ஜெயகாந்தனின் ” ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ” நாவல் ஒரு பார்வை!

a view on Oru Manithan Oru Veedu Novel by Jayakanthan

கதாபாத்திரங்கள் : 

டிரைவர் துரைக்கண்ணு, 

தேவராஜன் –  கிருஷ்ணராஜபுரத்து ஆசிரியர், 

கிளீனர் பாண்டு, 

ஹென்றி, 

சின்னான் – கிருஷ்ணராஜபுரத்து வேலையாள்,

மண்ணாங்கட்டி – வேலையாள், 

நாகம்மாள் – முன்சீப்பின் மனைவி, கிளியாம்பா – முன்சீப்பின் மகள், அக்கம்மா ( அபிராமி ) – தேவராஜனின் அக்கா,

கனகவல்லி – தேவராஜனின் மனைவி,  

பழனி – பைத்தியம் பிடித்த நாவிதன், 

மணியக்கார ராமசாமி கவுண்டர் – முன்சீப்

கனகசபை முதலியார் – ஊர் தர்மகர்த்தா

குமார் – தர்மகர்த்தாவின் பேரன்

நடராஜன் – போஸ்ட் ஆபிஸ் அய்யர்

தேசிகர் – டீக்கடை வைத்திருப்பவர்

பக்கிரி – சைக்கிள் கடை வைத்திருப்பவர்

சபாபதி – ஹென்றியின் அப்பா

வேலுக்கிராமணி – அமைதியான மனிதர்

முருகேசன் – முதலியாரின் வேலையாள்

நவநீதம் – துரைக்கண்ணுவின் மனைவி

பஞ்சவர்ணத்தம்மாள் – துரைக்கண்ணு மாமியார்

கன்னியப்ப நாயக்கர் – வீடு கட்டுகிற மேஸ்திரி

தையநாயகி – அக்கம்மாளின் தோழி

கதைச் சுருக்கம் : 

டிக்கெட்டைகளை (ஏழு பேரை ) ஏற்றிக்கொண்டு பாண்டு தேவராஜன் துரைக்கண்ணு ஆகியோர் லாரியில் பயணிக்க அவர்களுடன் வந்து இணைந்துகொள்கிறான் பெங்களூரிலிருந்து வந்த ஹென்றி. தேவராஜனும் ஹென்றியும் கிருஷ்ணராஜபுரத்தில் இறங்கிக் கொள்கின்றனர். சின்னான் ஹென்றியின் மூட்டையை சுமந்து வர முன்சீப் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என ஹென்றி சொல்ல ஹென்றியை தன் வீட்டில் தங்க வைத்துக்கொள்கிறான் தேவராஜன். அவனுடைய வீட்டிற்கு எதிரில் உள்ள ஒரு பூட்டப்பட்ட வீட்டை பார்க்கிறான் ஹென்றி. 

முன்சீப்பின் மனைவி நாகம்மாள் ஹென்றீயை வியப்பாக பார்க்கிறாள். தன் மகள் கிளியாம்பாளிடம் அவனை பற்றி அவன் பறையன் என்பது பற்றி பேசுகிறாள். ஹென்றியை வியப்பாக பார்க்கிறாள் அக்கம்மாள். பூட்டிய வீட்டின் கதையை பற்றி தேவராஜனும் ஹென்றியும் இருவரும் பேசுகிறார்கள். பழனி என்கிற நாவிதன் அந்த வீட்டுத் திண்ணையில் தூக்கிட்டு இறந்ததை பேசினான் ஹென்றி.  தேவராஜன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரவில் நிலவொளியில் இருவரும் குளிக்கிறார்கள். கிணற்றில் குளித்தபடியே தன் அப்பா அம்மாவைப் பற்றிப் பேசுகிறான் ஹென்றி. பிறகு இருவரும் மாடியில் அமர்ந்து சரக்கடிக்கிறார்கள். அக்கம்மாவை பற்றி தப்பாகப் பேசியதால் தன் மனைவியிடமிருந்து பிரிந்த கதையை சொல்கிறார் தேவராஜன். மண்ணாங்கட்டி அங்கு வந்து கிளியாம்பாளுக்கு பிரசவம் பற்றி தகவல் சொல்கிறான். உங்களுக்கு குழந்தை பிறந்தால் பிரச்சினை சரியாகிடும் என்று தேவராஜனிடம் சொல்கிறான் ஹென்றி. கனகவல்லி டீச்சராக ஆசைப்படுவதை விவரிக்கிறான் தேவராஜன். 

