பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் ஆண்கள் தாங்குவார்களா? யார் இந்த PADMAN?

Arunachalam Muruganantham

யார் இந்த PADMAN?

நம்நாட்டில் வெறும் 12% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். 88 சதவீத பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்கிறார்கள். அவர்கள் மாதவிலக்கு காலத்தில் அழுக்குத்துணி போன்றவற்றைத் தான் பயன்படுத்துகின்றனர். அது கிருமித்தொற்றையும் நோய் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஏன் செர்விக்கல் கேன்சரையும் கூட ஏற்படுத்தலாம். ஆதலால் மலிவான விலையில் நாப்கின் தயாரிக்க முடிவெடுத்தார் கோவையைச் சேர்ந்த தமிழர் அருணாசலம் முருகானந்தம்.

கோவை அருகேயுள்ள பாப்பநாயக்கன் புதூரில் 1962ம் ஆண்டு முருகானந்தம் பிறந்தார். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பழைய துணிகளை தன்னுடைய மனைவி பத்திரப்படுத்தி வைப்பதை பார்த்து, மாவிடாய் காலத்தில் அவர் பயன்படுத்துவதற்கு மலிவு விலையிலான சேனிட்டரி நேப்கின் செய்வதற்கு முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்று இன்று உலகளவில் மதிக்கப்படும் மனிதராகியுள்ளார். சுகாதார நாப்கின்களை தயாரிக்க முயற்சி மேற்கொண்டபோது, முருகானந்தத்தை தொடக்கத்தில் யாரும் பெரிதளவில் கண்டுக்கொள்ளவில்லை. ஏன் அவரது குடும்பத்தினரே கண்டுகொள்ளவில்லை. இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போல என்று வருந்தினர். ஆனால் யார் எது சொன்னாலும் யார் விலகிப்போனாலும் தன்னுடைய குறிக்கோளில் கவனமாக இருந்து சாதித்துள்ளார். பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மாதவிடாய்க்கால நேப்கின்களை வாங்க முடியாத ஏழைப் பெண்களுக்காக எளிய வழிகளை கண்டறிந்ததோடு, அவற்றை தயாரிக்க சிறப்பு எந்திரத்தையும் வடிவமைத்து அதற்கு காப்புரிமையும் பெற்றது, இவரை சாதனை மனிதருக்கான இடத்தை அடைய செய்தது. நேப்கின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் விலை சுமார் ரூ. 3.5 கோடி என்றிருந்த நிலையில், ரூ 65 ஆயிரத்திற்கு எந்திரம் வடிவமைத்து நேப்கின் உற்பத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் இவர்.2016ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அளித்து இவரை இந்திய அரசு கௌரவித்த பின்னர், மிகவும் பிரபலம் அடைந்தார். அதனாலயே இவரை சமூகத் தொழில் முனைவோர் என்று ஊடகங்கள் அழைக்கின்றன.

வாழ்க்கை வரலாறு படமாகிறது

இவரது வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு ‘பேட் மேன்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகிவருகிறது. அக்ஷய் குமார், சோனம் கபூர் மற்றும் ராதிகா ஆப்தே முன்னிலை பாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், டுவிங்கிள் கண்ணா எழுதிய ‘த லெஜன்ட் ஆப் லக்ஷிமி பிரசாத்’ என்ற புத்தகத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.

இது ஏழைப் பெண்களின் சுகாதாரத்திற்கு பங்காற்றிய முருகானந்தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம். 2018 ஜனவரி 25ம் தேதி வெளியிடப்பட இருந்த இந்த திரைப்படம் இப்போது பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்படம், ஆக்ஸ்போர்டு யூனியனில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.

ரியல் பேட்மேன் விடுத்த சவால்?

