இலங்கையில் மதக்கலவரம் நடந்து வருவதையடுத்து அதை தடுக்கும் வகையில் பேஸ்புக்,
வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் புத்தமதத்தினர் மற்றும் முஸ்லிம்களிடையே சிறிய பிரச்சினையாக தோன்றிய
சண்டை, தற்போது மதக்கலவரமாக மாறியுள்ளது. இந்த கலவரத்தில் சிக்கி அப்பாவி மனிதர்
அநியாயமாக இறந்துள்ளார். இது தொடர்ந்து கண்டி நகரில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு
பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கலவரத்தையடுத்து சில தினங்களுக்கு முன்பு கொழும்பில் அவசர அமைச்சரவைக் கூட்டம்
நடைபெற்றது. அதன்படி அடுத்த பத்து நாளுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் புதனன்று கண்டியில் மீண்டும் மதக்கலவரம் நடந்துள்ளது. இந்நிலையில்
வெறுப்புணர்வு பிரச்சாரங்களை கட்டுப்படுத்துவதற்காகவே சமூக வலைதளங்கள் முடக்கம்
செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் கிட்டத்தட்ட இதே நிலை!
உலகில் நடக்கும் கலவரங்கள் பெரும்பாலும் இரண்டு பெரிய தலைவர்களின் கருத்து
முரண்பாடால், வாய்த்தகராரால் தான் தோன்றுகிறது. அவர்கள் பாட்டுக்கு உட்கார்ந்த இடத்தில்
அமர்ந்துகொண்டு வாய்க்கு வந்ததை பேசி கலவரத்துக்கு அடித்தளம் அமைக்கின்றனர். ஆனால்
பாதிக்கப்படுவதோ சாமான்ய மக்கள். இப்போது தமிழகத்தில் அதுதான்
நடந்துகொண்டிருக்கிறது.
ஆண்டாள் விவகாரம் ஓய்ந்து முடிவதற்குள் பெரியார் விவகாரம் தலைவிரித்தாடுகிறது.
திரிபுராவில் எப்படியோ பாஜக வெற்றி பெற்றதையடுத்து லெனின் சிலையை
அகற்றியிருக்கிறார்கள் அமைதியாக ஆட்சி நடத்தி வருபவர்கள். அந்த உற்சாக மிகுதியில்
ஹெ.ராஜா திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் பெரியார் சிலை
என்று பேஸ்புக்கில் பதிவிட தொற்றிக்கொண்டது கலவரம்.
இவர் ஓருத்தர் பதிவிட்ட இந்த பதிவால் கடுமையான கண்டனங்கள் எழ, அது இரு
தரப்பினருக்கும் இடையேயான கலவரமாக உருவெடுத்து வருகிறது. ஒருபக்கம் தமிழகத்தின்
பெரும்பாலான மாவட்டங்களில் எச். ராஜாவின் உருவப்பொம்மையை எதிர்த்து போராடி வரும்
பெரியார் பற்றாளர்கள், இன்னொருபுரம் பெரியார் சிலை மீது கல்லெறிந்தும் அம்பேத்கர் சிலை
மீது பெயிண்ட்டை ஊற்றியும் நாசம் செய்யும் அறிவிலிகள். இப்படியே போனால் தமிழகத்தின் நிலைமை அதோகதி தான். பிரச்சினை இப்படி இருக்க வழக்கம் போல முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது எனக்கூறி எரிச்சலூட்டுகிறார்.
இப்பொழுதெல்லாம் பேஸ்புக், டுவிட்டர், வாட்சப்க்குள் நுழைந்தாலே ” அட ச்சை… ” என்ற உணர்வு பெரும்பாலோனோர்க்கு ஏற்படும் வகையில் அவ்வளவு வெறுப்புணர்வு பிரச்சாரம்
நடந்துகொண்டிருக்கிறது. இப்படியே போனால் இடைவிடாத பிரேக்கிங் நியூசால் வெறுப்புணர்வு
பிரச்சாரத்தில் எல்லோரும் பிபி எகிறியோ வெறி பிடித்தோ போய் சேர வேண்டிய நிலைமை தான்
வரும். யாகவா ராயினும் நாகாக்க…
Be the first to comment on "இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது? தமிழகத்தில் எப்போது?"