தேவராஜனும் ஹென்றியும் குடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு மண்ணாங்கட்டி வருகிறான். தன்னுடைய பள்ளிப்படிப்பு, வாசகசாலை அனுபவம் பற்றி பேசுகிறான். அப்பா சரி இல்லாததால் புத்திசாலியான மண்ணாங்கட்டியை தன் குழந்தை போல வளர்க்கும் அக்கம்மாளை பற்றி ஹென்றியிடம் பேசுகிறான் தேவராஜன். அக்காம்மாளும் மண்ணாங்கட்டியும் பரிமாற உணவருந்துகிறார்கள் தேவராஜனும், ஹென்றியும். மூன்று நாளுக்கு முன் அப்பா இறந்ததை அம்மா இறந்ததை இனி இந்த ஊரிலயே இருக்கப் போவதை அக்கம்மாளிடம் சொல்கிறான் ஹென்றி.  பிறகு மீண்டும் மாடிக்குச் செல்கிறார்கள். அக்கம்மா இளம் வயதில் விதவை ஆன கதையை கூறுகிறான் தேவராஜன். தேவராஜன் உறங்கிவிட கிளியாம்பிள்ளைக்கு ஆண் குழந்தை பிறந்ததை சொல்லிக்கொண்டே ஓடி வருகிறான் மண்ணாங்கட்டி. 

ஹென்றி மாடியிலிருந்து அக்கம்மாவும் மண்ணாங்கட்டியும் பேசுவதை கேட்க அப்போது அக்கம்மாவின் பெயர் அபிராமி என்பதை தெரிந்துகொள்கிறான் ஹென்றி. அதேபோல கிளியாம்பாவின் அப்பா மணியக்காரரையும் முதன்முதலாக மாடியில் இருந்து பார்க்கிறான் ஹென்றி. ஹென்றியின் அம்மா உயிரிழந்த கதை, ஹென்றியை பப்பா மகனே என முதன்முறையாக அழைத்த தருணம் ஆகியவை கூறப்படுகிறது. 

கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள முப்பது வருடங்களுக்கு முன்பு பூட்டப்பட்ட வீடு யாருடையது என பப்பாவால் தெரிய வருகிறது. பப்பா தன்னுடைய நண்பன் டிரைவர் துரைக்கண்ணூ பற்றியெல்லாம் ஹென்றியிடம் பேசுகிறார். மம்மாவுக்கு முன்பே தனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்து குழந்தை இல்லாமல் இருந்து திரௌபதி அம்மனை வேண்டியது பழனி என்ற நாவிதன் நண்பனாக இருந்ததது நாவிதன் பாட்டு பாடுவது திரௌபதி வேசம் போடுவது போன்ற விஷியங்களை எல்லாம் கூறுகிறார் பப்பா. புலவர் வீட்டு மகள் பழனியோடு ஓடிப்போன கதை இதனால் பப்பா இல்லாமல் போன கதை அனைத்தையும் தேவராஜன் வீட்டு மொட்டை மாடியில் நின்றபடி நினைவு கூர்ந்து பார்க்கிறான் ஹென்றி. 

தூங்கி எழுகின்றனர் ஹென்றியும் தேவராஜனும். மண்ணாங்கட்டி அவர்களுக்குத் தேவையானதை செய்யத் தொடங்குகிறான். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் தான் என்பதை தேவராஜனிடம் சொல்ல முயன்றான் ஹென்றி.  மணியக்காரரை பார்க்க புறப்பட மண்ணாங்கட்டி வந்து அவர் வெளியூருக்குப் போய்விட்டதை சொல்ல ஊரைச் சுற்றிப் பார்க்க முடிவெடுக்கிறார்கள் தேவராஜனும் ஹென்றியும். ஆற்றுக்கு குளிக்கப் போக முடிவெடுக்கிறார்கள். மண்ணாங்கட்டியை அனுப்பி சைக்கிள் எடுத்து வரச் சொல்கிறான் தேவராஜன். பிறகு என்ன நினைத்தாரோ மண்ணாங்கட்டியை வேண்டாம் என சொல்லிவிட்டு ஹென்றியும் தேவராஜனும் ஊருக்குள் நடக்கத் தொடங்குகிறார்கள். வழியில் குமார் என்ற சிறுவனை பார்க்கிறான் ஹென்றி. வழியில் போஸ்ட் ஆபிஸ் நடராஜன் அய்யர் வழவழவென்று அவர்களுடன் பேசுகிறார். 

