“ஓ மண பெண்ணே” படத்தின் நிறை குறைகள்!

Mass grievances of the Oh Manapenne movie

ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கர் அன்புதாசன் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவான படம் ஓ பெண்ணே.  வேற்று மொழியிலிருந்து ரீமேக் செய்த இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். 

கதை சுருக்கம்: 

 வேலை வெட்டி இல்லாத ஹீரோவிற்கு கல்யாணம் செய்துவைத்தால் ஹீரோ பொறுப்பான மனிதனாக வாழ்வான் என்று நினைத்து அவருடைய அப்பா அம்மா நண்பர்கள் அவனுக்கு பெண் பார்க்கச் செல்கிறார்கள். பெண் பார்க்க சென்ற இடத்தில் ஹீரோவும் ஹீரோயினும் ஒரு தனி அறைக்குள் மாட்டிக் கொள்கிறார்கள். அப்போது இருவரும் அமர்ந்து தங்களுடைய கடந்த கால நினைவுகளை பேசுகிறார்கள்.  ஹீரோவிற்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்பது தெரியவில்லை அதே ஹீரோயினுக்கு பணம் எப்படி சம்பாதிப்பது என்பது நன்கு தெரிகிறது ஆனால் அதை உடனிருந்து துணையாக இருக்கக் கூடிய மனிதர்களை எப்படி சம்பாதிப்பது என்பது தான் தெரியவில்லை. இப்படிப்பட்ட இரு மனிதர்களும் இணைந்து ஒரு சமையலறை வண்டியைத் தயார் செய்கிறார்கள். 

அந்த வண்டி என்ன ஆனது… ஹீரோவும் ஹீரோயினும் நல்ல நிலைமைக்கு வந்து பணம் சம்பாதித்தார்களா? அவர்களை சுற்றி இருந்தவர்கள் எப்போதுமே திட்டிக் கொண்டு இருந்தவர்கள் இப்போது அவர்களை பாராட்டி பேசினார்களா ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை சுருக்கம். 

நிறைகள்: 

