“இன்றைய காந்திகள்” – புத்தகம் ஒரு பார்வை!  

குக்கூ காட்டுப்பள்ளி நடத்தி வரும் சிவராஜ் என்பவர் நடத்தி வரும் தன்னறம் நூல்வெளி என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியான புத்தகம் தான் பாலசுப்பிரமணியம் முத்துசுவாமி எழுதிய “இன்றைய காந்திகள்” என்ற புத்தகம். 

இன்றைய காந்திகள் என்ற தலைப்பிற்கேற்ப காந்தியடிகள் முறையில் தொண்டுகள் செய்து வரும் பல மனிதர்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். 

உண்மை குடியிருக்கும் சொல் படைப்பூக்கத்தில் வாழ்கிறது காந்தியம் சத்திய சாட்சியங்கள். 

புத்தகத்தில் உள்ள கட்டுரை தலைப்புகள்: 

  1. வர்கீஸ் குரியன் – போற்றப்படாத இதிகாசம்
  2. லக்ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர் 
  3. பங்கர் ராய் – வெறும்பாதக் கல்லூரி
  4. அருணா ராய் – மக்கள் அதிகாரமும் பங்கேற்பு ஜனநாயகமும் 
  5. ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி 
  6. அபய் பங், ராணி பங் – ஆரோக்கிய ஸ்வராஜ்யம் 
  7. சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர்
  8. அரவிந்த் கண் மருத்துவக் குழுமம் – காந்தியத் தொழில்முறை 
  9. இலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர் 
  10. அர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை 
  11. ஜான் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர், மனிதாபிமானி, துறவி என்ற தலைப்புகளின் கீழ் இந்த புத்தகத்தில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு புதிய தகவலை தருகிறது. 

அர்விந்த் குப்தா பற்றி தெரிந்துகொள்வோம்: 

(ஹீரோ படத்தில் அர்ஜூன் நடித்த கதாபாத்திரம் இவரை இன்ஸ்பிரேசனாக வைத்து எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.!)

சீன தேசத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பெண்களுக்குப் ‘பாதம் ஒடுக்குதல்’ என்னும் கொடூர வழக்கம் இருந்தது. சிறிய பாதங்களே பெண்களுக்கு அழகு எனக் கருதப்பட்டது. கால் விரல்கள் கட்டப்பட்டு, குறுகிய காலணிகள் அணிவிக்கப்பட்டு, பல ஆண்டுகள் பெண்களின் கால்கள் பழக்கப்படுத்தப்பட்டால் அவை சிறிதாக, தாமரை மலர்கள் போலாகிவிடும் என நம்பப்பட்டது. அது ஒரு மூடநம்பிக்கை. அத்தகைய குரூரமான முறையினால் பாதங்கள் குறுக்கப்பட்டு, எலும்புகள் வளைந்து, பல கோடிப் பெண்களின் பாதங்கள் சிதைந்து போயின. ஒருவகையில், நம் கல்விமுறையும் இவ்வாறுதான் இருக்கிறது. 50/60களில் ஆசிரியர்களிடம் சென்று, ‘குழந்தைகளை நன்றாக அடித்து, ஒழுக்கத்தைக் கற்பிக்க வேண்டும்’ என வேண்டிக்கொண்ட பெற்றோர்கள் இருந்திருக் கிறார்கள். கையில் பிரம்புடன், கடுமையான முகத்துடன் பள்ளியை மேலாண்மை செய்பவரே திறமையான ஆசிரியர் என்னும் பிம்பம் 80வரைகூட நம் ஊரில் இருந்தது. “ஒருநாள், ஒரு வகுப்புக்கு வரவேண்டிய ஆசிரியர் வரவில்லை. ஆசிரியர் வரவில்லையெனில் குழந்தைகள், குழந்தைகள்போல் நடந்துகொள்வார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் மிக அமைதியாக அமர்ந்திருந்தது என்னைப் பெரிதும் பாதித்துவிட்டது” என்கிறார் அர்விந்த் குப்தா.

