தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடா? அவர்கள் வணங்க வேண்டிய தலம் எது?

aanmeega-kelvi-pathil book written by Thirumathi Vetri Selvi

ஆன்மீகத்தில் உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கிறதா? இவர் எழுதிய புத்தகத்தை படியுங்கள்! ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் பற்றி பார்ப்போம் வாருங்கள். 

நம் தமிழகத்தில் வெளியாகும் எல்லா நாளிதழ்களிலும் ஆன்மீக மலர்கள்” என்ற பெயரில் ஆன்மீகத்துக்கு சில புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை கடவுள் பக்தி அதிகம் உடையவர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. ஆனால் ஏல்லோருமே அந்த ஆன்மீக பக்கங்களை படித்து தெரிந்து கொள்கிறார்களா என்று கேள்வி எழுப்பினால் கண்டிப்பாக இல்லை. அவர்கள் மீண்டும் அந்த நாளிதழ்களின் ஆன்மீக பக்கங்களை தேடி அலையாமல் ஆன்மீகம் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்கள் கண்டிப்பாக கிண்டிலில் உள்ள திருமதி வெற்றிச்செல்வி எழுதிய “ஆன்மீக கேள்வி பதில்என்ற புத்தகத்தை வாசிக்க வேண்டும். புத்தகத்தின் விலை நூறு ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கிறது. 

“எந்தக் கடவுளை எப்படி வழிபட வேண்டும், எந்தப் பிரச்சினைக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும். எந்தக் கோவிலுக்கு என்ன சக்தி இருக்கிறது, வாஸ்து என்பது என்ன அதை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்றெல்லாம் வரைமுறை வகுத்து வைத்திருக்கிறார்கள். கடவுளை வழிபடுவதற்கு வரைமுறை இருக்கிறதா? என்று கேட்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஆனால் அப்படிக் கேட்கிறவர்களும் ஒருநாள் இந்த வரைமுறைகளைப் பின்பற்றும் நிலை வந்திருப்பதை அனுபவம் காட்டுகிறது. ” – இந்த வரிகள் இந்த புத்தகத்தின் கிண்டில் பக்கத்தில் டிஸ்கிரிப்சன் பகுதியில் உள்ள வரிகள். இந்த புத்தகத்தின் டிஸ்கிரிப்சனில் உள்ளது போலவே புத்தகத்தில் ஆன்மீகம் சார்ந்த அடிப்படை கேள்விகளுக்கு எளிய நடையில் பதில் அளித்து உள்ளார் வெற்றிச்செல்வி. அந்தக் கேள்விகள் என்னென்ன என்பதற்கு எடுத்துக் காட்டாக சில கேள்வி பதில்களை பார்ப்போம். 

  1. அம்பாளை, கவுரி என்று அழைப்பது ஏன்?

 பார்வதி தேவியை கவுரி என்றும், அவளுக்கு அனுஷ்டிக்கும் விரதத்தை ‘கவுரி விரதம்’ என்றும் சொல்வர். ‘கவுரி’ என்பது ‘கவுரம்’ என்ற சொல்லில் இருந்து தோன்றியது. ‘கவுரம்’ என்றால் ‘பொன்னிறம்’ எனப்பொருள். பார்வதி தேவி தங்கம் போன்ற நிறத்தையுடையவள் என்பதால் ‘கவுரி’ என்று அழைக்கிறோம். 

  1. உப்பு வாங்கினால் பண வரவு பெருகுமா? 

