இந்த உலகத்திற்குப் புதிதாக வரும் குழந்தைகளை நாம் எப்படி வரவேற்க வேண்டும்?

How should we welcome children who are new to this world_

முதலில் குழந்தைகளின் பிறப்பை மிக உணர்ச்சி பூர்வமாக அழகாக காட்டிய தமிழ் சினிமாக்களை படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம். 

எம். எஸ். தோனி: 

மகேந்திர சிங் தோனியின் பிறப்புக்காக அவருடைய அப்பா மருத்துவமனையில் பதட்டத்துடன் நிற்கிறார். அப்போது அவரருகே வரும் மருத்துவர், உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்கிறார்.  அதைக்கேட்ட தோனியின் அப்பா…  என்னது பெண் குழந்தையா என்று கேட்கிறார்.  நர்சு ஆண் குழந்தை என்று சொன்னார்கள் என்று அவர் சொல்ல மருத்துவர் குழம்பிப்போய் நர்சிடம் விசாரிக்கிறார்.  நர்ஸ் பிறந்தது ஆண் குழந்தைதான் என்று தெளிவாக சொல்ல இப்போது மருத்துவர்  டோனி அப்பாவிடம் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்கிறார். கொஞ்ச ஏமாந்து இருந்திருந்தால் என் பையன் வேற ஒருத்தனுக்கு கொடுத்திருப்பாங்க என்று சொல்லும் அப்பாவிடம் அந்த ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து  கொடுக்கிறார் நர்ஸ். அந்த குழந்தையை ஆசையாக தொட்டு பார்க்கிறார் அவருடைய அப்பா.  அவருக்கு அப்போது தெரியவில்லை டோனி இந்த இந்தியாவையே கலக்கக்கூடிய மனிதராக வருவார் என்று. 

இதே மாதிரியான சம்பவம் ஜாக்கி சான் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. எல்லோரும் பத்து மாதங்களில் தான் இருப்பார்கள் ஆனால் ஜாக்கிசான் எட்டு மாதங்களிலேயே அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்து விட்டாராம். அவருடைய அழகைப் பார்த்து ரசித்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் மாறி மாறி இந்த குழந்தையை எங்களுக்கு கொடுத்து விடுகிறீர்களா என்று அவருடைய பெற்றோர்களிடம் கேட்டார்களாம்.  அப்படிப்பட்ட குழந்தை உலக அளவில் கலக்கு கலக்கு என்று கலக்கினார். 

இயக்குனர் ஷங்கர் படங்கள்: 

நண்பன் படத்தில் இடி மின்னலுடன் பெருமழை கொட்டிக் கொண்டிருக்க சாலையில் வெள்ளப்பெருக்கு ஓடும். பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் தன் மகளை மருத்துவமனைக்கு காரில் ஏற்றி அழைத்துச் செல்ல முயற்சி செய்வார் சத்யராஜ்.  ஆனால் முடியாது. அவருடைய மாணவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து  தங்களுடைய பொறியியல் அறிவை பயன்படுத்தி  மிகுந்த சிரத்தை எடுத்து  பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தையை அவ்வளவு பத்திரமாக வெளியே எடுப்பார்கள். அந்தக் குழந்தை வெளியே வந்ததும்  உடனே அழவும் செய்யாது சிரிக்கவும் செய்யாது.  விஜய் சொல்லும் ஆல் இஸ் வெல் ஆல்வேஸ் வெல் என்ற வார்த்தையை கேட்டதும் விஜயின் நெஞ்சில் எட்டி உதைக்கும் அந்தக் குழந்தை. 

இதேபோல இயக்குனர் சங்கரின் எந்திரன் படத்திலும் ஒரு பிரசவ காட்சி உள்ளது. தேவதர்ஷினி பிரசவ வலியில் துடிப்பார்.  அவருடைய இக்கட்டான சூழலை டாக்டர் விவரிப்பார்.  குழந்தையின் தலை திரும்பி, தலையில் கொடி சுற்றி  தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு  இரண்டு உயிரில் ஏதாவது ஒரு உயிரை காப்பாற்றுவதே கஷ்டம் என்று மருத்துவர் சொல்லிவிடுகிறார். 

