வேலையில்லா பட்டதாரிகளின் அம்மாக்களே அப்பாக்களே – நீங்கள் பிள்ளைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

Parents Reacts for Unemployed Graduates

இந்திய நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையைப் பற்றி சொல்லித் தெரிய
வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு மகா மட்டமாக நம் நாட்டு மாணவர்களின் கல்வி அறிவு,
பொருளாதார அறிவு, கற்பிக்கும் விதம் இருக்கிறது.

பெற்றோர்களுக்கு வியாபாரம்! பிள்ளைகளுக்கு பாரம்!

இந்திய பெற்றோர்களில் பெரும்பாலானோர் கல்வியை பணம் ஈட்ட உதவக் கூடிய கருவியாக
தான் பார்க்கிறீர்கள். ஆக உங்களைப் பொருத்த வரை பையனை பிள்ளையை படிக்க வைப்பது
என்பது ஒரு வியாபாரம். பையன் படிப்பது அவன் விரும்பி படிக்கும் படிப்பாக இருக்கிறதா?
என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும்.

சொந்த பந்தங்கள் முன்பு நீங்கள் பல படி உயர்ந்தவனாக காட்ட வேண்டும் என்பதற்காக
பிள்ளையை வியாபார பொருளாகப் பார்க்கிறீர்கள். அப்படி நீங்கள் வலுக்கட்டாயமாக எந்த எந்த
படிப்பை தேர்ந்து எடுக்கிறீர்கள்? அதிகம் பொருளீட்டக் கூடிய மருத்துவ துறையை, அடுத்ததாக
பொறியியல் துறை, அடுத்ததாக வக்கீல் படிப்பு, இவை எதுவும் இல்லையென்றால் இறுதியாக
ஆசிரியர் படிப்பு. ஆக பெற்றோர்களை பொறுத்தவரை படிப்பு என்பது பொருளீட்டுதல்
அவ்வளவே.

படிக்காத பெற்றோர்கள் தான் கல்வியை இப்படி புரிந்து வைத்து இருக்கிறார்கள் என்றால் படித்த
பெற்றோர்கள் அதை விட.

இப்படி படிக்க வைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வேலையில் சேராமல் இருக்கிறார்கள்
என்றால் அவர்கள் மீது நீங்கள் காட்டும் கோபம் அலாதி ஆனது. போகிற இடம் எல்லாம் உங்கள்
பிள்ளையைப் பற்றி தாழ்த்தி பேசத் துவங்கி விடுகிறீர்கள்.

அதிலும் குறிப்பாக சொந்தபந்தங்கள் அனைவரிடமும் நீங்கள் உங்கள் பிள்ளையைப் பற்றி
தாழ்த்தி சொல்லி பையன் எதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டது போல் நினைக்க
வைத்துவிடுகிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை அது புலம்பல். ஆனால் உங்கள் பிள்ளையைப்
பொறுத்தவரை அது மானபங்கம்.

பெற்று வளர்த்த அம்மா அப்பாவே தன்னை சொந்த பந்தங்கள் முன்பு துணியை உருவி
அம்மணமாக ஓட விடுவதைப் போல எண்ணத் துவங்கி விடுகிறார்கள்.

வீண் விசனம்:

இப்படி பையனை சிந்திக்க விடாமல் எல்லோரையும் போலவே நீயும் ஓடு, உனக்கென
தனித்தன்மை எதுவும் இருக்க கூடாது என்று துரத்தி அடித்துவிட்டு பிறகு கவலை படுவது உலக
மகா அபத்தம். இப்படி துரத்தி அடித்து விட்டு பையனுக்கு விரக்தி உணர்வை அதிகரிக்க
வைத்துவிட்டு என் பையன் போனே பண்றது இல்ல, பெத்தவங்க மேல பாசமே இல்ல, இப்பத்த
பசங்க நெஞ்சுல ஈரமே இல்ல என்று புலம்புவது எல்லாம் என்னவித மனநிலை என்றே
புரியவில்லை.

இதைவிட கொடுமை என்னவென்றால் பிள்ளையை வலுக்கட்டாயமாக வெளிநாட்டிற்கு
அனுப்பிவிட்டு நீங்களாகவே பணம் கட்டி எதாவது ஹோமில் சேர்ந்து கொண்டு என் பிள்ளைக்கு
என் மேல பாசமே இல்ல என்னைய இங்க தனியா தவிக்க உட்டுட்டு அங்க சொகுசா வாழ்றான்
என்று புலம்புவது பக்கா அரசியல்

நச்சரிப்பும் அறிவுரையும் :

ஏதாவது ஒரு வேலைக்குப் போ, வீட்டுல மட்டும் இருக்காத எனக்கு மனசு கஷ்டமா இருக்கு,
சங்கடமா இருக்கு, பாக்கறவங்களுக்கு கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியல, எல்லோரும்
நம்ம குடும்பத்த இளக்காரமா பாக்குற மாதிரி இருக்கு என்று உங்கள் ஆதங்கத்தை தெரிவிக்க
அவர்களின் தொண்டைக்குள் சோறு இறங்க மறுக்கிறது.