பொதுவாக, வருடத்தின் முதல்நாள் மற்றும் மாதத்தின் முதல் நாளில் ‘உப்பு’ வாங்கினால் பணப் புழக்கம் அதிகரிக்கும். உப்பு வந்தாலே பணம் வந்ததாகப் பொருள். எனவேதான், கோவில் விழாக்கள் மற்றும் புனித தெய்வங்களுக்கு விழா எடுக்கும்போது பக்தர்கள் காணிக்கை செலுத்தும் பொருட்களை ஏலம் விடும்போது உப்பு மட்டும் நல்ல கூடுதல் விலைக்கு எடுப்பார்கள். “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள், அதேசமயம் இனிப்பிட்ட வரை என்றைக்கும் நினை என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், புதிய மனிதர்களை, பெரிய மனிதர்களை சந்திக்கச் செல்லும்போது இனிப்பு பொருட்கள், பிஸ்கட், கேக்குகள் வாங்கிச் செல்வது வழக்கம். செட்டிநாட்டுப் பகுதியில் ஒரு பெண் சமர்த்தியா? கெட்டிக்காரியா? என்பதை ஆராய முதலில் விருந்து வைக்கும்போது ‘உப்பு’ தான் பரிமாறச் சொல்வர். “துப்பில்லாத பெண்ணை உப்பில் கண்டு கொள்ளலாம்” என்பர். உப்பு மிக குறைவான அளவாக வைக்கும் போதுதான் ஒரு பெண்ணை எடை போடுவர். தோல் நோய் தீர சில குறுப்பிட்ட கோவில்களில் உப்பு வழங்குவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. 

  1. பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்ன? 

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்ற பெயர், இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே மறுபிறவி போன்றுதான்! எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை ‘சிருஷ்டி’ (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால் விடியற் காலைப் பொழுதை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதும் சுப வேளைதான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான் கிடைக்கும். 

  1. தெய்வ சந்நிதியில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

 விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை ஒளி மயமாக அமையும். நமது ஜாதக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் தலங்களுக்குச் சென்று, தெய்வ சந்நிதியில் ஒன்பது தீபம் ஏற்றினால் துயரங்கள் விலகும். சனிபகவான் சந்நிதியில் எட்டு தீபங்கள் ஏற்ற வேண்டும் குரு பகவான் சந்நிதியில் பதினாறு தீபம் ஏற்றுவது நல்லது. களத்திரதோஷம் மற்றும் புத்திர தோஷம் விலகி அனுக்கிரகம் தரும். தெய்வ சந்நிதியில் தினம் ஒரு தீபம் வீதம் 108 தினம் நூற்று எட்டு விளக்கு ஏற்றினால் கோரிக்கைகள் நிறைவேறும். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால் விடியற் காலைப் பொழுதை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதும் சுப வேளைதான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்யத் துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான் கிடைக்கும். 

  1. திருவையாறு பெயர் காரணம் என்ன?

 தியாகராஜர் உற்சவம் நடைபெறும் இடம் திருவையாறு. அந்த ஊருக்கு பெயர்வரக் காரணம், ஐந்து ஆறுகள் அங்கு ஓடுவதுதான் வெண்ணாறு, வெட்டாறு வடவாறு, குடமுருட்டி ஆறு, காவிரி ஆறு ஆகிய ஐந்து ஆறுகளும் ஓடுவதால் “திரு ஐந்து ஆறு” என்று அழைக்கப்பட்டு “திருவையாறு” என்று வழங்கப்படுகிறது. 

  1. வாழ்க்கையில் விடிவுகாலம் பிறக்க… 

கன்னியாகுமரி அம்மனைத் திருமணம் செய்து கொள்வதற்கு தாணுமாலையன் புறப்பட்டுச் சென்றார். சில  திருமணங்கள் இரவு நேரத்தில் நடைபெறும். சில திருமணங்கள் பகல் நேரத்தில் நடைபெறும். இந்தத் தெய்வத் திருமணம் விடிவதற்குள் முடிக்க வேண்டும் என்று நிபந்தனை. குமரி அம்மனை மணக்கச் சென்ற இறைவன் வழுக்கம்பாறை என்ற இடத்திற்கு வரும்பொழுதே கோழி கூவியது. எனவே தாணுமாலையன் சுசீந்திரத்திற்குத் திரும்பி வந்துவிட்டார். எனவே கன்னியாகுமரி அம்மன் இன்றும் குமரியாகவே இருக்கிறாள். கோழி கூவித் திருவிளையாடல் நடத்தி விடியலைத் தெரிவித்த இடம் வழுக்கம்பாறை. எனவே வழுக்கம்பாறைக்கு வந்து அங்கிருந்த கன்னியாகுமரி அம்மனையும் வழிபட்டு அதன்பிறகு தாணுமாலையனையும் சுசீந்திரத்தில் தரிசித்துச் சென்றால் வாழ்க்கையில் விடிவுகாலம் பிறக்கும். 