 ‘அர்விந்த் குப்தா’ என்னும் பெயர் கல்வியாளர்களிடையே மிகவும் அறிமுகமான ஒன்று. கல்வியைப்பற்றிப் பேசுகையில், இந்தியச் சிந்தனையாளர் ஜே. கிருஷ்ண மூர்த்தி சில முக்கியக் கருதுகோள்களை முன்வைக்கிறார். Scientific Mind and a Religious Mind – விஷயங்களை அறிவியல் பூர்வமாக அணுகுதல். அந்த அணுகுமுறையை மிகவும் சிரத்தையுடன் செய்தல். Freedom and Order – சுதந்திரமும் ஒழுங்கும் இயல்பாக மலர்தல். நாடெங்கிலும் கிருஷ்ணமூர்த்தி பள்ளிகள், அவரது அணுகுமுறையை முன்னெடுக்கின்றன. முடிந்தவரை மரபுக்கல்வியின் முக்கியக்கூறுகளான மனப்பாடம் செய்தல், தேர்வு எழுதுதல், மதிப்பெண்கள், தரவரிசை, மாணவர்களுக்குத் தண்டனை முதலியவற்றை விலக்குகின்றன. கல்வியை ஆசிரியரும் மாணவரும் இணைந்து முன்னெடுக்கும் மகிழ்ச்சியான பயணமாக முன்வைக்க முயல்கின்றன. “எழுதப் படிக்கும் திறன் மட்டுமே கல்வியல்ல. அடிப்படைக் கல்விக்குப் பின், மனிதக் கரங்களைப் பயிற்றுவிக்கும் கல்வியும் தரப்பட வேண்டும். கரங்களை உபயோகித்தலே மனிதனை விலங்குகளிடமிருந்து வேற்றுமைப் படுத்தி, மேம்படுத்தியுள்ளது. நயிதலீம் கல்விமுறையின் நோக்கம், மனிதனுக்கு ஒரு திறனை அல்லது தொழிலிலைக் கற்றுத்தருவதல்ல. 

அவனை, முழுமையான மனிதனாக்குவது. உண்மையான கல்வி என்பது, குழந்தையின் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை மிக உயரிய நிலைக்குக் கொண்டுசெல்வது. அதுவே சமநிலையிலான கல்வி. தளர்வில்லாமல் கேள்விகளை எழுப்புவதும், எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலையும் கல்வி கற்றலின் அடிப்படைத் தேவைகள். கல்வியே மக்களாட்சி முறையை மிகச் சிறப்பாகப் பேண உதவுகிறது. மக்களாட்சியில் கல்விக்குச் செலவிடப்படும் தொகை, மண்ணில் விதைக்கப்படும் விதையைப்போலப் பன்மடங்கு பலனை ஈட்டித் தருகிறது. கல்வியின் நோக்கம், நமது வளங்களைக் கொள்ளையிடும் மேலாதிக்கச் சக்திகளுக்கு உதவுவதாக இல்லாமல், நாட்டின் கடைநிலையில் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும். குழந்தைகள் தம் தாய்மொழி வாயிலாகக் கல்வி பயில வேண்டும்” – இவை கல்வியைப் பற்றி காந்தி முன்வைத்த கருத்துக்கள். இந்தக் கல்விமுறை, நயிதலிம் (புதிய கல்வி) என அழைக்கப்பட்டது. வார்தாவில் உள்ள சேவா கிராமில் உள்ள பள்ளியில் இந்த முறையிலான கல்வி அளிக்கப்பட்டது. 