சீக்கிரமா பாருப்பா, பொண்ணு கிடைக்காது, உங்கப்பம்மா புலம்பித் தள்ளுறாங்க, அந்த வீட்டுப்
பையன் உன்னைய மாதிரி தான் படிச்சுட்டு சும்மா இருந்துச்சு இன்ன வரைக்கும் சும்மாவே
இருக்குது, இப்படியே இருக்காத எதோ ஒன்னு கிடைச்ச வேலைய செஞ்சு பிழைக்குற வழிய பாரு
என்று அறிவுரை என்கிற பெயரில் ஏற்கனவே மண்டை காய்ந்து இருக்கும் பிள்ளைகளின்
மண்டையில் மேலும் நீங்கள் கொத்தி கொத்தி சாகடிக்காதீர்கள்.ஒருகட்டத்திற்கு மேல் அவர்கள்
தாங்க முடியாமல் வெடிக்க தொடங்கிவிட்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் ஜாக்கிரதை!

சுய மரியாதையும் மன உளைச்சலும்:

வேலையில்லா பட்டதாரிகளுக்கும் சுயமரியாதை என்ற ஒன்று இருக்கு என்பதை புரிந்து
கொள்ளுங்கள் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை மட்டம் தட்டி பேசுவதன் மூலமாக நீங்கள்
யோக்கியன் உயர்ந்தவன் என்ற நிலைப்பாட்டை உருவாக்க முயல்கிறீர்கள். ஆனால், பணம் சம்

பாதிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக உங்கள் பிள்ளைகளை மட்டம் தட்டி பேசுவது
பெற்ற பிள்ளைக்கு பெற்றோர்களே குழிபறிப்பதற்குச் சமம்.

வேலையில்லாமல் இருக்கும் உங்கள் பிள்ளை கடைசி வரைக்கும் வேலையில்லா
பட்டதாரியாகவே இருக்கப் போவதில்லை. அவர்களும் தெரிந்த சீனியர்கள், நண்பர்கள் என்று
லிங்க் பிடித்து அலைந்து கொண்டும் அவமானப் பட்டுக்கொண்டும் அனுபவங்களை சேகரித்துக்
கொண்டும் தான் இருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த சமூகம் வேலையில்லா பட்டதாரியை, குடித்துவிட்டு சாலையோரம்
படுத்துக்கிடப்பவனை விட மிக கேவலமாக பார்க்கிறது. அப்படி உங்கள் பிள்ளை ஏற்கனவே
வெளி உலகத்தாரால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதால் முடிந்த வரை நீங்கள் ஆறுதலாக
இருங்கள். முடியாவிட்டால் மூடிக்கொண்டாவது இருங்கள் உங்கள் பிள்ளை எப்படியும் அடித்துப்
பிடித்து முன்னேறி விடுவான்.

சொந்தக் காரர்களிடம் எதாவது பேசணுமே, அவர்களிடம் எதாவது புலம்பணுமே என்பதற்காக
உங்கள் பிள்ளைகளை பலிகடா ஆக்காதீர்கள்!

Related Articles

சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி̶... சற்றுப் பொறுமையாகப் படிக்கவும். எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வியின் கண்ணகி நாவல் கொண்டுள்ள கதையை முதலில் இங்கு சுருக்கமாக காண்போம்.லஞ்சங்களும் அதிகா...
எதிர்பார்ப்பை கிளப்பிய வசந்த் ரவியின் ரா... இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் வசந்த் ரவி. அவருடைய இரண்டாவது படத்தில் (ராக்கி) இயக்குனர் இமயம் பாரதிராஜாவோடு இணைந்த...
சார்பட்டா வசனங்கள் – உங்களுக்கு பி... பாத்ரூம்லயே பாக்ஸிங் பண்ணா யாரு மேன் உன்ன நம்புவா... ஸ்டேஜ்ல வந்து பாக்ஸிங் பண்ணு...  "யாருக்காக ஆடுற...""சார்பட்டா பரம்பரைக்காக ஆடுறேன் ...
ராஜஸ்தானில் புழுதி புயலுக்கு 27 பேர் பலி... ராஜஸ்தான் மாநிலம் அல்வர், பரத்பூர் மற்றும் தோல்பூர் மாவட்டங்களை நேற்று (புதன்கிழமை) புழுதி புயல் கடுமையாகத் தாக்கியது. இதில் 27 பேர் பலியாகியும், 100 ...

Be the first to comment on "வேலையில்லா பட்டதாரிகளின் அம்மாக்களே அப்பாக்களே – நீங்கள் பிள்ளைகளை எப்படி பார்க்கிறீர்கள்?"

Leave a comment

Your email address will not be published.


*