  1. எல்லா பாவங்களும் போக சொல்லவேண்டிய தேவியின் பிரார்த்தனை 

தெய்வத்தைப் பிரார்த்தனை செய்துதான் நலன்களை மக்கள் அடைய முடியும் என்ற பிரார்த்தனைகளில் ‘கவசம்’ என்பது ஒன்று. அதாவது தலை முதல் பாதம் வரையில் உள்ள அங்கங்களை ரட்சிக்கும்படி பிரார்த்திப்பது. ஜெகன் மாதாவான ‘துர்கா’ தேவியைக் குறித்து செய்யப்பட்டுள்ள, ‘வஜ்ர பஞ்சரம்’ என்கிற ஸ்துதி மிகவும் உயர்ந்தது. ஸ்ரீகந்தர், அகஸ்தியருக்கு இதை உபதேசம் செய்ததாக உள்ளது. சகல பாவங்களையும் போக்கி மக்களை ரட்சிக்கக் கூடியது என்று கூறப்பட்டது. இது மிக ரகசியமானது என்றும், சிரத்தையுள்ள நல்லவர்களுக்கு மட்டுமே சொல்ல வேண்டியது என்றும் கூறியுள்ளார் ஸ்கந்தர். துர்க்கா தேவிக்கு ஆயிரக்கணக்கான நாமங்கள் இருப்பதால் அவைகளில் சில நாமங்கள் இதில் வரும் இந்த ‘வஜ்ர பஞ்சகம்’ ஸ்தோத்திர ரூபமாக உள்ளது. அதுவே இங்கு வசன நடையில் எழுதப்படுகிறது. ‘ஏ’..பிரும்மணி? தாங்கள் என் மேற்புறத்தை ரட்சிக்க வேண்டும். ஏ.வைஷ்ணவி! தாங்கள் என் கீழ்ப்புறத்தையும், ஈசான கோணம், அக்னி, நிதிரு, வாயு கோணத்தையும், ஏ, அமலே! தாங்கள் நெற்றிக்கட்டையும் உமாதேவி புருவத்தையும்… ‘திரிலோசனரின் மனைவி நேத்திரங்களையும் கிரிஜா நாசியையும், ஜெயா மேலு தட்டையும், விஜயா கீழுதட்டையும் ஸ்ருதிஸ்வனா இரண்டு காதுகளையும் ஸ்ரீதேவி பற்களையும், சண்டிகா கன்னங்களையும், வாணி நாக்கையும், ஜெயமங்களா முகவாயையும் கார்த்தியாயினி முகத்தையும், நீலகண்டி கண்டத்தையும்’. வராகி கழுத்தையும் பூர்வ சக்தி தோள்களையும் ஐந்த்ரீ புஜத்தையும், பத்மா கைத்தலத்தையும், கமலா கை விரல்களையும், விரஜா நகங்களையும், சூரிய சக்தி கை இடுக்குகளையும், ஸ்தலசரீ வச்ச ஸ்தலத்தையும், தரித்ரீ இதயத்தையும், ஷணாசாக்னீ வயிற்றையும் ரட்சிக்கட்டும்’. ‘ஜகதீஸ்வரி உதர மடிப்பையும், போகதீ நாடியையும் அஜா தேவி, பிருஷ்டத்தையும், விகடாதேவி, கடி பிரதேசத்தையும், பரமாதேவி நிதம்பத்தையும், குஹரிணி குஷ்யத்தையும், அபாய ஹந்திரீ பாயு ஸ்தானத்தையும் விகுலா தொடைகளையும், லலிதா முட்டுக்களையும் ஜெயாதேவி அடித்தொடைகளையும், கடோதர தேவி  குதிகால்களையும், ரசதரசராதேவி பாதங்களையும் உத்ராகால் விரல்களையும் சாந்த்ரீ நகங்களையும்’. தலவாஹினி உள்ளங்கால்களையும், லட்சுமிதேவி எங்கள் கிரகங்களையும், சேமகரீ நாங்கள் இருக்குமிடத்தையும், பிரியகரி புத்திரர்களையும், சனாகரி ஆயுளையும், மகாதேவி கீர்த்தியையும் ரட்சிக்கட்டும். தனுர்தரி தர்மத்தையும், குலதேவி குலத்தையும், சர்வாணியுத்தத்தில் ரட்சிக்கட்டும், சத்கதி ப்ராதாசுஸ்கதியையும் ரட்சிக்கட்டும். இப்படியாக மகிரிஷிகள், இந்திராதி தேவர்கள் கந்தர்வர் கள், சாரணர்கள் யாவரும் துர்கா தேவியை பிரார்த்தித்தும் அம்பிகை அவர்கள் முன்தோன்றி, நீங்கள் செய்த துதியால் நான் சந்தோஷ மடைந்தேன். உங்கள் குறை களைப் போக்குகிறேன். நீங்கள் கவலையின்றி உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். எவர் இந்த ஸ்துதியை பாராயணம் செய்கிறாரோ அவரை நான் அனுதினமும், அனவாதமும் கவனித்துக்கொண்டிருந்து ரட்சிப்பேன்! என்கிறாள். இந்த, ‘வஜ்ர பஞ்சர’ ஸ்லோகத்தை எழுதி பூஜையில் வைத்துக் கொள்ளலாம். ஜலத்தை வைத்து ஸ்லோகத்தை ஜெபித்து தீர்த்தத்தை சாப்பிட ரோகங்கள் நீங்கும்.  ஆபத்துகள், பேய், பிசாசு அண்டாது, சகல ஷேமங்களும் ஏற்படும் என்று அனுக்கிரகம் செய்து மறைந்தாள். இந்த ‘வஜ்ர பஞ்சகம்’ என்ற ஸ்துதி படிப்பதன் மூலம் பல நன்மைகளும், நம் பாவங்களும் நீங்கும். 