  1. படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். அவ்வளவு உணர்வுபூர்வமாக எடுத்திருந்தார்கள். அதாவது ஹீரோவும் ஹீரோயினும் சேரத்தான் போகிறார்கள் என்பது நமக்கு முன்பே தெரிந்திருந்தாலும் நமக்குள் ஒரு பதட்டத்தை ஏற்படுத்துகிறது திரைக்கதை. அதற்காக இயக்குனரை பாராட்டலாம். 
  2. மாஸ் சீன்கள் வைக்கிறேன் என்ற பெயரில் ஹீரோயிசம் காட்டாமல் ஹீரோவை ஒரு எளிமையான அதாவது சாதாரண இளைஞனாக காட்டியது படத்தின் இன்னொரு பலம். 
  3. கொஞ்சம் பிசகி இருந்தாலும் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் ஒரு நாள் கூத்து படத்தின் கிளைமாக்ஸை போல மாறி விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் வித்தியாசமாக செய்கிறேன் என்ற பெயரில் இயக்குனர் எதுவும் புதிதாக முயற்சி செய்யாமல் பழைய போக்கிலேயே விட்டு திரைக்கதையில் புதுமை செய்தது படத்தின் இன்னொரு பலம்.
  4. அதேபோல படத்தில் நடித்திருந்த எந்த கதாபாத்திரமும் மரணமடையவில்லை. ஒருவேளை ஏதாவது ஒரு கதாபாத்திரம் மரணம் அடைவது போல் காட்டி இருந்தால் இந்த படம் மிக எளிதாக ராஜா ராணி படத்தை நினைவு ஊட்டிருக்கும். 
  5. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நன்றாக இருந்தன. குறிப்பாக இசையமைப்பாளர் வாசிக்கிறேன் என்ற பெயரில் போட்டு தீட்டு தீட்டு என்று தீட்டாமல் அளவாக வாசித்திருக்கிறார். போதை கனமே என்ற பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
  6. காமெடி காட்சிகள் வைக்க வேண்டும் என்று எந்த காட்சிகளும் வலிந்து திணிக்காமல் இயல்பாய் வைத்த காட்சிகள் ஓரளவுக்கு சிரிப்பு வர வைக்கின்றன. இப்போதெல்லாம் காமெடி காட்சிகள் எரிச்சலூட்டும் வகையில் தான் இருக்கின்றன. எரிச்சலூட்டும் வகையில் அல்லது சிரிக்க வைக்க முடியாத வகையில் நிறைய காட்சிகள் இருக்கின்றன. 
  7. படத்தில் நடித்திருந்த எல்லோருடைய நடிப்பும் மிக நன்றாக இருந்தது. எல்லோரும் அளவெடுத்து நடித்தது போல் மிக கச்சிதமாக நடித்து இருந்தார்கள்.
  8. இந்த படம் வெறுமனே காதல் படமாக மட்டும் அமையாமல் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் அமைந்தது படத்தின் மிகப்பெரிய பலம்.
  9. மிக மிக எளிமையான கதையை தேர்வு செய்ததற்கு இயக்குனரை பாராட்டலாம். வெற்றிக்கொடிகட்டு போன்ற படங்களில் சுயதொழில் செய்பவர்களை காட்டி இருப்பார்கள். அந்த வகையில் சுய தொழில் செய்யும் காட்சிகள் எல்லாம் வெற்றிக்கொடி கட்டு படத்தை நினைவூட்டி இருந்தாலும் சலிப்பை தரவில்லை. 
  10. ஈகோ உடன் வாழ்வது தவறு ஏதாவது ஒரு கட்டத்தில் யாராவது ஒருவர் ஈகோவை தூக்கி எறிந்து விட்டால் தான் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் பிடித்தமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை காட்டி இருந்தது சிறப்பான விஷியம்.  
  11. ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் நல்ல ஜோடியாக தெரிகிறார்கள். நல்ல நடிப்புத் திறமை இருந்தும் இருவரும் இன்னும் பெரிய அளவில் ஒளிரவில்லை வளரவில்லை… இவர்கள் இருவரும் ஓ மண பெண்ணே மாதிரியான வேற்று மொழிப் படங்களை ரீமேக் செய்து நடித்தால் அவர்களின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் பலன் கிடைக்கும். 
  12. “நீ பிரேக்கப் செஞ்சது தப்பு இல்ல… அந்த பிரேக்கப்ப ஒழுங்கா செய்யாம இருந்த பாரு… அதுதான் தப்பு…” போன்ற வசனங்கள் கவனம் பெற்றன. 
  13. ஒரு பெண் கதாபாத்திரத்தை இவ்வளவு வலிமையானதாக அமைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள் என்று சொல்லும் அளவிற்கு பிரிய பவனி சங்கர் சிறப்பாக நடித்து இருந்தார். 
  14. கொஞ்ச நேரமே வந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற அஸ்வின் நல்ல நடிப்பின் மூலம் தனி கவனம் பெறுகிறார்.  அவருடைய அறிமுக காட்சியில் ஹீரோயினை தொந்தரவு செய்து காதலிக்க வைப்பது போல் நடித்து இருந்தார். அந்த காட்சிகளை அவர் மீது வெறுப்பை உண்டாக்கினாலும் இரண்டாம் பாதியில் அவர் திரும்பிவந்து ஹீரோயினிடம் மன்னிப்பு கேட்கும் காட்சி அவர் மீது நல்ல மரியாதையை வர செய்தது. 