வழியில் துரைக்கண்ணுவின் லாரி நிற்கிறது. காபிக்கடைக்குள் துரைக்கண்ணுவும் பாண்டுவும் நிற்பதைப் பார்த்து அவர்களிடம் செல்கிறான் ஹென்றி. கடையில் தேசிகர் ஒருவரிடம் பேசுகிறான் ஹென்றி. துரைக்கண்ணு பற்றி பப்பா பேசியது ஹென்றிக்கு நியாபகம் வருகிறது. திரௌபதி அம்மன் கோவில் அருகே உள்ள டீக்கடையில் இவர்கள் இருக்கிறார்கள். கிழங்கு விற்கும் ஒருத்தியுடன் பேச்சு கொடுக்கிறான் ஹென்றி. தேவராஜன் சைக்கிள் எடுத்துவர சென்றிருக்கிறான். தேவராஜன் சைக்கிள் எடுத்து வந்துவிட இருவரும் சைக்கிளில் கிளம்புகிறார்கள். வீட்டுக்குச் சொந்தக்காரன் யார் என்பதை தேவராஜனிடம் சொல்கிறான் ஹென்றி. ஆற்றில் குளித்து வீடு திரும்புகிறார்கள் ஹென்றியும் தேவராஜனும். மண்ணாங்கட்டியிடம் சைக்கிளை கொடுத்து பக்கிரி கடையில் விட்டுவிட்டு வர சொல்கிறான் தேவராஜன். 

சோப்பெங்கப்பா நடனம் பிறந்த கதையை நினைவு கூர்ந்து ஹென்றி, தேவராஜன், மண்ணாங்கட்டி மூவரும் மாடியில் சிரித்துக் கொண்டே நடனமாடுகிறார்கள். 

மணியக்காரர் பஞ்சாயத்து கூட்ட சபாபதிப் பிள்ளையின் சொத்துக்களுக்கு ஹென்றி தான் வாரிசு என்பதை சட்டப்பூர்வமாக நிரூபணம் செய்கிறார் தேவராஜன். பஞ்சாயத்தில் துரைக்கண்ணுவுக்கு ஆதரவாக கனகசபை முதலியார் இருக்கிறார். தனது பால்ய கால நண்பனான சபாபதி பற்றி நினைத்துப் பார்க்கிறார் மணியக்காரர். துரைக்கண்ணு தனது அண்ணன் தனக்கு சொத்துப் பிரித்து கொடுத்ததை நினைத்துப் பார்க்கிறான். அண்ணன் பூட்டிவிட்டு சென்றதை தான் திறக்க விரும்பவில்லை என்று 30 ஆண்டுகளுக்கு முன் பஞ்சாயத்தில் கூறியதை நினைத்துப் பார்க்கிறான். 30 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணனுக்கு ரத்த சொந்தமில்லாத ஹென்றி பத்திரங்களுடன் வீட்டிற்கு உரிமை கொண்டாட துரைக்கண்ணு குழம்பி நின்றான். அனைத்தையும் ஹென்றி பேருக்கே எழுதி வையுங்க எனக்கு எதுவும் வேண்டாம் என்று பஞ்சாயத்தில் சொல்கிறான் துரைக்கண்ணு. மதிய உணவுக்காக பஞ்சாயத்துக்காரர்கள் சென்றிருக்கிறார்கள். தேவராஜனும் ஹென்றியும் அக்கம்மாளின் சாப்பாடு சாப்பிட வீட்டிற்குச் செல்கிறார்கள். 