அப்போது ரோபோ சிட்டி நான் முயற்சி பண்ணட்டுமா என்று கேட்கிறார்.  மருத்துவரோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் முடியவே முடியாது,  அனுபவசாலி மருத்துவர்களாலயே இந்த காரியத்தை செய்ய முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். சிசேரியனுக்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவிக்கிறார். ரோபோவோ சிசேரியன் தேவை இல்லை, சுகப்பிரசவமே நடக்கும் என்கிறது. தொடர்ந்து ரோபோ சிட்டியும் என்னால் கண்டிப்பாக காப்பாற்ற முடியும் என்று ஆணித்தரமாக சொல்கிறது.  தேவதர்ஷினி அலறிக் கொண்டிருக்க சத்தம் போடாதீங்க பையன் பயப்படுறான் என்று சொல்லும் ரோபோ.  அவரும் உடனே அழுகையை நிறுத்திக் கொள்ள ரோபோ குழந்தையின் தலையை மெதுவாக திருப்பி கொடிகளை விளக்கி வைத்து இடுப்பு எலும்பை மெல்ல விரித்து விட்டு அதன் மூலம் குழந்தையை வெளியே எடுக்கும். அந்தக் குழந்தை தாயின் வயிற்றுக்குள்ளயே பல சிரமங்களை சந்தித்து விடும்.  அந்தக் குழந்தை பல தடைகளைத் தாண்டி இந்த உலகிற்கு வரும் பிரசவ காட்சியை  எல்லா தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்வார்கள். அதை மக்கள் வியந்து பார்ப்பார்கள்.  பையன் உங்கள மாதிரியே இருக்கான் என்று சொல்லும் சிட்டி அதை தன் கையில் ஏந்தி வெல்கம் என்று இந்த உலகிற்கு வரவேற்க்கும். 

2.O படத்தில் பக்ஷிராஜன் அவர்களின் பிறப்பை விவரிக்கும் காட்சி மிக அருமையாக இருக்கும்.  குழந்தை பிறந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கும். உடல் முழுக்க நீலம் பரவியிருக்கும்.  குழந்தை வயிற்றுக்குள்ளேயே செத்து பிறகு பிறந்துள்ளது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டு சென்று விடுவார்கள். இறப்பு சான்றிதழை அவர்கள் தயார் செய்ய இருப்பார்கள். 

அந்தக் குழந்தையின் தாயும் பாட்டியும் மனம் உடைந்து போவார்கள்.  அப்போது ஜன்னல் வழியாக ஒரு சிட்டுக்குருவி பறந்து வரும்.  அந்த குழந்தையின் நெஞ்சில் வந்து அமரும்.  தன் சின்ன அலகால் அந்த சின்ன நெஞ்சில் பட் பட் என்று கொத்தும்.  சரியாக மூன்றாவது கொத்தில் அந்த குழந்தை உயிர் பிழைத்துக் கொள்ளும். உயிர் வந்து குழந்தை அழ தொடங்க அந்த குழந்தையின் தாயும் பாட்டியும் மகிழ்வார்கள். 

மேற்கண்ட இந்த படங்களில் ஒரு குழந்தையை கையில் வாங்குவதற்காக பெற்றோர்கள் எப்படியெல்லாம் தவிக்கிறார்கள்? ஒரு குழந்தை இந்த உலகத்திற்கு புதிதாக அடி எடுத்து வைப்பதற்குள் எவ்வளவு பிரச்சினைகளை சந்திக்கிறது? என்பது எல்லாம் ரொம்ப உணர்வுப்பூர்வமாக காட்டியிருப்பார்கள். 

குழந்தைகள் வீட்டுக்கு ஒளியூட்டுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் வெளிச்சத்தை அணைத்து விடுவதில்லை. –  அறிஞர் ரேல்பால், “இந்த உலகத்திற்குப் புதிதாக வரும் ஒவ்வொரு குழந்தைகளும் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கிறது” – அழகு குட்டி செல்லம் படத்தில் வரும் வரிகள் இவை. இந்த மேற்கோள்களில் சொல்லப்பட்டிருக்கும் வரிகளைப் போல உண்மையிலேயே குழந்தைகள் பலருடைய வாழ்க்கையில் வெளிச்சமாக இருக்கிறார்கள். இந்த வரிகளுக்குத் தகுந்த மாதிரியான சில காட்சிகளும் நம் தமிழ் சினிமாவில் தமிழ் படைப்புகளில் வந்துள்ளது அவற்றைப் பற்றி பார்ப்போம். 