ஆனால், விடுதலை கிடைத்தபின் அரசு முன்வைத்த கல்விமுறை மிக வேறாக இருந்தது. அது செயல்முறைக் கல்வியை விடுத்து, ஏட்டுக்கல்வியை முன்வைத்தது. சிந்தித்தலைவிட மனப்பாட முறையை முன்னெடுத்தது. ஒழுக்கம் என்பது வன்முறை வழியாக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டு பள்ளிப்படிப்புக்குப் பின்னரே மாணவர்கள், பரிசோதனைக்கூடம் என்னும் செயல்வழிக் கல்வியில் நுழைய முடிந்தது. கேள்வி கேட்டலும், ஆராய்தலும் ‘அரசு’ என்னும் நிறுவனத்துக்கு எதிரானவையாகப் பார்க்கப்படும் நிலையில் இயங்கத் தொடங்கின. கல்விமுறை, அதன் சமூகச்சூழலிலிருந்து தனித்து இயங்கியது. வேலை அல்லது தொழிலுக்கான சுங்கச்சீட்டாக மட்டுமே கல்வி மாறிப்போனது. அர்விந்த் குப்தா ‘பரேலி’ என்னும் ஊரில், மிக அதிகம் படிக்காத, ஆனால் கல்வியின் முக்கியத்துவம் அறிந்த பெற்றோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். அவர் தாயாரின் சகோதரர்கள் நன்றாகப் படித்து, சமூகத்தின் உயர்நிலையில் இருந்தார்கள். 

எனவே, தன் குழந்தைகளும் மிக நன்றாகப் படித்து மேல்நிலைக்கு வர வேண்டும் என்பதில் அவர் தாயார் உறுதியாக இருந்தார். தன் நகைகளை விற்று, பரேலி நகரின் மிகச்சிறந்த தனியார் பள்ளியில் தம் குழந்தைகளைப் படிக்க வைத்தார். அர்விந்த் மிக நன்றாகப் படித்து, மாவட்டத்தில் முதல் மாணவராகத் தேறினார். 1972ஆம் ஆண்டு, கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) மின்பொறியியல் படிக்கச் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் உலகெங்கும் மாணவர்களும், இளைஞர்களும், அதிகார மையங்களை எதிர்த்து வீதிகளில் போராடினர். அமெரிக்காவில் வியட்நாம் போரை எதிர்த்துப் போராடினார்கள். இந்தியாவிலும் நக்சல் பாரியில் துவங்கி, குஜராத், பிஹார் என அது விரிந்தது. காந்தியர் ஜெயப்ரகாஷ் நாராயண் தலைமையில் நிகழ்ந்த போராட்டத்தில், ‘மக்களை நோக்கிச் செல்லுங்கள்’ என அவர் அறைகூவல் விடுத்தார். இதுபோன்ற அதிகார மையங்களை எதிர்த்து நிகழும் போராட்டங்கள், அடக்கப்பட்ட பெரும் சக்தியை வெளிக் கொணர்கின்றன என்பது அர்விந்த் குப்தாவின் கருத்து. அந்தக் காலத்தில் ஒருநாள், கான்பூர் ஐஐடியில், கல்வியாளார் அனில் சட்கோபால் என்பவர் ஒரு உரை நிகழ்த்தினார். அனில் சட்கோபால், இந்திய வேளாண்கழகத்தில் முதுகலைப்பட்டமும், கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த்தொழில் நுட்பத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். பின்னர், 1968ஆம் ஆண்டு அவர் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் (Tata Institute of Fundamental Research (TIFR)) பேராசிரியராகச் சேர்ந்தார். 