குறைகள்: 

  1. ஹீரோவும் ஹீரோவின் நண்பர்களும் சேர்ந்து கொண்டு குடித்து காலம் கழிக்கிறார்கள். குடிக்கும் பழக்கம் இருக்கும் ஒருவன் கஷ்டப்பட்டால் என்ன அவன் செத்தால் என்ன என்பது போன்ற மாதிரியான எண்ணங்கள் ரசிகர்களுக்கு வர வாய்ப்பிருக்கிறது.  ஆதலால் ஹீரோ குடிப்பது மாதிரியான காட்சிகளை வைக்காமல் இருந்திருக்கலாம். 
  2. எந்த ஒரு உழைப்பும் இல்லாமல் பணம் கிடைத்தால் போதும் யார் பணம் தந்தாலும் வாங்கிக் கொள்வேன் அதற்காக ஒரு பெண்ணை திருமணம் கூட செய்து கொள்வேன் வரதட்சனை வாங்குவது என்னைப் பொறுத்தவரை நல்ல செயல்தான் என்பதை எல்லாம் ஹீரோ ஏற்றுக்கொள்ளும் படியான காட்சிகள் தவறாக தெரிந்தன. 
  3. ஹீரோவும் ஹீரோவின் நண்பர்களும் சேர்ந்து கொண்டு புதிதாக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார்கள். அதில் சமையல் வீடியோக்கள் செய்து வீடியோக்கள் பதிவிடுகிறார்கள். அந்த வீடியோக்களுக்கு மொத்தமாக பத்தாயிரம் பார்வைகள் வந்திருக்கிறது. அதன் மூலம் 500 ரூபாய் முதல் மாத சம்பளமாக சம்பாதிக்கிறார்கள். யூடியூபை பொருத்தவரை போகப்போக தான் அதில் வருமானம் வரும்.   கண்டிப்பாக யூடியூப் இன்றைய இளைஞர்களுக்கு கைக்கொடுக்கும் ஒரு நல்ல ஆயுதமாக தான் இருக்கிறது.  ஆனால் இந்த படத்தில் யூடியூபே நம்பி கெட்டு போக வேண்டாம் என்பதுபோல் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். யூடிபில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் பொறுத்து இருத்தல் மிக அவசியம். அதனை இந்தப் படம் சொல்ல தவறு இருக்கிறது என்பது படத்தின் மிகப்பெரிய மைனஸ். 
  4. ஹீரோ வரதட்சனை வாங்குவது எனக்கு தவறான செயலாக தெரியவில்லை என்று கூறுவதும் ஒரு ஹோட்டலில் பொய் சொல்லி ஏமாற்றி விட்டு பொருட்களை வாங்கி ஓடி வருவதும் சிறப்பான காட்சிகளாக தெரியவில்லை. அதெல்லாம் ஹீரோ குற்ற உணர்ச்சியே இல்லாமல் வாழ்கிறான் என்பதைத்தான் பிரதிபலித்தன. இவை ஹீரோயிசம் இல்லாத ஒரு சினிமாவாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
  5. அதேபோல் இந்த படம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் கஷ்ட காலங்களை எடுத்துக் கூறுகிறது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த வார்த்தைகளையெல்லாம் படம் பார்க்கும்போது நினைத்துப் பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது. சொந்தமாக கார் வைத்து இருக் கும் ஆங்கிலத்தில் பேசும் அப்பாக்கள் இருக்கும் வீடுகள் எல்லாம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வீடுகள் அல்ல. வீட்டிற்குள் இருக்கும் போதே செருப்பு போட்டுக்கொண்டு நடக்கும் மனிதர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்கள் அல்ல. இவர்களில் யார் கஷ்டப்பட்டால் என்ன கஷ்டப் படாமல் இருந்தால் என்ன இவர்களுக்கு என்ன குறைச்சல் என்று ரசிகர்களுக்கு தோன்ற வைக்கிறது சில காட்சிகள். 
  6.   ஒரு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் தராமல் ஓடி வருகிறார் ஹீரோ. அதைத் தெரிந்துகொண்ட ஹீரோயின் ஹீரோவை கடுமையாக  திட்டி விட்டு அவரிடம் இருந்து பிரிந்து செல்கிறார் இந்த காட்சிகளுக்குப் பிறகு ஹீரோ ஹீரோயின் வீட்டிற்கு போய் உங்க மகள் மகாலட்சுமி தங்கமானவள் அவளுக்கு ஆஸ்திரேலியா செல்ல தான் விருப்பம் அவளுக்கு அதற்கு முன்னர் திருமணம் செய்து வைக்காதீர்கள் என்று பேசுகிறார் ஹீரோ. இவை சம்பந்தமில்லாத திரைக்கதைக்காக வலிந்து எடுக்கப்பட்ட காட்சிகளாக தெரிந்தது. 
  7.   அதற்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ஹீரோவின் யூடியூப் சேனலில் இருக்கும் சமையல் வீடியோவை பார்த்து அந்த தின்பண்டத்தை செய்துகொண்டு ஹீரோவின் வீட்டிற்குச் செல்கிறார் ஹீரோயின். ஹீரோவின் வீட்டிலுள்ள அப்பா அம்மா எல்லோரிடமும் ஹீரோவின் ஆசை என்ன ஹீரோவின் லட்சியம் என்ன என்பதை எடுத்துக் கூறுகிறார் அதனை ஹீரோவின் அப்பா அம்மா ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தக் காட்சி அப்படியே அசோக் செல்வன் நடித்த “ஓ மை கடவுளே” படத்தை நினைவுக்கு கொண்டு வந்தன. 
  8. தனது கணவனை பார்த்து டேய் என்று சத்தம் போடுவது போல் ஒரு ஹீரோவின் அம்மா பேசி விட்டு அதை அப்படியே வேறு வகையில் சமாளிப்பது மாதிரியான காட்சிகள் முகச்சுளிப்பை தான் தந்தன. அவை கண்டிப்பாக காமெடி காட்சிகள் இல்லை. 