இயக்குனர் பாலுமகேந்திராவின் “சந்தியா ராகம்”  படத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள். அந்த படத்தில் நாயகனாக இருக்கும் தாத்தாவிற்கும் அவருடைய மருமகளுக்கும் சின்ன சின்ன மன சங்கடங்கள் உருவாகி கடைசியில் இருவரும் பிரிந்து விடுவார்கள்.  தாத்தா கோபித்துக்கொண்டு முதியோர் இல்லத்தில் போய் சேர்ந்து கொள்வார். அவருடைய மருமகள் குற்ற உணர்வால் வருந்தி அந்த தாத்தாவை தேடி வீட்டிற்கு வரச் சொல்லி அழைப்பார். ஆனால் தாத்தா வரவே மாட்டார். தன் மருமகளுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்ற தகவல் கேட்டதும் தனக்குள் இருக்கும் அந்த மன சங்கடங்களை எல்லாம் தூக்கி ஓரமாய் வைத்துவிட்டு மிகுந்த ஆவலோடு மருத்துவமனையை நோக்கி ஓடுவார். உள்ளே போனதும் அந்த மருமகள் அருகே அந்தக் குழந்தை அழகாக சிரித்துக் கொண்டே இருக்கும். குழந்தை அருகே சென்று குழந்தையின் பிஞ்சு விரல்களுக்குள் தன் விரலை நுழைப்பார். அந்தப் பிஞ்சுக் குழந்தை தன் தாத்தாவை இறுக்குமாகப் பிடித்திருக்கும். அதோடு படத்தை முடித்து இருப்பார் இயக்குனர் பாலுமகேந்திரா. அதேபோல அழகு குட்டி செல்லம் படத்தை எடுத்துக்கொள்வோம். அந்தப் படத்தில், ஒரு பிராமின் வீட்டில் புதிதாக பிறந்திருக்கும் குழந்தை. அந்த குழந்தையின் தகப்பன் கூட வந்து பார்க்காமல் இருப்பான். அந்த அளவுக்கு கணவனுக்கும் மனைவிக்கும் அவர்களுடைய இரண்டு குடும்பங்களுக்கும் பிரச்சனைகள் இருக்கும். அந்தக் குழந்தையின் தகப்பன் திடீரென ஒருநாள் அந்த குழந்தை வீட்டிற்குச் சென்று தன் குழந்தையை கையில் வாங்குவான். கையில் வாங்க, அடுத்த கணம் அவனுக்குள் இருந்த மனைவி மீதான கோபம் முற்றிலுமாக மறந்து கண்ணீர் சுரந்து வரும். 

நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் “பையன் பொறந்தாச்சு” என்கிற வீடியோவை பார்த்து இருக்கிறீர்களா? அதில் பிரசவ அறைக்கு முன்பு அந்தத் தகப்பன் தவியாய் தவித்துக் கொண்டிருப்பான். குழந்தை சத்தம் கேட்டதும் உற்சாகத்துடன்  பிரசவ அறை முன்பு நிற்கும் அந்தத் தகப்பன் குழந்தையை கையில் வாங்கியதும் நெகிழ்ந்து போவான்.  குழந்தையை கையில் வாங்குவதற்கு முன்பு வரை அதை ப்ளாக் அண்ட் ஒயிட்டில் காட்டி இருப்பார். “பையன் பொறந்தாச்சு” என்ற வீடியோவின் இயக்குனர்.  அந்த தகப்பன் கையில் குழந்தையை வாங்கியதும் சட்டென அந்த தருணத்தை கலராக மாற்றுவார்கள். அதே போல தான் நம் கையில் குழந்தையை முதல் முறையாக வாங்கும் போது, நம் வாழ்க்கை முற்றிலுமாக வண்ணமயமானதாகவும், நம்பிக்கை மிக்கதாகவும் மாறிவிடுகிறது. இப்படி ஒரு குழந்தை பல மனிதர்களை சேர்த்து வைக்கிறது. பல மனிதர்களின் வாழ்க்கைக்கு நம்பிக்கை ஒளியாக மாறி விடுகிறது. பல மனிதர்களின் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு குழந்தையை நாம் எப்படி இந்த உலகத்திற்கு கொண்டு வருகிறோம். “மா” என்கிற குறும்படம் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தில் ஒரு குழந்தையை பயத்துடனும் வெறுப்புணர்வுடனும் இந்த உலகத்திற்குக் கொண்டு வரக்கூடாது என்று சொல்லியிருப்பார்கள். 