1971ஆம் ஆண்டில் அதிலிருந்து விலகி, மத்தியப் பிரதேசத்தின் ஹோஷங்காபாத் மாவட்டத்தில், கிஷோர் பாரதி என்னும் தன்னார்வ நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இது வேளாண்மை, சுகாதாரம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டு, ஹோஷங்காபாத் அறிவியல் கல்வித் திட்டம் (Hoshangabad Science Teaching Programme – HSTP) என்னும் திட்டத்தைத் துவங்கினார். இது துவக்கத்தில், 5-8 வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கல்வியைக் கற்பிப்பதற்காகத் துவங்கப்பட்டது. இது, நண்பர்கள் ஊரக மையம் என்னும் இன்னொரு தன்னார்வலக் குழுவினரின் உதவியோடு முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டம், 1978ஆம் ஆண்டு, மாநில அரசின் உதவியோடு, ஹோஷங்காபாத் மாவட்டம் முழுதும் எடுத்துச்செல்லப்பட்டது. அனில் சட்கோபாலின் உரை, அர்விந்த் குப்தாவைச் சலனத்துக்கு உள்ளாக்கியது. ஆனாலும், லௌகீக வாழ்க்கை அவரை விடவில்லை. படிப்பை முடித்த அர்விந்த், டாட்டா மோட்டார் (Telco) கம்பெனியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்தியத் தனியார் நிறுவனங்களின் அன்றைய தலையாய நிறுவனமாகிய டாட்டா மோட்டார் நிறுவன ஊழியம் அவருக்குப் பிடிக்கவில்லை. இரண்டாண்டுகள் அங்கே பணிபுரிந்த பின்பு, ஒரு ஆண்டுகால விடுப்பு எடுத்துக்கொண்டு ஹோஷங்காபாத் சென்றார். அங்கே, குழந்தைகளுக்கான அறிவியல் பொம்மைகளைச் செய்யும் ஆர்வம் அவருக்கு வந்தது. சைக்கிளின் வால் ட்யூப்பையும், தீக்குச்சி களையும் வைத்துக்கொண்டு, பல்வேறு விதமான வடிவங்களை அமைத்தார். 

அவற்றை வைத்துக்கொண்டு கணித வடிவங்கள், வேதியியல் மூலக்கூறு அமைப்புகள், வீடுகள், கட்டுமானங்கள் முதலியவற்றைக் குழந்தைகளே செய்து, அறிந்துகொள்ளுமாறு பயிற்றுவித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அங்கிருந்து திருவனந்தபுரம் சென்று, கட்டிடக் கலை வல்லுநர் லாரிபேக்கரிடம் பணிபுரிந்தார். விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தாலும், அந்த விடுப்புக்காலம் அவரிடம் ஏற்படுத்திய தாக்கம் அப்படியே இருந்தது. அவர் நேரில் கண்ட வறுமையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அவரை மிகவும் பாதித்தன. காந்தியும், கார்ல் மார்க்ஸும் அவர் மனதில் நுழைந்தனர். டாட்டா மோட்டார் வேலையைவிட்டு விலகிச் சிறு நிறுவனங்கள் சிலவற்றில் பணிபுரிந்தார். அந்தச் சமயத்தில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலராக இருந்த பேராசிரியர் யாஷ்பால் அவர்கள் மூலமாக, ஒரு புத்தகம் எழுத ஃபெல்லோஷிப் கிடைத்தது. ‘தீக்குச்சி மாதிரிகளும் மற்ற அறிவியல் பரிசோதனைகளும்’ என்னும் புத்தகத்தை எழுதினார். இரண்டு ஆண்டுகளில் அந்தப் புத்தகம் 12 மொழிகளில் வெளியாகி, கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 1982ஆம் ஆண்டு, பேராசிரியர் அனில் சட்கோபால் ‘ஏகலைவா’ என்னும் நிறுவனத்தைத் துவங்கினார். ஏகலைவா நிறுவனத்துக்காக அர்விந்த் குப்தா பல அறிவியல் நூல்களை எழுதினார். பின்னர், அங்கிருந்து தில்லி சென்றார். 