தேவராஜனுக்கு அவன் மனைவியிடமிருந்து கடிதம் வருகிறது. கிளியாம்பாள் குழந்தை பிறந்த பிறகும் தன் கணவன் வந்து தன்னை பார்க்கவில்லையே என்று வருந்துகிறாள். அக்கம்மாளுக்கும் தனக்குமான உறவை பற்றி நினைத்து பார்க்கிறாள் கிளியாம்பாள். ஹென்றியும் தேவராஜனும் தங்கள் வீட்டிற்குச் சென்று கூழ் அருந்துகிறார்கள். 

துரைக்கண்ணுவை அழைத்து சொத்தில் பங்கு கேளு என்று அறிவுறுத்துகிறார்கள் கனகசபையும் மணியக்காரரும். பஞ்சாயத்தில் பேசி முடிவானதை தேவராஜன் காகிதத்தில் எழுதுகிறார். ஹென்றியின் பேரில் அனைத்தையும் எழுதி வைத்து துரைக்கண்ணு சமர்பிக்க ஹென்றி அதை மறுத்து அனைத்து சொத்தையும் துரைக்கண்ணு பேருக்கு எழுதி வைக்கிறான். மணியக்காரர் இதை மறுத்து வீட்டை  ஹென்றி வைத்துக் கொள்ளட்டும் காடு நிலங்களை வழக்கம்போல துரைக்கண்ணுவே பார்த்துக் கொள்ளட்டும் என்றார் மணியக்காரர். பஞ்சாயத்து கலைந்தது. தேவராஜன் தனக்கு வந்த கடிதத்தைப் படிக்கிறான். மனைவி கற்பமாக இருக்கிறாள் ஆனால் அதில் அவளுக்கு சந்தோசமில்லை என தெரிந்ததும் வருத்தப்பட்டு ஹென்றியிடம் சொல்கிறான் தேவராஜன். 

தேவராஜன் வீட்டிலிருந்து கிளம்பி குமாரபுரத்து துரைக்கண்ணு வீட்டில் தங்குகிறான் ஹென்றி. துரைக்கண்ணுவுக்கு கைக்குழந்தையோடு சேர்த்து மொத்தம் ஆறு குழந்தைகள். அத்தனை குழந்தைகளுக்கும் தங்களுடைய முன்னோரின் பெயர்களையே வைத்திருந்தான். ஹென்றி அந்த வீட்டை புதுப்பித்து அதில் குடியேறினான். ஹென்றியிடம் இருக்கும் பப்பாவின் போட்டோவை ஆசையாக வாங்கிப் பார்க்கிறான் துரைக்கண்ணு. பத்து நாட்களுக்கு முன் தான் அண்ணன் இறந்தார் என்பதை அறிந்து வருந்துகிறான் துரைக்கண்ணு. துரைக்கண்ணுவின் குடும்பம் ஹென்றியுடன் சேர்ந்து பாட்டு பாடி மகிழ்கிறார்கள். ஹென்றி பாடிய பாட்டுக்கு தேவராஜன் விசிலடித்து பாடுகிறான். 

அண்ணன் கிறித்துவ மதத்துக்கு மாறிவிட்டாரா என்று ஹென்றியிடம் கேட்கிறான் துரைக்கண்ணு. அதற்கு அம்மா மட்டும் தான் கிறிஸ்டின் அப்பா எப்பவும் போலவே இருந்தார், நான் மதமற்றவன் என பதிலளிக்கிறான் ஹென்றி. இந்து முறைப்படி தான் இறுதி காரியம் செய்யனும் என்று பப்பா எழுதி வைத்திருந்ததை சொல்கிறான் ஹென்றி. 

