கிறது மத்திய அரசு.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21 ம் தேதி பணியில் இருக்கும் போது உயிர் துறந்த காவல்துறையினரை நினைவுகூரும் நாளாக மத்திய அரசால் அனுசரிக்கப்படுகிறது.
Be the first to comment on "டெல்லியில் அமையவிருக்கிறது இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகம்"