அங்கே, அவரது கல்லூரிப் பேராசிரியர் எம்.எம்.சௌதரி, தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (NCERT) நிறுவனத்தில் உதவி இயக்குநராக இருந்தார். அவர், குழந்தைகளுக்கான அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்குமாறு அர்விந்த் குப்தாவைக் கேட்டுக்கொண்டார். ‘தரங்க்’ (சிற்றலைகள்) என்னும் தலைப்பில், 25 வருடங்களில், 125 நிகழ்ச்சிகளைத் தயாரித்து, தேசியத் தொலைக்காட்சிக்காக (தூர்தர்ஷன்) அவர் வழங்கியிருக்கிறார். மத்திய மற்றும் வடமாநிலங்களில் தூர்தர்ஷனுக்குப் பெரும் வீச்சு உண்டு. இதன் மூலமாக, மிகப் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடையே எளிமையான அறிவியல் பரிசோதனைகளை அவர் கொண்டுசெல்ல முடிந்தது. தரங்க், தூர்தர்ஷனின் மிக வெற்றிகரமான நிகழ்ச்சிகளுள் ஒன்று அது. இந்தப் பரிசோதனைகளின் மிக முக்கிய கச்சாப்பொருள், நம்மைச் சுற்றியிருக்கும் கழிவுப்பொருட்கள் தான். தீக்குச்சிகள், சைக்கிள் வால்ட்யூப்கள், உறிஞ்சு குழாய்கள் (ஸ்ட்ரா), காலி டெட்ராபேக் பெட்டிகள், பேட்டரிகள் முதலியவற்றிலிருந்து அறிவியல் உபகரணங்களை வடிவமைப்பதே இவரின் வழிமுறை. அறிவியல் – தொழில்நுட்ப ஆய்வுகள் என்பவற்றை, நவீன வசதிகள் கொண்ட ஆய்வறைகளில் தான் செய்யமுடியும் என்னும் மனச்சாய்வை, மூடநம்பிக்கையை இவர் வழிகள் தகர்த்தெறிந்தன. உலகின் எல்லாச் செயல்பாடுகளும் அறிவியல் பின்னணியைக் கொண்டவையே என்னும் புதுமன அமைப்பை இவர் ஊரக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உருவாக்கினார். வசதிகள் இல்லையெனில், உயர் அறிவியல் கல்வி சாத்தியமில்லை எனும் தாழ்வு மனப்பான்மையைப் போக்க இது பெரிதும் உதவியது. இவர் வடிவமைப்புகளில் தலையாயது பேட்டரியினால் வடிவமைக்கப்பட்ட மோட்டார். ஒரு பேட்டரி, இரண்டு காந்தத் துண்டுகள், சைக்கிள் ட்யூப், இரண்டு சேஃப்டி பின்கள், கொஞ்சம் தாமிரக் கம்பியை வைத்துக் கொண்டு அவர் உருவாக்கிய எளிமையான மோட்டார் அது. இதை வடிவமைத்தது, அவருக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. வெற்றிகரமாக வடிவமைத்த அன்று, இரவுத் தூக்கத்தில் இருந்து மீண்டும் மீண்டும் எழுந்து, அதை இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன் எனக் கூறுகிறார் அர்விந்த்குப்தா. அந்தப் பரிசோதனையை இந்தக் காணொளி இணைப்பில் காணலாம்.: 