பப்பா கண்ண மூடி யோசிக்கிறார் போல என்று அவரின் கையை பிடித்திருந்த ஹென்றிக்கு அப்பாவின் கை கனத்த பிறகு தான் அப்பா இறந்துவிட்டார் என்பது தெரிய வருகிறது. பப்பாவின் பணம் 26 ஆயிரம் ரூபாய் கையிலிருப்பதை துரைக்கண்ணுவிடம் சொல்கிறான் ஹென்றி. பிறகு பேங்க் பற்றி விசாரிக்கிறான். பிறகு துரைக்கண்ணுவின் மாமியார் பஞ்சவர்ணத்தம்மாளிடம் பேச்சு கொடுக்கிறான். அந்தம்மா ஹென்றியின் அப்பா தாத்தாவை பற்றியெல்லாம் கூறுகிறது. பிறகு ஹென்றிக்கு தேசிங்குராஜா கதையை பற்றி கூறுகிறாள் பஞ்சவர்ணத்தம்மாள். நிர்வாணமாக ஆற்றில் குளித்தவள் பற்றி தேவராஜன் மற்றும் ஹென்றியிடம் பேசினான் துரைக்கண்ணு. அந்தப் பெண்ணிடம் புளியங்காய் வாங்கித் தின்றதை கூறுகிறான். 

பாண்டு பையன் மணியக்காரர் சாராயம் குடித்ததற்காக போலீஸ் பிடித்து செல்கிறது என சொல்ல தேவராஜனும் துரைக்கண்ணுவும் போலீஸ் ஸ்டேசனுக்குச் செல்கிறார்கள். ஹென்றி துரைக்கண்ணுவின் வீட்டிலியே இருக்கிறான். ஹென்றியிடம் பாண்டு பையன் கள்ளுக்கடைக்கு எதிராக காந்தி பேசியது பற்றி பேசுகிறான். துரைக்கண்ணுவும் தேவராஜனும் வீடு திரும்புகிறார்கள். துரைக்கண்ணு மணியக்கார கவுண்டரை ஜாமினில் எடுத்ததை சொல்கிறான். 

ஹென்றி தன் வீட்டை புதுப்பிக்கிறான். மணியக்கார ராமசாமி கவுண்டர் போலீஸ் ஸ்டேசன் சென்று வந்த அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். ஹென்றியின் வீட்டு வேலை முடிந்ததும் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க ஆலோசிக்கிறார்கள் தேவராஜனும் துரைக்கண்ணுவும். கதை பேசிவிட்டு தேசிகர் வீடு திரும்ப நிர்வாணப் பெண் அங்கு ஒளிந்திருப்பதை கண்டு அவளை விரட்டுகிறார். ஹென்றியோ அவளை பேபி பேபி என அழைக்கிறான். துணி கொடுக்கிறான். அவள் அந்தத் துணியை வாங்கி போர்த்திக் கொள்கிறாள். யார் பெத்த குழந்தையோ என்று துரைக்கண்ணு சொல்ல அந்தப் பெண்ணை போல தானும் யாரோ பெற்ற குழந்தை தானே என்று நினைத்துப் பார்க்கிறான் ஹென்றி. 

அந்தப் பெண்ணை அக்கம்மாவோடு அனுப்பி வைக்கிறான் ஹென்றி. பேபியை குளிப்பாட்ட தையநாயகியை வர சொல்கிறாள் அக்கம்மா. அக்கம்மா வீட்டுக்கு தையநாயகி வருகிறாள். அக்கம்மாவின் இன்னொரு தோழி கிளியாம்பா தன் கைக்குழந்தையுடன் அக்கம்மா வீட்டிற்கு வருகிறாள். அக்கம்மாளும் கிளியாம்பாளும் புளி அரிந்துகொண்டே கதை பேசுகிறார்கள். பேபி அவளாகவே குளித்துக் கொண்டு பொருந்தாத ஜாக்கெட்டை அணிந்து வர அவளுக்கு பொருத்தமான ஜாக்கெட்டை எடுத்துவர தன் வீட்டிற்குச் செல்கிறாள் கிளியாம்பாள். 

ஹென்றி தன் வீட்டிற்கு கிரகபிரவேசம் செய்ய நினைக்கிறான். போஸ்ட் ஐயரிடம் தேவராஜூடன் சென்று நாள் பார்த்து வருகிறான். தேவராஜனின் மனைவி கனகவல்லி ஊருக்கு வருகிறாள். கிரகப் பிரவேசம் நடக்கிறது. 