  1. தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடா? அவர்கள் வணங்க வேண்டிய தலம் எது? 

சிலருக்கு திருமணம் முடிந்ததும் தம்பதியர்கள் இன்பத்தின் எல்லைக்குள் சென்று இனிமையாக வாழ்வர், சிலருக்கோ கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவில் சிக்கல், வாக்கு வாதங்கள் மூலம் மனநிம்மதியில்லாத வாழ்க்கை அமையும். அப்படி கருத்து வேறுபாடு ஏற்பட்ட தம்பதியர் கல்யாண நவக்கிரகத்தை வழிபட்டால், வருத்தங்கள் அகலும், வாழ்க்கை வளமாகும். சிவகங்கை, மாவட்டம் கீழச்சீவல்பட்டி அருகில் உள்ள ஆவணிப்பட்டி மற்றும் காரைக்குடி அருகில் உள்ள மானகிரி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திரு நீலக்குடி ஆகிய ஊர்களில் கல்யாண நவக்கிரகம் உள்ளது. அங்கு சென்று வழிபட்டால் தம்பதியரிடம் இருந்த தகராறுகள் தீரும். 

  1. திருக்கைலாயம் பற்றி?

 சிவபெருமான் உறைவிடம் வெள்ளிமலைக் கைலாயம் என்பர். இதில் வெள்ளி மலையாக காட்சிதரும் திருக்கைலாயம் கிழக்கே ஸ்படிகமாகவும், மேற்கே மாணிக்கமாகவும் வடக்கே தங்கமாகவும், தெற்கே நீலமாகவும் இருப்பதாக ஐதீகம். 

