சகாயம் ஐஏஎஸ் நேர்மையானவர், பெப்சி கம்பெனிக்கு சீல் வைத்தவர் போன்ற ஒன்றிரண்டு தகவல் நாம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் அவருடைய பல அதிரடியான நடவடிக்கைகளை நாம் அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள திரு. ராஜா திருவேங்கடம் எழுதிய சகாயம் சந்தித்த சவால்கள் புத்தகத்தை படிப்பது அவசியம். சகாயம் பற்றிய சில தகவல்களை இங்கு கொடுத்துள்ளோம்.
- சிறு வயதில் செட்டியார் தோட்டத்தில் விழுந்து கிடந்த மாங்காயை காவக்காரன் அனுமதியில்லாமல் வீட்டிற்கு எடுத்து வந்தார் சகாயம். அடுத்தவங்க பொருள அனுமதியில்லாம எடுக்கறதும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படறதும் தப்புனு அவங்க அம்மா திட்ட அன்று முதல் சகாயம் நேர்மையை கடைபிடித்து வருகிறார். ஆக அவருக்குள் நேர்மை எனும் விதையை விதைத்தவர் அவருடைய அம்மா தான்.
- ஆங்கில நாட்டின் பிரதம அமைச்சராக விளங்கிய சர். ராபர்ட் வால்போல் ‘ All those men have their price ‘ என்று ஆட்சியாளர்களைப் பார்த்து நேர்மையற்றவர்கள் என்ற பொருளில் குறிப்பிட்டதை பொய்யாக்க விரும்பினார் சகாயம்.
- புதுக்கோட்டைக்கு பக்கத்துல இருக்குற பெருஞ்சுனைங்கற குக்கிராமம் தான் அவருடைய சொந்த ஊர்.
- உபகாரம் பிள்ளை – சவரியம்மாள் தம்பதியருக்கு ஐந்து ஆண் பிள்ளைகள். அதில் கடைசி மகன் தான் சகாயம். அவருடைய சித்தப்பா அருளாந்து பிள்ளை தான் அவருக்கு ரோல்மாடல். சித்தப்பா அருளாந்து கல்குவாரி நடத்தி வந்தவர், தன்னிடம் வேலைபார்த்தவர்களுக்கு கூலி உயர்வு கொடுத்து மக்கள் மனதில் நின்றவர்.
- சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்பதற்கேற்ப படிப்பில் முதன்மையான மாணவராக இருந்த சகாயம் கலெக்டராக வேண்டும் தொடர்ந்து ஊக்கமளித்தவர் அவருடைய நாராயணசாமி சார்.
- பள்ளிக்கூடப் படிப்பை முடிச்சபோது தான் கலெக்டர் ஆகணும்னா என்ன படிக்கணும் என்ற விவரமே அவருக்கு தெரிய வந்தது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி. ஏ. வரலாறு சேர்ந்து படித்தார். அங்கே வரலாற்றுத் துறை பேராசிரியராக இருந்த வைத்தியநாதன் அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.
- மன்னர் கல்லூரியில் ஒவ்வொரு வருஷமும் தர்மராஜ பிள்ளை தங்கமெடல் பேச்சுப் போட்டி நடக்கும். அந்தப் போட்டியில் ஒரு முறை பரிசு பெற்றால் இரண்டாவது முறை தரமாட்டார்கள். ஆனால் சகாயம் அவர்களுக்கு தொடர்ந்து இரண்டு முறை அந்த மெடல் கிடைத்தது.
- தினமும் கலெக்டர் பங்களாவைத் தாண்டி தான் கல்லூரிக்குப் போவார். கலெக்டர் பங்களா வாசல்ல ‘ கற்பூர சுந்தரபாண்டியன் ஐ.ஏ.எஸ் ‘ என்று பெயர்பலகை இருக்கும். அந்தப் பலகையில் ஒருநாள் தன் பெயர் வரும் என கனவு கண்டு லட்சியத்தோடு செயல்பட்டார் சகாயம்.