ஆனால் உண்மையில் நாம் குழந்தையை அப்படியா இந்த உலகத்திற்கு கொண்டு வருகிறோம்? அந்த படத்தில் சொன்னதுபோல பயத்துடனும் வெறுப்புணர்வுடனும் தானே குழந்தையைக் கொண்டு வருகிறோம். 2020வது காலகட்டத்திலும் கூட பெண் குழந்தை பிறந்து விட்டால் “அட பிள்ளையா போச்சு” என்று மனம் வருந்துகிறார்கள். இதில் நல்ல நேரம் பார்த்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சம்பிரதாய அறிவுறுத்தல்கள் வேறு, அந்த குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடிய பெற்றோர்களை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இவர்களை கூட விட்டு விடலாம். ஆனால் இந்த “ஆதலால் காதல் செய்வீர்” படத்தில் வருவதைப் போலவே நல்ல சுகம் கண்டுவிட்டு குழந்தையை பெற்றெடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, ஆளாளுக்கு வெவ்வேறு திசையில் பிரிந்து செல்லும்போதுதான்… மிகுந்த மன உளைச்சலை தருகிறது. அதாவது பரவாயில்லை. இந்த கருவுறாமல் இருக்கும் பெண்களிடம் போய் சும்மா சும்மா சுரண்டி சுரண்டி கேட்பதுபோல் “மாசமா இருக்கியா” என்று திரும்ப திரும்ப கேட்டு தீவிர மன உளைச்சலுக்கு அந்த பெண்களை தள்ளிவிட்டு, கடைசியில் இந்தக் குழந்தையை எப்படியாவது பெற்றுக் கொள்ளனும்பா சாமி என்ற மனநிலையுடன் குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர் இன்றைய பெண்கள். உண்மையில் சந்தோச மனநிலையுடன் குழந்தை பெற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பது தான் மறைக்க முடியாத உண்மை. 

“குழந்தையும் மலரும் செழிப்புள்ளவை. அவற்றை மென்மையாகக் கையாள வேண்டும்” – முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு

அப்படிப்பட்ட பூக்களை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களிடம் சென்று “மாசமா இருக்கியா… மாசமா இருக்கியா…” என்று நச்சரிப்பதை விட்டுத் தொலையுங்கள். 

Related Articles

ஜூன் 12 – குழந்தை தொழிலாளர்கள் எதி... உலகம் முழுக்க ஜூன்12ம் தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பத்து லட்சமாக இரு...
ஜூலை 23 – காப்பான் பிறந்தநாள்! ... காப்பான் படம் நடிகர் சூர்யாவும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்தும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் அயன், மாற்றான் படங்களில் இணைந...
பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய த... பிள்ளை வளர்ப்பு என்பதைப் பற்றி இன்னமும் சில பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அதை எதோ ஒரு தொந்தரவுக்கு உரிய செயலாகவே பார்க்கின்றனர். அப்படிபட்ட பெற்றோர்கள்...
ஆதித்ய வர்மா தமிழ் சமூகத்துக்கே கேடு! &#... தயாரிப்பு : E4 என்டர்டெயின்மென்ட்தயாரிப்பாளர் : சுரேஷ் செல்வராஜன்இயக்கம் : கிரிஸ்சேய்யாகதை : சந்தீப் ரெட்டிஒளிப்பதிவு : ரவி கே சந்திரன...

Be the first to comment on "இந்த உலகத்திற்குப் புதிதாக வரும் குழந்தைகளை நாம் எப்படி வரவேற்க வேண்டும்?"

Leave a comment

Your email address will not be published.


*