பிடித்த வரிகள்: 

  1. ஆத்திரம் வந்தா அறிவு மட்டுமல்ல ஒழுக்கம் கூடக் கெட்டுப் போகுது… 
  2. இன்னோருத்தரை நம்ப மனசாலே கெடுத்தா அதுகூடத்தாங்க ஒழுக்கங்கெட்ட காரியம்… 
  3. வாழ்க்கையிலே துன்பப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். துன்பப்படுத்துகிறவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதை புரிந்துகொள்கிறவர்கள் தான் ரொம்பக் குறைவு. 
  4. ஜனங்க இல்லாத இடமே ஒரு அழகாத்தான் இருக்குது… 
  5. ஒண்ணு நியாயமாகவும் இன்னொண்ணு அநியாயமாகவும் இருந்தாக்கா தீர்ப்பு சொல்றது நமக்கு சுளுவு. ரெண்டு நியாயத்துக்கு நடுவிலே போய்த் தீர்ப்பு சொல்லவே கூடாது. இப்போ நான் சொல்றதுகூட ஒரு யோசனைதான். 
  6. தப்பு பண்ணினவன கூட நல்ல காரியம் செய்ய வைக்குற தண்டனை பெரிய நாகரிகம்
  7. அவுரு இருந்த ஊரிலே போயி இருந்தா அவுரோட இருக்கற மாதிரி இருக்குனுதான் இங்கே வந்தேன், அவுரு ஞாபகமா அந்த வீடு ஒண்ணு போதும், அதுகூட இல்லாட்டி இந்த ஊரே போதும்னு சொல்லிச்சி… 
  8. ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும். 
  9. ஆடைதானே நம் நாகரிகத்தின் குறைந்தபட்ச அடையாளம்
  10. கிராமத்து எளிமை அது இதுன்னு பேசி நகரமும் அங்கேயிருக்கிற ஆடம்பரமும் கிராமத்தைக் கொள்ளையடிக்குது

புதிய தகவல்கள் : 

  1. கடலைன்னும் வேர்க்கடலைன்னும் சொல்லப்பட்றத ஏன் மல்லாக்கொட்டைனு சொல்றாங்க? 

மணிலாக் கொட்டைங்கறதுதான் மல்லாக்கொட்டைன்னு கலோக்கியலா ஆயிடுச்சு. இது தென்னாப்பிரிக்காவிலிருந்து இங்கே வந்திருக்கணும். மணிலாவிலிருந்து வந்ததனால மணிலாக்கொட்டைன்னு பேரு. 

  1. பரியாறி என்றால் நாவிதன் என்று அர்த்தம். 
  2. பெங்களூர் பக்கம் எல்லாம் கவுடர்னு சொல்றாங்களே? 

அவுங்க வேற… இவங்களுக்கு வேளாளக் கவுண்டர்னு பேரு. 

  1. நொய் என்பது கூழில் சேர்க்கப்படும் ஒரு பொருள்
  2. அப்பீட் என்பதன் அர்த்தம் அப் – ஹிட். 
  3. அம்பேல் என்பது ( i am on bail ) ஐ யாம் ஆன் பெய்ல். வேகமாக சொல்லிப் பார்த்தால் ஐயம் ஆம்பேய்ல், அய்ம்பேல் – அம்பேல்
  4. ஐ ஸ்பை விளையாட்டு என்பதன் அர்த்தம் I Spy
  5. சாயகால் – இன்புளூயன்ஸ்

அட்டகாசமான தருணங்கள் : 

  1. மண்ணாங்கட்டி என்ற கிராமத்து இளைஞனுக்கு ஹென்றி கை கொடுக்க… 

” மை நேம் இஸ் மண்ணாங்கட்டி ” என்று சொல்லி ஹென்றியின் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டுப் பெருமிதத்தோடு நிமிர்ந்து நடந்த மண்ணாங்கட்டி மாடிப் படிகளில் துள்ளித் துள்ளிக் குதித்து இறங்கினான்… என்ற இடம் அருமை. 