 இந்தப் பரிசோதனைகளையும் தொலைக்காட்சித் தொடர்களையும் உருவாக்க, டாட்டா ட்ரஸ்ட் அவருக்கு உதவியாக இருந்தது. 2003ஆம் ஆண்டு, அவர் மகள் பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவம் பயிலச் சென்றதும், தில்லியை விட்டு மீண்டும் பூனே வந்து சேர்ந்தார். பூனே வந்ததும், வானியற்பியல் பேராசிரியர் ஜெயந்த் நார்லிக்கர், அர்விந்த் குப்தாவைத் தன்னுடன் பணிபுரிய அழைத்தார். ஜெயந்த் நார்லிக்கர் இந்தியாவின் தலைசிறந்த அறிவியலர்களுள் ஒருவர். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரின் முனைவர் ஆராய்ச்சி வழிகாட்டியான ஃப்ரெட் ஹோய்ல், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையை நிறுவினார். அதன் தொடக்ககால ஆராய்ச்சியாளாரகத் தன் பணியைத் துவங்கிய நார்லிக்கர், 1972ஆம் ஆண்டுவரை அங்கே பணியாற்றினார். தனது வழிகாட்டியுடன், நார்லிக்கர் ஹொய்ல் தேற்றம் (Narlikar-Hoyle theory of Conformal gravity) என்னும் ஒரு முக்கியமான தேற்றத்தை உருவாக்கினார். பின்னர், டாட்டா அடிப்படை ஆராய்ச்சியியல் நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research) அழைப்பின் பேரில், இந்தியா வந்து, அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். 1988ஆம் ஆண்டு, வானியல் மற்றும் வானியற்பியல் மையத்தை (Inter University Centre for Astronomy and Astrophysics (IUCAA)) பூனேயில் அரசு உதவியுடன் உருவாக்கி, அதன் இயக்குநராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்த நிறுவனத்தில், குழந்தைகளுக்கான அறிவியல் மையத்தை அமைக்குமாறு அர்விந்த் குப்தாவைப் பணித்தார். இந்தப் பணியில், ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற விதுலா மைஸ்கர் என்பவரும் இவருடன் இணைந்துகொண்டார். இந்த மையத்தை உருவாக்க டாட்டா ட்ரஸ்ட் 40 லட்சம் ரூபாயை மானியமாக அளித்தது. இந்த மையம், கழிவுகளிலிருந்து 1500 வகை அறிவியல் பொம்மைகளை உருவாக்கியது. நெகிழிக் குப்பிகளை வைத்து மட்டுமே 110க்கும் மேலான அறிவியல் பரிசோதனை முறைகள் வடிவமைக்கப் பட்டன. யூ ட்யூபில் 8600 பரிசோதனைக் காணொளிகள் வலையேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில். நூற்றுக்கும் மேற்பட்ட காணொளிகள் சீன மொழியிலும், 300 க்கும் மேற்பட்டவை ஸ்பானிய மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப் பட்டுள்ளன. 

டெட் (TED) என்னும் அமைப்புக்காக ‘Turning Trash into Toys’ என்னும் தலைப்பில் இவர் நிகழ்த்திய உரை மிகச் சிறந்த டெட் உரைகளுள் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. அந்த உரையை இந்த இணைப்பில் கேட்கலாம்:

https://www.youtube.com/watch?v=KnCqR2yUXoU

இவரது வலைதளத்தில் (www.arvindguptatoys.com) கல்வி, அறிவியல், கணிதம், சுற்றுச்சூழல், இலக்கியம் எனப் பல துறைகளில், 5000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வலையேற்றப்பட்டுள்ளன. தமிழிலும் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அர்விந்த் குப்தாவின் மிக முக்கியமான பங்களிப்பு, அறிவியலைச் சாதாரணமான ஒரு விஷயமாக்குவது. அதை ஒரு விளையாட்டாக மாற்றுவது. நவீன அறிவியல் / தொழில்நுட்பம் என்பது, மிக வளர்ந்த நாடுகளின், நவீன வசதிகள் கொண்ட பள்ளிகளில், கல்லூரிகளில் மட்டுமே கற்க மற்றும் ஆராய்ச்சி செய்யக்கூடிய ஒன்று என்னும் மனநிலையை விடுத்து, தெருவில் கிடக்கும் குப்பையில் அறிவியலைத் தேடுவது. எடுத்துக்காட்டாக, செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் மங்கள்யான் என்னும் செயற்கைக்கோளைச் சுமந்துசெல்லும் ஒரு ராக்கெட்டைக் காணொளியில் காணும் ஒரு ஊரகச்சிறுமி, அதன் வடிவத்தை, சூழலைக் கண்டு மிரண்டுவிடக் கூடும். ஆனால் அதையே, ஒரு பலூன் மூலம், விளையாட்டான பரிசோதனையாக மாற்றும் போது, அதன் மீதுள்ள பிரமிப்பு விலகி, அதன் ஆதார அறிவியல் உண்மைகளை மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். மங்கள்யான் ராக்கெட் செலுத்தப்படும் காணொளியைக் குழந்தை பார்க்கிறது. அதைப்பற்றிச் செய்தித்தாள்களில் படிக்கிறது. ஆனால், மேலே சொன்ன சிறுபரிசோதனையில், குழந்தையே ஒரு ராக்கெட்டை வடிவமைக்கிறது. இதைத்தான் ‘கரங்களின் கல்வி’ என்கிறார் காந்தி. 