  1. சப்தவிடங்கத் தலங்கள் எங்குள்ளன? 

சப்தவிடங்கத் தலங்கள் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ளன. ‘சப்தம்’ என்றால் ஏழு ‘டங்கம்’ என்றால் உளி, ‘வி’ என்றால் செதுக்காதது உளியால் செதுக்காத சுயம்பு மூர்த்தங்கள் உள்ள தலங்கள் இவை. இந்த ஏழு தலங்களிலும் தியாக ராஜரே அருள்பாலிப்பார். அவருக்கு வெவ்வேறு பெயரும், நடனமும் உண்டு. 1. திருவாரூர் – வீதி விடங்கர்- அசபா நடனம் (மேலும் கீழுமாக ஏறியும். இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும் ஆடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உள்ளம் மகிழ்ந்து ஆடுவது. 2. நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – பாராவாரகரங்க நடனம் (கடல் அலைகள் அசைவது போல் ஆடுவது) 3. திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம் (கோழி நடப்பதுபோல ஆடுவது). 4. திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம் (மலருக்கு வண்டு குடைந்து செல்வது போல் ஆடுவது) 5. திருவாய்மூர் – நீலவிடங்கர் – கடல் நடனம் (நீர் நிறைந்த குளத்தில் நிற்கும் தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவது போல மெல்ல ஆடுவது) 6. திருமறைக்காடு – புவனவிடங்கர் – அம்ஸபாத நடனம் (அம்ஸம் என்பது அன்னம், பாதம் என்பது கால், அன்னம் நடப்பது போன்று ஆடும் நடனம்) 7. திருநள்ளாறு – தகவிடங்கர் – உன்மத்த நடனம் (பக்தர்களின் அன்பைத் தாங்க முடியாமல் பித்து பிடித்தது போல ஆடுவது) பஞ்ச அரங்கம் ஆதி அரங்கம் – ஸ்ரீரங்கம் அப்பால் அரங்கம் – திருப்பேர்நகர் (காஞ்சிபுரம்) மத்திய அரங்கம் – திருவரங்கம் (விழுப்புரம்) சதுர்த்த அரங்கம் – கும்பகோணம் பஞ்ச அரங்கம் – இந்தளூர் (மயிலாடுதுறை) 

  1. தீய குணங்கள் என்னென்ன? 
  2. தற்பெருமை கொள்ளுதல் 2. பிறரை கொடுமை செய்தல் 3. பிறரை போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல். 4. பிறர் துன்பத்தை கண்டு சந்தோஷப்படுதல் 5. பொய் பேசுதல் 6. கெட்ட சொற்களை பேசுதல் 7. நல்லவர்களை போல் நடித்தல். 8. புறம் பேசுதல் 9. தகாதவர்களுடன் சேருதல், அவர்களுக்கு ஆதரவு கொடுத்தல். 10. பாரபட்சமாக நடத்துதல் 11. பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல் 12. பொய்சாட்சி கூறுதல் 13. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல் 14. வாக்குறுதியை மீறல் 15. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல் 16. குறை கூறுதல் 17. வதந்தி பரப்புதல் 18. கோள் சொல்லுதல் 19. பொறாமைப்படுதல் 20. பெண்களை தீய நோக்குடன் பார்த்தல் 21. கோபப்படுதல் இவற்றில் ஒன்றுகூட நம்மிடம் இருக்க வேண்டாமே! 
  3. பூஜைக்கு உரிய மலர்கள் என்னென்ன?