- லயோலா கல்லூரியில் முதுகலை சமூகப் பணி படித்தார். லயோலா கல்லூரியில் அவர் படித்த சமயத்தில் ஒருமுறை பீஸ் கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தில் புத்தகம் வாங்கிவிட்டார். பீஸ் கட்ட 400 ரூபாய் குறைவாக இருந்தது. அந்தக் காலத்தில் 400 ரூபாய் என்பது பெரிய தொகை. லயோலா கல்லூரியில் வருடம் தோறும் மச்சோடா அறக்கட்டளை கட்டுரைப் போட்டி நடக்கும். ஸ்பாட்டில்தான் தலைப்பு தருவார்கள். அவரும் கட்டுரை போட்டிக்குப் போனார், கட்டுரை எழுதினார், முதல்பரிசு 500 ரூபாய் வென்றார். பீஸ் கட்டிவிட்டு மீதி இருந்த பணத்தில் நண்பன் ஒருவனுடன் பிரியாணி சாப்பிட்டது இன்றும் அவர் நினைவில் இருக்கிறது.
- அதன் பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் பி. எல். சேர்ந்தார். அங்கு அவருக்கு கிடைத்த நண்பர் தான் திருப்பதிசாமி. பேச்சுப்போட்டி எங்கு நடந்தாலும் அவரும் அவருடைய நண்பர் திருப்பதி சாமியும் கிளம்பிவிடுவார்கள். அண்ணா நகர் தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் 1987ம் வருஷம் நடந்த பேச்சுப் போட்டியில் நண்பருடன் சேர்ந்து ‘ ஈழம் இன்று நேற்று நாளை ‘ என்ற தலைப்பில் பேசி முதல் பரிசை வென்றனர். படிக்கும்போது விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் திருப்பதிசாமி தேர்வானார். படிப்பு முடிந்ததும் அவர் சினிமா பக்கம் போக சகாயம் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார். பல வருட போராட்டத்துக்கு பிறகு திருப்பதிசாமி ஒரு படத்தை இயக்கினார், அந்தப் படம் முடிவதற்குள் விபத்து ஒன்றில் அகால மரணமடைந்தார் திருப்பதிசாமி. அவருடைய இறப்பு சகாயத்தை மிகவும் பாதித்தது.
- மதுரையில் இருந்த சொந்தக்கார பெண் விமலாவை அரேன்ஜ் மேரேஜ் செய்து கொண்டார். இவர்களுக்கு திலீபன், யாழினி என்று இரண்டு குழந்தைகள் உள்ளன.
- கோவையில் கலால் துறையில் டெபுடி கமிஷனராக சகாயம் பணியாற்றியபோது அவருடைய மகள் யாழினிக்கு உடல்நலம் குன்றிவிட உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல். உடனடியாக 5000ம் பணம் தேவைப்பட அந்த அவசர சூழலில் கூட நேர்மையை தவறவிடாமல் கள்ளக்குறிச்சி ஆசிரியர் கண்ணனிடமிருந்து 5000ம் ரூபாயை கடனாக பெற்றார். அப்போது சகாயம் நினைத்திருந்தால் ஒயின்ஷாப் ஓனர்களிடம் இருந்து லட்சம்லட்சமாக கறந்திருக்க முடியும். ஆனால் அவசர சூழலிலும் சகாயம் அதை செய்யவில்லை.
- தமிழக வரலாற்றிலேயே தனியார் மதுபானக் கடைகளின் உரிமத்தை தபாலில் அனுப்பி புரட்சி செய்தவர் சகாயம்.
- வேலைக்கு சேர்ந்து 13 வருஷம் வரைக்கும் சகாயத்திற்கு வங்கியில் அக்கௌன்ட் கிடையாது. லோன் வாங்குறதுக்காகத் தான் முதன்முறையாக வங்கியில் அக்கௌன்ட் ஆரம்பித்தார்.
- 21 ஆண்டு காலப் பணியில் 21 முறை பணிமாற்றல் செய்யப்பட்டிருக்கிறார் சகாயம்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தின் டிஆர்ஓவாக இருந்த காலத்தில் மதுராந்தகத்தில் உள்ள பெப்சி கம்பெனிக்கு எட்டு பூட்டுகள் போட்டு சீல் வைத்து நாட்டையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெப்சி விற்க தடை விதித்தார். அடுத்த நாள் நான் பெப்சிக்கு சீல் வைச்சது பற்றி எந்த பத்திரிக்கையிலும் செய்தி வரவில்லை. வராமல் பார்த்துக்கொண்டார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூனியர் விகடனில் அவர் பெப்சிக்கு சீல் வைத்தது பற்றி விலாவாரியாக எழுதி இருந்தார்கள். அதன் பிறகு தான் இந்த விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிய வந்தது.