  1. தேவராஜனும் ஹென்றியும் மண்ணாங்கட்டியும் மாறி மாறி சிரித்துக் கொண்டு மாடியில் நடனமாடும் இடங்கள் லவ்லி. 
  2. ஹென்றிக்கும் துரைக்கண்ணுக்கும் சொத்து பிரச்சினை குறித்த பஞ்சாயத்து உணவு இடைவெளியில் அண்ணனின் மகன் ஹென்றியின் முன் துரைக்கண்ணு பம்பரம் விட்டு சந்தோசப்படும் இடம் அருமை. 
  3. சபாபதிப் பிள்ளைக்கு மவனானப்பறம் மொட்டையா ஹென்றின்னு போட்டா எப்பிடிங்க? ஹென்றிப் பிள்ளைன்னு போடுங்க… இந்த இடம் சிரிப்பை வரவைத்தது. சாதி வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது இந்த வரி. 
  4. ஆற்றில் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்த பெண் அருகே துரைக்கண்ணு செல்ல அவள் புளியமரத்தடியில் அமர்ந்து புளியங்காய் தருகிறாள். அதை சட்டைப் பையில் வைத்துக்கொள்கிறான் துரைக்கண்ணு. அதை பார்த்த துரைக்கண்ணுவின் பிள்ளைகள் அப்பா சின்ன பிள்ள மாதிரி புளியங்கா திங்குது என்று பேசி சிரிக்கிறார்கள். 
  5. ஹென்றி அங்கே உட்கார்ந்து கொண்டு மனிதர்கள் வேலை செய்கிற அழகை மரத்தில் பறவைகள் கூடு கட்டுவதைப் பார்க்கிற மாதிரி வேடிக்கை பார்க்கிறான். 
  6. நிர்வாணப் பெண்ணை ஹென்றி பேபி என அழைக்கும் இடம் அருமை. 

அத்தியாயம் ஒன்று சுவாரஸ்யமாகச் செல்கிறது. அத்தியாயம் இரண்டில் ஹென்றியின் பப்பா, மம்மி இருவரும் பற்றிய கதைகள் வருகின்றன. அவை அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. அதே சமயம் பூட்டப்பட்ட வீடு யாருடையது அதன் சொந்தக் காரர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றிய கதை அத்தியாயம் இரண்டில் விரிகிறது. அத்தியாயம் மூன்று மீண்டும் தேவராஜடனுனான பயணமாக விரிகிறது… உண்மையில் அத்தியாயம் மூன்று படு சுவாரஸ்யமாகச் செல்கிறது. பக்கிரி, தேசிகர், நடராஜன் அய்யர் என்று பல மனிதர்கள் அறிமுகமாகிறார்கள். அத்தியாயம் நான்கு இன்னும் படுசுவாரஸ்யமாகச் செல்கிறது. பஞ்சாயத்து நடக்கும் இடங்கள் எல்லாம் செம இன்ட்ரஸ்ட்டாக சென்றது. அத்தியாயம் ஐந்தில் துரைக்கண்ணுவின் குடும்பத்துடன் ஹென்றி பழகியதை கூறுகிறார்கள். இதுவும் நன்றாகவே செல்கிறது. அத்தியாயம் ஆறில் பேபி என்ற பெண் பற்றிய கதை சுவாரஸ்யமா செல்கிறது. ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை என்பது ஆறுதல். கடைசி அத்தியாயத்தில் ஹென்றிக்கும் பேபிக்கும் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கையில் எழுத்தாளர் வேற ஒரு டுவிஸ்ட்டை வைத்து கதையை முடிக்கிறார். கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்களுள் இந்த நாவலும் ஒன்று. 

Related Articles

ஹர்பஜனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் சின்... கடந்த சில நாட்களாகவே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்து வருகிறார். அவருடைய தமிழ் ஆர்வத்தை வைத்தும் லொள்ளு நெட்டிசன்கள் மீம் போட ...
“உணவின் வரலாறு” புத்தக விமர்... குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்து பிறகு பாதியில் நிறுத்தப்பட்டு இப்போது முழு புத்தகமாக வடிவம் கொண்டிருக்கும் புத்தகம்தான் "உணவின் வரலாறு".ம...
மனசுல அலைபாயுதே மாதவன்னு நினைப்போ! ̵... பெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் அவரை கேலி செய்யும் விதமாக பதிலளித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.அதி...
அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குற... பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். பசிக்கும் போது பயமில்...

Be the first to comment on "ஜெயகாந்தனின் ” ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ” நாவல் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*