இறைவன் பூமியின்மீது படைத்துள்ள அத்தனைப் பொருட்களும் அவனுக்கு உரியன. அதில் மலர்களும் அடங்கும். ஆயினும் எல்லா மலர்களும் எல்லா நேரங்களிலும் எல்லா இடத்திலும் கிடைப்பது கடினம். ஆகையால் கிடைக்கும் மலர்களையும் அதன் தன்மையையும் பயனையும் உணர்ந்து மனநிறைவோடு, மனப்பூர்வமாகப் பயன்படுத்தி பூஜை செய்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்க திருப்தி உண்டாகும். செந்தாமரை – செல்வம், தொழிலில் மேன்மை, ஆத்ம பலம், சூரியன் அருள். வெண்தாமரை- வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி போன்ற வெள்ளை மலர்கள் மனக்குறையை போக்கும் மனதில் தைரியம் சேர்க்கும். தங்க அரளி மலர்கள் பெண்களுக்கு மாங்கல்ய பிராப்தி உண்டாக்கும். கடன் ஏற்படாது தடுக்கும். கிரகபீடை நீக்கும்,  குரு பார்வை அருளும். சிவப்பு அரளி, செம்பருத்தி – மனதை வாட்டும் கவலை அகற்றி குடும்ப ஒற்றுமை பெருக்கும். நீல சங்கு புஷ்பம், நிலாம்பரம், நீலோற்பகம் ஆகியவை அவப் பெயரை போக்கும், தரித்திரம் நீக்கும். மன அமைதி தரும். சனி பகவானின் அருளையும் பெற்றுதரும் ஆயுளைப் பெருக்கும். மனோரஞ்சிதம் குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி, கணவன்-மனைவிக்குள் அன்பையும், ஆயுளையும் பெருக்கும். பாரிஜாதம், அல்லிப்பூ போன்ற சற்று மங்கலான வெள்ளை புஷ்பங்கள் சந்திரன் அருளைப் பெற்று புத்தி வலிமையைப் பெருக்கும். தாயாரின் உடல் நலத்தையும் காப்பாற்றும், பாசிப்பச்சை, மருக்கொழுந்து மருவு போன்றவை அறிவைப் பெருக்கி மன உறுதியைத் தரும், புதனுடைய நற்பார்வை அருளும், அடுக்கு அரளி,  செம்பருத்தி, ஞானம், கல்வி, தொழில் பெருகும். வில்வபுஷ்பம், கருந்துளசி புஷ்பம், மகிழ மலர் ஆகியவை ராகு, கேது ஆகிய கிரகங்களின் நற்பலனைத் தரும். பழைய புஷ்பங்களையும், மொட்டுக்களையும், தூய்மை இல்லாத புஷ்பங்களையும் இறைவனுக்கு சார்த்தக் கூடாது. விநாயகப் பெருமானுக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா, ஆகிய மலர்கள் பூஜைக்கு உகந்தவை. முருக பெருமானுக்கு முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தள், செங்காந்தள் உகந்தவை. திருமாலுக்கு தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, துளசி, சாமந்தி ஆகியவை உகந்தவை, நீலசங்க புஷ்பம் பயன்படுத்தலாம். வரலட்சுமிக்கு மடலவிழ்ந்த தாழை மடல் மிகவும் சிறந்தது. 

  1. அஷ்டபந்தனம் என்றால் என்ன? 

அஷ்டபந்தன கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வது என்பது அடுத்த பிறவியை அகற்றும் தன்மையுடையது. எட்டு பொருள்களை விகிதாச்சாரப்படி கலந்து மந்திரம் ஓதி கலப்பதுதான் அஷ்டபந்தனம். அது கல்காவிப் பொடி, சுக்கான் பொடி, குங்கிலியம், செம்பஞ்சு, கொம்பரக்கு, ஜாதிலிங்கம், வெள்ளை மெழுகு, எருமை எண்ணெய் ஆகியவை ஆகும். 

  1. மகாலட்சுமி எங்கு வாசம் செய்வதாகபுராணங்கள் கூறுகின்றன?