பெண்கள் கடைகளுக்கு சென்று பல பொருட்களை வாங்கினாலும், நேப்கின்களை மட்டும் யாருக்கும் தெரியாமல் பிளாஸ்டிக் பையில் பொதித்து கொடுப்பதையும், வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்கு கொண்டு செல்வதையும் இன்றும் பார்க்க முடியும். ஆனால் ஆண்கள் வாங்கும் காண்டத்திற்கு இப்படியில்லை. ஏன் நாப்கினுக்கு மட்டும்? என்று தெரியவில்லை. இந்த சமூகம் நேப்கினை வெளிப்படையாக வாங்கிச்செல்வதை எதோ தேசத்துரோகம் போல சித்தரித்து வைத்திருக்கிறது. மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் அணிகிற நேப்கின்களை வெளிப்படையாக கொண்டு செல்வது சமூக அளவில் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத வழக்கமாகவே இந்தியாவில் காணப்படுகிறது. ஆனால் செய்யக்கூடாதவை என நியாயமின்றி சமூகம் விலக்கிய ஒன்று குறித்த தயக்கத்தை உடைப்பதற்கு நேப்கின்களை விளம்பரப்படுத்தி சுகாதார விழிப்புணர்வை மேற்கொண்ட முருகானந்தத்தின் வாழ்க்கையே ஓர் எடுத்துக்காட்டு எனப் புகழப்படுகிறது.

padman challenge

விரைவில் தன்னுடைய வாழ்க்கை பற்றிய திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நேப்கினை கையில் வைத்து புகைப்படம் எடுத்துப் பகிர முடியுமா? என பாலிவுட் நடிகர்களுக்கு முருகானந்தம் டுவிட்டரில் சவால் விடுத்தார். மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சேனிடரி நேப்கின் குறித்து சமூகத்துக்கு இருக்கும் அசௌகரிய உணர்ச்சியை போக்கும் நோக்கத்துடன், சேனிடரி நேப்கினுடன் உங்களால் ஒரு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர முடியுமா என்று தமிழர் ஒருவர் விடுத்த சவாலை பாலிவுட்டின் பிரபல இந்தி நட்சத்திரங்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதை அமீர்கான், சோனம்கபூர், அக்சய் குமார், டுவிங்கிள் கண்ணா போன்ற பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஏற்றுக்கொண்டு தங்கள் டுவீட்டர் பக்கத்தில் ரியல் பேட்மேனுக்கு நன்றி கூறி புகைப்படம் எடுத்து இணைத்துள்ளனர். இது மக்களிடையே வெளிப்படையாக பேச வேண்டிய விவாதமாக மாறியுள்ளது.

ட்ரெய்லர் வசனங்கள்

பெண்களைப் போல ஆண்களுக்கும் பிளீடிங் ஏற்பட்டால் ஆண்களால் தாக்குப்பிடிக்க முடியாது, சில நிமிடங்களில் இறந்துவிடுவர், பெண்கள் ஸ்ட்ராங் ஆனால் தான் நாடு ஸ்ட்ராங் ஆகும் போன்ற வசனங்கள் சமூக ஆர்வலர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை சாக்காக பயன்படுத்தி மென்ஸ்சுரல் கப் மார்க்கெட்டிங் நடந்தாலும் நடக்கலாம். இதுபோன்ற படங்களை பெண்கள் பார்க்கிறார்களோ இல்லையோ கட்டாயம் ஆண்கள் பார்க்க வேண்டும். அப்போதுதான் பெண்களின் பிரச்சினை புரியும்.

Related Articles

2019 தமிழ்ப்படங்களுக்கு It is Prasanth ம... It is Prasanth மதிப்பெண்கள் யூடூப்பில் சினிமா விமர்சனம் செய்து வருபவர்களில் மிக முக்கியமான விமர்சகர் பிரசாந்த். அவர் தன்னுடைய விமர்சனங்களில் ஒவ்வொரு ...
#4Yearsofbbvip – ரகுவரன வில்லனா தா... கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்கு சென்று கொண்டாடி தீர்த்த படம் விஐபி. தனுஷை பிடிக்காத ரசிகர்கள...
வெக்கை நாவல் – புத்தக விமர்சனம்!... இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வர இருக்கும் படைப்பு எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் தழுவல் என்பது நாம் அனைவரும் அறி...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தி... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல...

Be the first to comment on "பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் ஆண்கள் தாங்குவார்களா? யார் இந்த PADMAN?"

Leave a comment

Your email address will not be published.


*