- சகாயத்துக்கு மிகவும் பிடித்தமான பொன்மொழி : அமைதியான கடல் ஆற்றலுள்ள மாலுமியை உருவாக்காது!
- நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த சமயத்தில் அவருக்கு உதவியாளராக இருந்தவரின் பெயர் மாதேஸ்வரன்.
- நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த சமயத்தில், ‘ மதுரையில் 9 லட்ச ரூபாய் மதிப்பில் எல். ஐ. சி ஹவுசிங் லோனில் ஒரு வீடு, பேங்க் பேலன்ஸ் 7172 ரூபாய் என பகிரங்கமாக தன் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். இந்தியாவிலயே முதன்முறையாக சொத்துப்பட்டியலை வெளியிட்ட கலெக்டர் திரு சகாயம் அவர்களே.
- பெற்றோரை கவனிக்காமல்விடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க, ‘ பெற்றோர் மற்றும் முதியோர் வாழ்க்கைப் பொருளுதவி சட்டம் ‘ ஒன்றை 2007ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. அந்தச் சட்டம் தமிழகத்தில் முதன்முறையாகப் பாய்ந்தது சகாயம் கலெக்டராக இருந்த நாமக்கல் மாவட்டத்தில் தான்.
- வேலைக்கு சேர்ந்த நாள் முதல் தன் அம்மாவுக்கு மாதம்தோறும் மணியார்டரில் பணம் அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தார் சகாயம். பணத்தை வாங்கிக்கொண்டு அக்னாலெட்ஜ்மென்டில் அவரது அம்மா கைரேகை வைத்து அது திரும்பிவரும். அவற்றையெல்லாம் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறார் சகாயம்.
- பாரதிராஜாவின் ‘தமிழ்ச்செல்வன்’ படத்தில் நேர்மையான கலெக்டராக நடித்திருப்பார் விஜயகாந்த். அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்காததால் ஒரு கலெக்டர் எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறார் என்பது அந்தப் படத்தில் அப்பட்டமாக காட்டப்பட்டிருக்கும். தமிழ்ச்செல்வனை எந்த துறைக்கு மாற்றினாலும் அந்தத் துறையில் நேர்மையாக நடப்பார். அங்கே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்பார். அந்தப் படம் யாரை மனதில் வைத்து பாரதிராஜா இயக்கினார் என்பது தெரியாது. ஆனாலும் படம் முழுவதுமே சகாயத்தை நினைவுபடுத்தும்.
- வேட்டி தினம் என்ற ஒன்றை உருவாக்கினார். உழவன் உணவகத்தை தொடங்கி வைத்தார்.
- உயர உயரப் பற… வானம் ஒருநாள் வசமாகும் – இது சகாயம் தன் குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி வளர்க்கும் வரிகள்.
திரு ராஜாதிருவேங்கடம் எழுதிய சகாயம் சந்தித்த சவால்கள் புத்தகத்திலிருந்து இந்த தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன. சகாயம் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கிடைக்கிறது. விலை 80 மட்டுமே.
புத்தகத்திலிருந்த சில மேற்கோள்கள் :
- ஒரு லட்சம் ரூபாயை என்னிடம் கொடுத்துவிடுங்கள் ஒரு மகா அயோக்கியனை யோக்கியனாக இந்த சமூகத்தில் விளம்பரப்படுத்தி பிரபலபடுத்திக் காட்டுகிறேன்.
– பெரியார்
- இந்த உலகத்தால எல்லா மனிதர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலும், ஆனால் ஒரு தனிமனிதனின் பேராசையை நிறைவேற்ற ஒருநாளும் அதனால் முடியாது
– மகாத்மா காந்தி
- மனிதனுக்கு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அளிக்கக் கூடியது மரம் மட்டுமே. புத்தனுக்கு போதி மரம் என்றால் நியூட்டனுக்கு ஆப்பிள் மரம்!
– சகாயம் ஐஏஎஸ்
- இப்புவியில் நான் வந்து செல்வது ஒரு முறைதான். எனவே நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். இதைத் தள்ளி வைப்பதற்கோ தவிர்ப்பதற்கோ இடமில்லை. ஏனெனில் மீண்டும் ஒரு முறை நான் இப்புவியில் வரப்போவதில்லை
– பென்னிகுக்
Be the first to comment on "மதுபான கடைகளை அடித்து நொறுக்கிய சகாயம்! கலெக்டர் சகாயம் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள்!"