செக்ஸ் எஜூக்கேசன் இன் இந்தியா! – முதலில் ஆசிரியர்களுக்கு பாடம் கற்றுத்தரணும்!

sex education in India

இந்தியாவில் சில காலங்களுக்கு முன்பு பெண்ணாக பிறந்துவிட்டால் உடனே எதாவது ஒரு கொலைக் கார கிழவி கள்ளிப் பால் ஊத்தி சாகடிக்கும். அதை அடுத்து கருவை ஸ்கேன் எடுத்துப் பார்த்து பெண் குழந்தை எனத் தெரிந்தால் உடனே மருத்துவரின் கை கால்களில் விழுந்து கருக்கலைப்பு செய்து சாகடித்தார்கள். இப்போது இரண்டும் நடைமுறையில் (அவ்வளவாக) இல்லை என்பதால் பலாத்காரம் செய்து சாகடிக்கிறார்கள். ஆக இந்தியாவில் பெண்ணாகப் பிறந்தால் எதாவது ஒரு துன்பத்தை அவள் அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது.

ரித்திகா, ஹாசினி, ஆசிபா என்று பல பெண் குழந்தைகள் தொடர்ந்து பாலியல் வன்முறையினால் வாழ்க்கையை இழக்கின்றனர். முதலில் இது போன்ற செய்திகள் வாரத்திற்கு ஒன்று என வந்து கொண்டிருந்தது. தற்போது நாளுக்கு ஒன்று என வரத் தொடங்கிவிட்டது. இந்தியாவில் முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை சிறுமி ஒருவள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறாள் என்று ஆய்வு சொல்லும் போது இது போன்ற செய்திகள் தினமும் வரத் தான் செய்யும். பெண் குழந்தையை பெற்றெடுத்தவன் நியூஸ் டிவியும், நியூஸ் பேப்பரும், சமூக வலை தளங்களும் பயன்படுத்த பயப்படும் அளவுக்கு பாலியல் வன்முறை செய்திகள் கொட்டிக் கிடக்கிறது.

பாலியல் வன்முறை என்பது தெரியாத மனிதர்கள் ஏற்படுத்துவதில் மட்டும் அடங்கி விடுவதில்லை. அக்கம் பக்கத்தினர், உறவுக் காரர், ஆசிரியர் என்று வேலிகளே பயிரை மேய்வதும் பாலியல் வன்முறையில் அடங்கும். சின்ன சின்ன சீண்டல்களில் இருந்து தொடங்குகிறது இந்த வன்முறை. முதலில் விளையாட்டாக தோள்பட்டையில் அடிக்கும் பக்கத்து வீட்டுக்காரன் பிறகு மடியில் உட்கார வைக்கிறான். பிறகு பெற்றோர் இல்லாத சமயங்களில் மனிதமற்ற செயலை செய்கிறான். உறவுக்காரன்களில் நெருங்கிய சொந்தங்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. உரிமையோடு கொஞ்சுகிறேன், உரிமையோடு அடிக்கிறேன், உரிமையோடு கிள்ளுகிறேன் என்று அவர்களின் கைகள் சீண்டும் இடங்களோ இங்கு சொல்ல முடியாதவை. அடுத்தது ஆசிரிய கழுசடைகள். படிக்காத பிள்ளைகளை தண்டிக்கிறேன் என்று தலையில் கொட்டுவதில் தொடங்கி, தொடையில் கிள்ளுவது வரை செல்கிறது அவர்களின் அராஜகம். இவை அத்தனைக்கும் காரணம் முறையான பாலியல் கல்வி இல்லாததே.

இந்த பாலியல் கல்வி இருந்திருந்தால் அம்மாவை கற்பழித்த மகன், மகளை கற்பழித்த அப்பா, அரை பவுன் தோடுக்காக மூதாட்டியை கற்பழித்த இளைஞன், பத்து வயது சிறுமியை கற்பழித்த எழுபது வயது முதியவன், மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர், ஆசிரியையை கற்பழித்த மாணவர்கள் போன்ற அருவருக்கத்தக்க செய்திகளை நிச்சயம் காண முடியாது என்று கூட சொல்லலாம். ஆக இந்த சமூகத்தில் நிலவும் கற்றல் குறைபாடு தான் இவை அனைத்திற்கும் காரணம்.

பாலியல் கல்வி வேண்டுமென்று கூறிய சில தமிழ்ப்படங்களைப் பற்றி பார்ப்போம். முதலில் இடம்பெறுவது தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படம். இந்தப் படத்தில் செக்ஸ் எஜூக்கேசன்ஏன் இந்த சமூகத்திற்கு வேண்டுமென்று பல இடங்களில் பேசி இருப்பார்கள். முதலில் ஆசிரியர், ஆசிரியையகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் காட்சி. அடுத்தது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தன் பாய் பிரண்ட் உடன் பேசும் காட்சி. முதலில் ஆசிரியர்கள் பேசிக்கொள்ளும் காட்சியை விவரிப்போம்.