 சங்கு, நெல்லிக்காய், கோமயம், தாமரை, வண்ணமயமான பரிசுத்தமான ஆடை ஆகியவற்றில் லட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. வெண்ணிற மாடப்புறாக்கள் வாழும் இடம், அமைதியான பெண் வாழும் இடம், குவிந்துள்ள தானியங்கள், இரக்கமுள்ள மனிதனின் மனம், பண்போடு வாழும் மக்கள், நாவடக்கம் உள்ளவர் இல்லம், உணவு உண்ண அதிக நேரம் செலவிடாதவர்கள், பெண்களை தெய்வமாக பார்க்கும் ஆண்மகன் உள்ள இடங்களில் லட்சுமி வாசம் செய்வதாக நம் வேதங்கள் கூறுகின்றன. வீரனின் தோள்களிலும் லட்சுமி இருக்கிறாள். 

  1. வில்வத்தின் மகிமை ???

சிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு. இந்த வில்வ தழைகள் கிடைப்பதற்காக அனேகமாக, சிவன் கோயில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப்படும். இதை வளர்ப்பதால் அகவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும். காசி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும். 

ஆவணி அவிட்டம்???

 யஜுர் வேதத்தை மேற்கொண்டவர்கள் ஆவணி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முந்திய பௌர்ணமியன்று உபகர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். ரிக் வேதம் அனுஷ்டிப்பவர்கள் சிரவண நட்சத்திரம் இருக்கும் தினத்திலும் சாம வேதத்தினர் ஆவணி மாதம் ஹஷ்த நட்சத்திரத்திலும் உபகர்மத்தை அனுஷ்டிப்பர்.

 வரலட்சுமி விரதம் ???

அஷ்டலட்சுமிகளில் சிறந்தவள் இந்த லட்சுமி, மங்கலநாயகி சௌபாக்கிய தேவதை குடும்ப நலனும் கணவன் அன்பும் வேண்டி பெண்டிர் இவ்விதம் மேற்கொள்வர். நல்ல கணவன் வேண்டி மணமாகாத மங்கையரும் நோன்பும் பிரசாதமான மங்கல நூல் அணிவர். சிரவண மாத சுக்கிலபட்சத்தில் பௌர்ணமிக்கு முதல் வெள்ளிக்கிழமை இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். 

  1. துளசியின் மகிமை என்னென்ன? 

 துளசிச் செடி வளரும் இடத்தில் மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும் வாசம் செய்வதாக ஐதீகம். இதன் காற்று பட்டாலே பாவங்கள் விலகும்.  துர் தேவதைகள் அண்டாது. சீதாதேவி துளசி பூஜை செய்ததன் பலனாகத்தான் ஸ்ரீராமரை கணவனாகப் பெற்றாள் என்று துளசி ராமாயணம் கூறுகிறது. துளசிச் செடியை திருமாலின் அம்சம் என்றும் ஸ்ரீபுராணம் கூறுகிறது. துளசியால் திருமாலை அர்ச்சித்து வணங்குபவர்க்கு மறுபிறவி கிடையாது என்பதும் புராணம் கூறும் உண்மையாகும். பத்ம புராணம் துளசியின் பெருமையை மேலும் விளக்குகிறது. பௌர்ணமி, ஞாயிற்றுக்கிழமை, சங்கராந்தி தினம், நண்பகல், இரவு, சூரியோதயத்திற்கும் பிறகு, தீட்டு எச்சல் உள்ள நிலையிலும் எண்ணெய் தேய்த்த உடம்புடனும், குளிக்காமலும் துளசி இலை பறிக்கக்கூடாது. பறித்த துளசி வாடினாலும் மூன்று நாள்கள் வரை பரிசுத்தமாக இருக்கும். துளசியை நிர்மால்யமாக ஒதுக்கி வைத்திருந்தாலும் அது புனிதமானது ஆகும். பெருமாள் கோயில்கள் பூஜைக்குப் பிறகு சந்தன தீர்த்தத்துடன் துளசி தளத்தை பிரசாதமாகப் பெறுவது மிகவும் விசேஷமாகும். முக்கியமாக சனிக்கிழமைகளிலும், ஏகாதசி நாட்களிலும், திருவோண நட்சத்திரத்து அன்றும் இப்பிரசாதம் பெறுவது உகந்ததாகும். இதை சரணாமிருதம், தீர்த்தப் பிரசாதம், பெருமாள் தீர்த்தம் என்றெல்லாம் கூறுவர். துளசி இருக்கும் இடத்தில் விஷப்பூச்சிகள் அண்டாது. பல நோய்களுக்கு துளசி ஒரு சிறந்த நிவாரணி. 

