பல பண்டிகைகள் நாம் கொண்டாடினாலும் தீபாவளிப் பண்டிகைக்கு தனி சிறப்பு உண்டு. தீபாவளித் திருநாள் அன்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி எல்லோரும் எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றி கொண்டாடுகிறோம். புராணத்திலேயே இதற்குச் சான்று உள்ளது.
தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. மனிதன் துன்பத்திலிருந்து விடுபட கடுமையான விரதங்கள் இருக்கிறான். இத்தகைய உடலை வருத்தி செய்யும் தவங்களினால் மட்டுமே மனிதனால் துன்பத்திலிருந்து விடுபட முடியுமா? மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சுலபமான வழி கிடையாதா? இதுவே தீர்க்கதமஸ் முனிவருக்கு ஏற்பட்ட சந்தேகம்.
சனாதன முனிவரிடம் சென்று தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யுமாறு வேண்டினார். சனாதன முனிவர் சிவ பெருமானின் சீடர். பிரம்மாவின் மானசீக புதல்வர். அனைத்தும் அறிந்தவர்.
இதற்கு பதிலளித்த சனாதனர், “கடுமையான விரதங்கள் மட்டுமின்றி இறைவனின் பேரருளை பெறுவதற்கு எளிமையான வழிகளையும் நமது வேதங்கள் தந்திருக்கின்றன. துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் நரக சதுர்த்தசி அன்று தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம்” என போதித்தார்.
“தீர்க்கதமஸ்” முனிவருக்கு “எதற்காக தீபாவளிப் பாண்டிகையை எண்ணை ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, விளக்கேற்றி கொண்டாட வேண்டும்” என்ற சந்தேகம் வந்தது.. அதற்கு சனாதனர் எடுத்துரைத்த தீபாவளிப் பண்டிகையின் உட்கருத்து இதோ:
“ எள் புனிதமான ஒன்று. அதிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணையில் மகாலட்சுமி இருக்கிறாள். நாம் எண்ணை ஸ்நானம் செய்ய உபயோகப்படுத்தும் அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை மிக்க சந்தனத்தில் பூமா தேவியும், மஞ்சள் கலந்த குங்குமத்தில் கௌரி தேவியும் நிறைந்திருக்கிறார்கள்.
மேலும், தீபாவளி அன்று நீர் நிலைகளில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், தீபாவளி மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பதார்த்தங்களில் அமிர்தமும், மலர்களில் யோகினியும் வசிக்கிறார்கள். தீபச்சுடரில் பரமாத்மாவும், பட்டாசு தீப்பொறிகளில் ஜீவாத்மாவும் தோன்றுகிறார்கள்.
மேலும், தீபாவளி அன்று நாம் நீராடும் நீரிலும் கங்கா தேவி வாசம் செய்கிறாள். “ஜலே கங்கே தைலே லக்ஷ்மி” என்று குறிப்பிடுவர். அதனால் தான் தீபாவளி அன்று “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
எண்ணை தீய்த்திக் குளிப்பதால் உடல் மாசு நீங்குகிறது. இறைவனை வழிபடுவதால் உள்ளத்து மாசு களையப் படுகிறது. இதுவே தீபாவளி அன்று எண்ணை ஸ்நானம் செய்வதன் உட்கருத்து.
எனவே தான், தீபாவளி அன்று அனைத்து கடவுள்களையும் வணங்கும் விதமாக, எண்ணை தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, மலர்களாய் இறைவனை அலங்கரித்து, இனிப்பு பட்சணங்கள் நிவேதனம் செய்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாட வேண்டும்.
Be the first to comment on "தீபாவளிப் பண்டிகை அன்று எண்ணெய் ஸ்நானம் செய்வது எதற்காக?"