ஆசிரியை ஒருவர் செக்ஸ் எஜூக்கேசன் தேவையா இல்லையா என்று டிபேட் ஒன்றை தன்னை சுற்றி இருக்கும் ஆசிரியர்களுக்குள் உருவாக்குவார். சில ஆசிரியையகள் வேண்டுமென்று சொல்ல, சில ஆசிரியையகள் நோ கமெண்ட்ஸ் என்று சொல்ல, புட்டிக் கண்ணாடி போட்ட கிழ போல்டு ஒன்று நோ நோ… இந்தியாவுல செக்ஸ் எஜூக்கேசன் நோ சான்ஸ் என்று அடித்து சொல்லுவார். அந்த கிழ போல்டின் பேச்சை உதறி தள்ளிவிட்டு பதின்ம வயதில் இருக்கும் தனது வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இனப்பெருக்க மண்டலத்தைப் பற்றி பாடம் எடுக்கத் தொடங்குவார். அவர் தொடங்குவதற்கு முன்பு போர்ட்டில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பை ஒரு ஆண் பையன் வரைந்து வைத்திருப்பான். அந்த ஆசிரியை நான் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகளைப் பற்றி பாடம் எடுக்கிறேன் என்று கூறியதும் ஒரு மாணவன் சிரிப்பான். உடனே ஆசிரியை அவனை எழுப்பி, ” நீ என்னைக்காச்சு உன் பிறப்ப பத்தி யோசிச்சிருக்கியா… உன்ன பெத்து எடுத்த பெண்ணுக்கும் இந்த உறுப்பு இருக்கு… இது இல்லன்னா நீ பொறந்து இப்படி சிரிச்சிட்டு இருந்திருக்க மாட்ட… ” என்பது போல வசனம் பேசியதும் மாணவர்கள் அனைவரும் அமைதியாகி பாடத்தை கவனிக்க தொடங்குவர்.

அடுத்தது, பெண் பத்திரிக்கையாளர் தன் பாய் பிரெண்டு உடன் பேசும் காட்சியை விவரிப்போம். செழியன் என்ற சேட்டைப் பையன் பிறந்தநாளுக்கு சாக்லேட் கொடுக்க வந்த வகுப்புத் தோழிக்கு முத்தம் கொடுக்க, அது டீச்சரிடம் புகாராக போகிறது. உடனே செழியனை இன்வஸ்டிகேட் செய்கிறார் ஆசிரியை. அந்த ஆசிரியைக்கும் முத்தம் கொடுப்பேன் என்கிறான் செழியன். உடனே சுற்றி இருப்பவர்கள் சிரிக்கா ஆசிரியைக்கு கோபம் சுர்ரென்று ஏறி செழியனை அடித்து ஆஸ்பிட்டலுக்கு அனுப்புகிறார். இதை மீடியாக்கள் பூதாகரமாக்க, தமிழகம் முழுக்க இந்த டாபிக் தான். அதற்கு செய்தி சேகரிக்கும் பொருட்டு பெண் பத்திரிக்கையாளர் இந்த டாபிக்கை தனது பாய் பிரெண்டு உடன் பேசுவார். இப்பலாம் பிஞ்சுலயே பழுத்ததா இருக்குதுங்க… இதுங்களுக்கு செக்ஸ் எஜூக்கேசன் சரி வராது என்று நண்பன் சொல்ல, அதெப்படி சரி வராது, டீச்சருங்க முறையா சொல்லிக் கொடுக்கலனா அவன் இண்டர்நெட் பாத்து தப்பா கத்துப்பான்… இன்னிக்கு எல்லா இடங்கல்லயும் செமி பார்னோகிராப் இருக்கு… அவன் தப்பா கத்துக்க நிறைய சான்ஸ் இருக்கு, முதல்ல இத டீச்சர்ஸ்களுக்கு சொல்லித் தரனும் என்பது போல பதில் அளிப்பார். இந்தியாவின் தேவை எது என்பதை இந்தப் படமே ஓரளவுக்கு சொல்லிவிட்டது.

அடுத்ததாக, எழுத்தாளர் யுரேகாவின் இயகத்தில் வெளி வந்த படம் சிகப்பு எனக்குப் பிடிக்கும் படத்தைப் பற்றி பார்ப்போம். இந்தப் படத்தில் விபச்சார தொழிலை அரசே முறைப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும் என்று போராடுவார். ஏன் அதற்கு போராடுகிறார் என விடை தேடும் போது பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி மன நலம் பாதிக்கப்பட்ட அவருடைய மகள் கதாபாத்திரம் காட்சியில் தோன்றி கண்கலங்க வைக்கும். இறுதியில் இந்தியாவில் பாலியல் கல்வி வேண்டும் என்று கூறி படத்தை முடித்திருப்பார்.