ஆனால், நமது ஏட்டுக் கல்வி, ராக்கெட் அறிவியலை வெறும் தேற்றங்களாகவும், சூத்திரங்களாகவும் மாற்றி, குழந்தையை அருகே வராமல் விரட்டி விடுகிறது. அர்விந்த் குப்தாவின் இந்த அணுகுமுறையில் இரண்டு பெரும் நன்மைகள் உள்ளன. இன்னும் கல்வியறிவில்லாத குடும்பங்களிலிருந்து வரும் முதல் தலைமுறை ஊரகக் குழந்தைகளை பயமுறுத்தாமல் அறிவியல் கல்விக்குள் அழைத்துவருவது. இன்னொன்று, மிகக்குறைந்த செலவில், ஆரம்பப் பள்ளிகளில் பரிசோதனை நிலையங்களை அமைத்து, அறிவியல் பார்வையைக் குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே விளையாட்டாக மாற்றிக் கற்பிப்பது. விடுதலை அடைந்த 70 ஆண்டுகளில் பல நவீன அறிவியல் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியா, அறிவியல் அல்லது தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறைகளின் வளர்நுனியை இன்னும் அடையவில்லை. இன்னும் மூட நம்பிக்கைகளும் அறிவியலுக்குப் புறம்பான பார்வைகளும் நம் சமூகத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. விளையாட்டாக வடிவமைக்கப்பட்டு அறிவியல் கல்விக்குள் குழந்தைகளை அழைத்துவரும் அர்விந்த் குப்தாவின் வழி, கல்வியியலில் முக்கியமான மைல்கல். சமூகத்தின் முக்கியத் தேவை. 

முடிவு: 

எப்படி இருக்கிறது இந்த இந்த மனிதர் பற்றிய கட்டுரை. இந்த மாதிரி புத்தகங்களில் உள்ள கட்டுரைகளை பள்ளி பாட புத்தகங்களில் கல்லூரி பாட புத்தகங்களில் பாடமாக வைக்கலாம். அரசு இந்த மாதிரியான புத்தகங்களை ஊக்குவிக்க வேண்டும். கிண்டில் தளத்தில் இந்த புத்தகம் கிடைக்கிறது. உங்களை சுற்றி இருக்கும் அன்பான நல்ல மனிதர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசாக அளிக்கலாம். 

Related Articles

பெங்களூரு விமான நிலைய பேருந்துகளில் இனி ... பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (BMTC) சார்பில் பல்வேறு வழித்தடங்களில் விமான நிலையத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது பயணிகளின் எண்ணிக...
ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்... The platform Trapped Monos The shawshank redemption  Gantumoote (kannada) The occupant (spain movie) Ayyapanum koshiyum (...
இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள்!... இன்று எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள். இளமையில் வறுமையில் வாட, அந்த வறுமையை போக்க நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றினார். பிறகு தமிழ் சினிமாவில் சிறுசிறு...
மக்ஸிம் கார்க்கியின் பொன்மொழிகள்!... ஒவ்வொன்றுக்கும் அளவுண்டு, தானத்திற்கு மட்டுமே அளவில்லை. ஆசை பேராசையாக மாறும்போது அன்பு வெறியாக மாறும்போது அங்கே அமைதி நிற்காமலே விலகிச் சென்றுவ...

Be the first to comment on "“இன்றைய காந்திகள்” – புத்தகம் ஒரு பார்வை!  "

Leave a comment

Your email address will not be published.


*