வித்தியாசமான நோய்களை காட்டிய தமிழ் சினிமா!

Different diseases shown in the tamil cinema!

தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் கேன்சர் என்ற ஒரே நோயை திருப்பி திருப்பி ஆள் மாற்றி காண்பித்திருப்பார்கள். அப்படி இல்லாமல் வித்தியாசமான நோய் உடைய மனிதர்களை ஹீரோவாக்கிய படங்களை பார்ப்போம். 

முதல் படம் அந்நியன். சிறுவயதில் இருந்தே உண்டான மன அழுத்ததின் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டு (multiple personility disorder) அந்நியநாகவும் ரெமோவாகவும் மாறக் கூடிய அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பார் நாயகன். இது தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் வித்தியாசமான நோய். அடுத்ததாக ஏ. ஆர். முருகதாஸின் கஜினி. பதினைந்து நிமிடங்களுக்கு மட்டுமே எதையும் நினைவில் வைத்திருக்கும் நோய் (short memory loss). மறதி கொஞ்சம் தீவிரமானால் இந்த மாதிரி பிரச்சினை ஏற்படுமோ என்ற பயத்தை உண்டாக்கிய படம் இது. அந்நியன் படத்தில் காட்டப்பட்ட நோய்க்கும் சரி கஜினி படத்தில் காட்டப்பட்ட நோய்க்கும் சரி தீர்வுகள் இருப்பதாக அவர்கள் அந்தப் படத்தில் குறிப்பிடவில்லை. 

அடுத்ததாக தனுஷின் 3 படத்தை பார்ப்போம். இந்தப் படத்தில் தனுஷ் Bipolar disorder  நோயால் பாதிக்கப்பட்டிருப்பார். திடீரென கோபப்பட்டு மிருகத்தனத்தின் உச்சத்திற்கு செல்லும் நோய். இந்த நோயால் தனுஷ் மிகவும் பாதிக்கப்பட்டு கோபத்தால் தன் செல்லப்பிராணியை அடித்து கொல்லும் அளவிற்கும் தன் நண்பனின் மண்டையை பீர் பாட்டிலால் அடித்து உடைக்கும் அளவிற்கும் செல்வார். அந்நியன், கஜினி போன்ற படங்களிலாவது அந்த நோய்களுக்கு தீர்வு காண்பது போல் காட்டி இருப்பார்கள். ஆனால் 3 படத்தில் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட ஹீரோ இறுதியில் தற்கொலை செய்து கொள்வான். அந்த வகையில் இது மிக ஆபத்தான படம். 

அடுத்ததாக விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்தை பார்ப்போம். அந்தப் படத்தில் ஹீரோ “எப்போதெல்லாம் அதிர்ச்சி ஆகிறானோ அப்போதெல்லாம் தூங்கிவிடுவான்”. இது முற்றிலுமே வித்தியாசமான நோய் தான். நிஜத்தில் இது போன்றதொரு நோய் இருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. அதே சமயம் இந்தப் படத்தில் இது போன்ற நோய்க்கு தீர்வு இருப்பதாகவும் கூறி இருப்பது பாராட்டத்தக்க விஷியம். 

அடுத்ததாக ஜீவா நடித்த போக்கிரி ராஜா படத்தை பார்ப்போம். இந்தப் படத்தில் ஹீரோவுக்கு அடிக்கடி பெருத்த கொட்டாவி விடும் பிரச்சினை இருக்கும். படம் பெரிதாக ஓடவில்லை என்பதால் இது போன்ற நோய்கள் ஒரு நோயாகவே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

கடைசியாக ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படத்தைப் பார்ப்போம். இந்தப் படத்தில் நாயகனுக்கு இக்கட்டான சூழலில் எல்லாம் சிரிக்கும் நோய் இருக்கும். அதனால் அவர் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார் என்பதை விளக்கி இருப்பார்கள். தமிழ் சினிமா இன்னும் என்ன மாதிரியான நோய்களை எல்லாம் காட்டப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தமிழ் சினிமாவில் இதுவரை கேன்சர் நோயாளிகளையும் கோமா நோயாளிகளும் மட்டுமே காட்டி வந்தார்கள். 