அடுத்தது செல்வராகவனின் மாலை நேரத்து மயக்கம் படத்தில் ஒரு காட்சி. சிறு வயதிலிருந்தேஆண்கள் பள்ளியில் மட்டுமே படித்து ஆண்களுடன் மட்டுமே பழகி வளர்ந்த ஒருவன் தனது மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் திணறுவான். அவனுடைய மனைவிக்கு அவனை சுத்தமாகப் பிடிக்காது. அதனால் இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்காது. பொறுமை இழந்த கணவன் சொந்த மனைவியை அவள் விருப்பம் இன்றி உறவு வைத்துக் கொள்வான். அது முறையான உறவு அல்ல ரேப் என்பது அவனுக்கு தெரியவில்லை. அடுத்தது சமீபத்தில் ரிலீசான மா என்ற குறும்படம். இந்தப் படத்தை பெரும்பாலும் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.

இந்தியாவில் பாலியல் கல்வியை நடைமுறைப் படுத்துவதற்கான காரணங்கள் பல இருந்தாலும் ஆசிரியர்கள் அதற்கு ஒத்துழைக்காதது தான் முதன்மையான காரணம் என்று சொல்லலாம். இதை இன்னும் தெளிவாகப் பார்க்க யூடுப் வீடியோ ஒன்றைப் பற்றி இங்கு பார்ப்போம். ஈஸ்ட் இந்தியா காமெடி என்ற யூடுப் சேனலின் வீடியோ அது. வந்தது 2014ல். இருந்தாலும் அந்த வீடியோ இன்றைக்கும் பொருந்தி போகிறது. அந்த வீடியோ இணைப்பு இங்கே https://youtu.be/EiIxkOah09E.

இந்த வீடியோ பார்த்த பிறகும் அதற்கு கீழே இருக்கும் கமெண்டுகளைப் பார்த்த பிறகும் நாம் எந்த அளவுக்கு பின் தங்கி இருக்கிறோம் என்பது புரியும். எல்லோர் கைக்கும் இணையம் எளிதாக கிடைக்கிறது என்பதால் அஞ்சாவது படிக்கும் சிறுவன் வகுப்பு தோழியிடம் ரூம் போடலாமா என்ற நிலைமைக்கு வந்துள்ளான். சமுத்திரக்கனியின் அப்பா படத்தில் வரும், ” பெண் என்பவள் எதிர் பாலினம் அவ்வளவு தானே தவிர, நமக்கு வலிப்பது போல் அவளுக்கும் வலிக்கும்… மனசுல குப்பைய தேங்க விட்டுட்டா… மூஞ்சில ஆசிட் அடிக்கத் தோனும்… கத்தி எடுத்து அடிக்கத் தோனும்… ” என்ற வசனமும் சமீபத்தில் வெளியான பேட்மேன் படத்தில் இடம்பெற்ற “மதர் ஸ்ட்ராங், சிஸ்டர் ஸ்ட்ராங், லவ்வர் ஸ்ட்ராங், கண்ட்ரி ஸ்ட்ராங்… ” என்ற வசனமும் ஒவ்வொரு ஆண் மகனும் கடைபிடிக்க வேண்டியவை.

Related Articles

தன்னுடைய பெயருக்கு பின் ஒட்டு பெயர் வைத்... மருதமலை படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தில் வடிவேலு நகைச்சுவை போலீசாக நடித்து இருப்பார். அப்போது அவர் ஸ்டேஷனில் இருக்கும் போது ஒரு பெண் மணக்கோலத...
உலக சினிமா இயக்குனர்களும் அவர்களின் படங்... 1.Meghe dhake tara (1960) படத்தை இயக்கியவர் Ritwik katak Ramkinkar (1975)jukti, takko aar gappo (1974)titash ekti nadir naam (1973)Durbar...
” எனக்கு மட்டுமே இசை வரும்! ”... இந்தியாவைப் பொறுத்த வரை இசை உலகில் இளைய ராஜாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்பது உண்மையே. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இளைய ராஜாவின் புகழ் நின்றுகொண...
65 வது தேசிய விருதுகள் அறிவிப்பு! –... 65ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலும் இந்த வருடம் தமிழ்சினிமாவில் சில அறிமுக இயக்குனர்கள் " ந...

Be the first to comment on "செக்ஸ் எஜூக்கேசன் இன் இந்தியா! – முதலில் ஆசிரியர்களுக்கு பாடம் கற்றுத்தரணும்!"

Leave a comment

Your email address will not be published.


*