  1. தர்ப்பைப்புல் மகிமை ???

 தருப்பைப் புல் புண்யபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது, இதற்கு அக்னிகர்பம் என்பது பெயர். இப்புல்லில் காரமும் புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தேய்க்கிறார்கள். அவை பலநாள் ஒளியுடன் ஆற்றல் குறையாமலும் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிடினும் வாடாது. நீருக்குள் பலநாள் கிடந்தாலும் அழுகாது. ‘அம்ருத வீரியம்’ என்பது இதன் பெயர். சூரிய கிரகணம் ஏற்படும்போது இதன் வீரியம் அதிகமாகும். தொற்று நோய்கள் இதன் காற்றுப்படும் இடங்களில் இருக்காது. 

  1. பேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம் ???

பசுவிடமிருந்து நாம் பெறும் கோமியம் மிகவும் புனிதமாகக் கருதப்படுவதாகும். புதுமனை புகுவிழா வீட்டில் மிக முக்கியமான நிகழ்ச்சியே கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு வைத்து ஒரு வாய்ப்புல் தின்று அங்கேயே அதுதன் கோமியத்தை இட வேண்டும் என்பதே. இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்போர் அனைவரும் நோய் நொடியின்றி வாழ்வார்கள் என்பது மட்டுமல்ல; எல்லாச் செல்வங்களையும் குறைவறப் பெற்று திகழ்வார்கள் என்பதுமாகும். குழந்தை பிறந்து சில தினங்கள் பொறுத்து நடைபெறும் ‘புண்யா ஹவாசனம்’செய்யும் வீட்டிலும் மற்றும் இதைப்போல நடக்கும் முக்கியமான சுப நிகழ்ச்சிகளின்போதும் இவ்விதம் கோமியம் தெளிக்கப்படும். வீட்டிற்கு சிறப்புச் செய்வார்கள்; இவ்வாறு தெளிப்பதன் மூலம் அந்த நிகழ்ச்சி சிறப்படையும்.

இவை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உதாரணங்களில் சில. இன்னும் சுவாரஸ்யமான நிறைய கேள்விகள் பதில்கள் இந்தப் புத்தகத்தில் அடங்கி உள்ளன.

Related Articles

தமிழ்சினிமா அழிவை நோக்கி செல்கிறது! R... சமீபகாலமாக தமிழ்சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற படம் என்று எதுவும் இல்லை. வசூல் மன்னன் ரஜினியின் காலா படமே பலத்த அடி வாங்கியது. மாறாக இருட்டு அறையில் மு...
பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எ... கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்க...
உங்களுக்கு விருப்பமான ஐபிஎல் வீரர்களை நீ... ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கிரிக்கெட் விரும்பிகளுக்குக் கொண்டாட்டம் தான். குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியர்களின...
நவீன வசதிகளுடன் வளர்ச்சி காண்கிறது சென்ன... விரைவில் அனைத்துத் தொழில்நுட்ப, நவீன வசதிகள் கொண்ட ஒரு கடற்கரையாக மாற இருக்கிறது சென்னை மெரினா கடற்கரை. நிறையப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த ...

Be the first to comment on "தம்பதியர்களுக்குள் கருத்து வேறுபாடா? அவர்கள் வணங்க வேண்டிய தலம் எது?"

Leave a comment

Your email address will not be published.


*