 இந்த படம் கற்றுக்கொடுத்த பாடங்கள்: 

  1. முதலில் நல்ல நண்பர்களை கூட வைத்திருக்க வேண்டும் சேர்க்க நல்லா இருந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும் என்பதை உணர்த்துகிறது சில காட்சிகள். நல்ல நண்பர்களை பெற்றால் நாம் கண்டிப்பாக நல்ல நிலைமைக்கு வரலாம் என்பதை உணர்த்துகிறது இந்த படம். 
  2. மகன் மகள்களை மற்றவர்களைப் போல் வாழ வைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்காமல்… அவர்களுக்கு எது பிடிக்கிறதோ அவர்கள் எதை இலட்சியமாகக் கருதுகிறார்களோ அவற்றைப் பின்பற்ற சொல்லி அதன் மூலம் பணம் சம்பாதிக்க வைத்து அதன் பிறகு திருமணம் செய்து வைப்பது நல்ல பெற்றோர்களுக்கு அழகு என்பதை இந்த படம் கூறியிருக்கிறது. 
  3. எந்த தொழில் செய்தாலும் அது எவ்வளவு சின்ன தொழிலாக இருந்தாலும் தொழிலுக்கு என்று ஒரு தர்மம் இருக்கிறது என்றும் செய்யும் தொழிலில் நேர்த்தி வேண்டும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதை இந்த படம் சிறப்பாக உணர்த்தி இருக்கிறது. 

Related Articles

1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் சிலை... 1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலைகள் மீட...
விருமாண்டி படத்திற்கும் பாக்ஸர் வடிவேலுவ... முதலில் பாக்ஸர் வடிவேலுவை பற்றி பார்த்து விடுவோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பாக்ஸர் வடிவேலு என்பவர் பெயர் அடிக்கடி பத்திரிக்கைகளில் வந்துள்ள...
பெண்கள் அரசியலுக்கு வர தயங்குவது ஏன்? அர... பிரதீபா பாட்டில், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழிசை சவுந்தரராஜன், நிர்மலா சீதாராமன், ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் என்று தற்...
முள்ளும் மலரும் இயக்குனர் மகேந்திரன் கால... இயக்குனர் மகேந்திரன் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு போன்ற படங்களை இயக்கியவர். பல படங்களுக்கு ஒளிப்பதிவ...

Be the first to comment on "“ஓ மண பெண்ணே” படத்தின் நிறை குறைகள்!"

Leave a comment

Your email address will not be published.


*