சரத்குமார் நடித்த மாயி படத்திலும் இன்னபிற சாமி படங்களிலும் அம்மை நோயை காட்டினார்கள். பிறகு மிருகம் படத்திலும் அருவி படத்திலும்  எய்ட்ஸ் நோயாளிகளை காட்டினார்கள். மிருகம் படத்தில் நாயகன் பல பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் தறுதலையாக இருந்தாலும் சிறையில் அவன் இருக்கும்போது எய்ட்ஸ் தொற்று உள்ள ஒருவனின் ஊசியை இவன் எடுத்துப் போட்டுக் கொள்வான். அந்த ஊசியின் தொற்று காரணத்தால் அவனுக்கும் எயிட்ஸ் நோய் பரவும்.  அப்படி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவன் என்னென்ன மாதிரியான சிரமங்களை அனுபவிப்பான் என்பதை மிருகம் படத்தில் மிக தெளிவாக காட்டி இருப்பார்கள். அந்த காட்சிகள் நம்மை பயமுறுத்தும் ஐயையோ இந்த நோய் நமக்கு வந்தால் நம் நிலைமை என்னாகும் என்ற பக்பக் பதற்றத்தை உண்டாக்கி இருக்கும். 

ஆனால் அருவி படத்தில் நாயகி தவறான உடலுறவு வைத்துக் கொள்ளாத போதிலும் யாருடனும் ஊசியை பகிர்ந்து கொள்ளாத போதிலும் அவருக்கு எயிட்ஸ் நோய் பரவும். காரணம் அவருக்கு எதிர்ப்பு சென்று எதிர்ப்பு சக்தி குறைவு என்பதாகவும் ரத்தத்தின் மூலமாக நோய் பரவியது என்பதாகவும் படத்தில் காட்டியிருப்பார்கள். 

அதேபோல சூது கவ்வும் படத்திலும் ஒரு வித்தியாசமான நோயை காட்டி இருப்பார்கள்.  நிஜத்தில் இல்லாத ஒரு பெண்ணை கற்பனையாக நினைத்துக்கொண்டு அந்தப் பெண்ணுடன் சண்டை போடுவார் கொஞ்சுவார்  விஜய் சேதுபதி. அது சுற்றி இருப்பவர்களுக்கு வேடிக்கையாக தெரியும். 

V1 படத்தை எடுத்துக்கொள்வோம்.   அந்தப் படத்தில் நாயகன் போலீசாக இருப்பார் இருந்த போதிலும் அவருக்கு இருள் என்றால் பயம் இருளைக் கண்டு மயங்கி விழுந்து விடுவார்.  இது ஒருவகையான மனநோய் என்று படத்தில் காட்டியிருப்பார்கள். அதேபோல டாப்ஸி நடித்த கேம் ஓவர் திரைப்படத்திலும் இதை ஒரு மனநோயாக காட்டியிருப்பார்கள்.  கேம் ஓவர் படத்திலும் டாப்ஸி இருளுக்குள் தனியாக மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் V1 நாயகனை போலவே பதற்றமாக மயங்கி விழுந்து விடுவார். 

அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் கனவு காண்பது நிஜத்தில் நடப்பது போன்ற ஒரு நோயை காட்டியிருப்பார்கள்.  ஓ காதல் கண்மணி படத்தில் பரதநாட்டிய பெண்மணிக்கு தீவிரமான ஞாபக மறதி நோய் இருப்பதாக காட்டியிருப்பார்கள். ஹரிதாஸ் படத்தில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காட்டியிருப்பார்கள்.  இப்படி வித்தியாசமான பல நோய்களை காட்ட தொடங்கியுள்ள தமிழ் சினிமா அந்த நோய்களுக்கான தீர்வுகளையும் தெளிவாகச் சொன்னால் பார்வையாளர்கள் பெரிய பயனடைவார்கள். 

Related Articles

ஹைதராபாத் என்கவுன்டரை கொண்டாடும் திரைப் ... 1.நடிகர் சதீஷ் :மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்... அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வரு...
2018ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்!... கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வருடத்திற்கு நூறு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அசால்ட்டாக இருநூறு படங்கள் ரிலீஸ் ஆகிறது....
“வீடுகள் பெருகுகிறதே தவிர காடுகள் ... ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வீடுகள் வளர்கிறதே தவிர காடுகள் வளர்ந்த பாடில்லை. காடுகள் தினம் ...
மூடப்பட்டு வரும் சினிமா தியேட்டர்கள்? தி... துருப்பிடித்துப் போன இரும்புக் கேட்டுகள், வெள்ளை படிந்து போன ஜன்னல் கண்ணாடிகள்,  புழுதிகளும் பறவை எச்சங்களும் நிறைந்த, சாயம் இழந்துபோன தியேட்டர் சுற்ற...

Be the first to comment on "வித்தியாசமான நோய்களை காட்டிய தமிழ் சினிமா!"

Leave a comment

Your email address will not be published.


*